Author: ந.குணபாலன்
•3:52 PM
ஐயே!

அப்பா! என்னைப் பெத்தவன்! அவனை நினைக்கின்ற தருணங்கள் ஒவ்வொண்டும் இன்பமும் துன்பமும் கலந்தே என்னை ஆட்டுவிக்கும். அவனது அன்பை நினைச்சுச்  சந்தோசமும், அவனது பிரிவை நினைச்சால் துக்கமுந்தான். ஆள் என்ன கொஞ்சம் கொதியன் தான். சரியான சுடுதண்ணி. ஆனால் அந்தக் கொதிக்குணத்துக்குப் பின்னாலை இருந்தது அவ்வளவும் சரியான பட்சம். பிள்ளைகள் எண்டு என்னிலையும் என்ரை சகோதரங்களிலையும் இனிமேல் இல்லை எண்ட வாரப்பாடு.

எங்களுக்கு ஒரு சின்னக் காயம் வந்திடக் கூடாது. ஒரு தலையிடி காய்ச்சல் சுகயீனம் எண்டு பிள்ளைகள் நாங்கள் முகஞ்சிணுங்கிடக் கூடாது. அவனாலை தாங்க ஏலாது. ஆயிரத்தெட்டுத் தரம் "காளியம்மாளே! காளியம்மாளே!" எண்டு சொல்லி அடிக்கடி ஏமஞ்சாமம் பார்க்காமல்  நித்திரைப்பாயிலையும் வந்து தொட்டுத் தடவிப் பார்ப்பான். காய்ச்சல் விட்டுக் குணப்பட்ட உடனை  முதல் வேலையாய் காளியம்மாள் கோயிலுக்கு கற்பூரக் கட்டி வாங்கிக் கொண்டு போய்  கொளுத்திக் கும்பிட வைப்பான். ஒருக்கால் எங்கடை வளவுக்குள்ளை ஆருடையதோ தெரியயேல்லை தெருவாலை மேயப் போற ஆடொண்டு உள்ளிட்டு தென்னம்பிள்ளையைக் கடிச்சுப் போட்டுது. கலைச்சுத் துரத்திக் கொண்டு போய் எட்டிப் பின்னங்காலைப் பிடிச்சிட்டன். ஆனால் என்ன ஒண்டு!, நான் வளவுக்குள்ளே, ஆடு தெருவிலே, இடையிலே முள்ளுக்கம்பி வேலி! ஆடு பின்னங்காலை ஒரு உதறு உதற   என்ரை  கையை முள்ளுக்கம்பி பதம் பார்த்தது. எனக்குப் பீச்சல் பயமாகிப் போச்சுது. அதொண்டும் அந்தக் கறள் கம்பி குத்தின காயத்தை நினைச்சு இல்லை. எக்கணம் அப்பாவின்ரை கண்ணிலே பட்டாலும் எண்ட பயந்தான். அந்தக் காயத்தில் நல்லாக வாயை வைச்சு அரத்தத்தை உறிஞ்சி எடுத்துத் துப்பினன். பத்தும் பத்தாததுக்கு அம்மா வந்து நோகநோகக் காயத்தைப் பிதுக்கி அரத்தத்தைத் துடைச்சார். பேந்து எதோ ஒரு மருந்தை வைச்சு கட்டிவிட்டார். அம்மாவும் கறள் கம்பி எண்ட  அளவிலே இடாக்குத்தரிடம் போய் ஏர்ப்புவலி வராமல் இருக்க ஊசி போடவேணும் எண்டு சொன்னவர்.
" அப்பா வந்து கண்டானெண்டால் சத்தம் போடப்போறான். நீ ஏனடா முள்ளுக்கம்பிக்குள்ளை கையை விட்டாய்?"
 அப்பா அடிக்கப் போகிற கூத்தை நினைச்சு அடிக்கொருதரம் கவலைப் பட்டார். அம்மாவும் நல்ல அன்பானவர் தான். ஆனால் அப்பாவைப் போலை உருகிவழியிறதில்லை.

"அப்பா வேலையால் களைச்சு விழுந்து வருவான். அவன்ரை கண்ணில் படுமாப்போலை முன்னடிக்கு  வந்து நில்லாதே! வந்த மனிசன் சாப்பிட்டுக் களையாறின பிறகு விசயத்தைச் சொல்லி இடாக்குத்தரிட்டை போகலாம்." எண்டு அம்மா படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தார். நானும் மண்டிக் கொண்டு அடுப்படிக்குள்ளையும், சாமியறைக்குள்ளையும் பின்வளவுக்குள்ளையும் மாறிச்சாறி மறைப்பிலை  இருந்தன்.   பின்னேரப்பாட்டுக்கு அப்பா வேலையாலை வந்தான். அந்த நேரம் பார்த்து மாமியும்  வந்திருந்தார்.
" இவன் நடராசன் வந்து எக்கணம் ஆத்தையரே! தாயாரே! எண்டு கத்தப் போறானே! இண்டைக்குத் திருவிழாத்தான் " எண்டு தன்ரை  பங்குக்குப் பயமுறுத்தினார். கிணற்றடிக்குப் போய் கால்மேல் கழுவி சாமியறைக்குப் போய் விபூதி சாற்றிக் கொண்டு வந்த அப்பா என்னமோ நினைச்சுக் கொண்டு  
"தம்பி மோனை பாலய்யா!" எண்டு என்னை கூப்பிட்டான். நெஞ்சு பக்குப்பக்கென்று அடிக்க முன்னுக்கு வந்தன். அடக் கடவுளே! உந்தக் கந்தறுந்த காயம் அவன் கண்ணில் பட்டுவிட்டுது.

" ஐயோ! எடேய் மோனை என்னடா  நடந்தது? இஞ்சருங்கோ மச்சாள், தம்பிக்கு என்னெண்டு காயம் வந்தது?" எண்டு குரையைவைச்சான்.
"கொஞ்சம் கத்தாமல் இருக்க மாட்டியே? ஏனடா இப்பிடிக் குரையை வைச்சு ஊருக்கெல்லாம் விளம்பரம் வைக்கிறாய்?" எண்டு அம்மா அதட்டினார்.
"அது முள்ளுக்கம்பி குத்திப் போட்டுது. இடாக்குத்தரிடம் போய் ஏர்ப்பூசி போடத்தான் வேண்டும். ஆனால் முதலிலை பறையாமல் சோற்றைச் சாப்பிட்டுவிட்டுக் கூட்டிக் கொண்டு போ" எண்டு அம்மா சொன்னார்.
"சோறும் , மண்ணாங்கட்டியும். சும்மா இருங்கோ மச்சாள்! முதலிலே இடாக்குத்தரிடம் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போய் ஊசி போடுவிக்க வேணும்." என்று அந்தரப்பட்டான்.
"இவன் ஒருத்தனோடை  இருக்க, நிற்க வழியில்லை. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு  அடம் பிடிப்பான்." அம்மா அலுத்துக் கொண்டார்.
"அவன் அங்கை வெளிக்கிடட்டும். அதற்கிடையிலே சோற்றை குழைச்சுக் கவளமாகத் தாறன், சாப்பிடடா!" அம்மா கெஞ்சிக் கேட்டார்.
"இல்லையுங்கோ மச்சாள் என்னைத் தெண்டிக்காதையுங்கோ. எனக்கு மனசில்லை!" எண்டு அப்பா மறுத்தான்.

எங்கடை மாமியாருக்கு, அப்பான்ரை தங்கச்சியாருக்கு அப்பாவின் நடப்புக்களைப் பார்த்து எரிச்சல் கிளம்பினது.
" இவன் ஒருத்தன் மட்டும்தான் கண்டறியாத பிள்ளைகளைப் பெத்து வளர்க்கிறான். ஏன் ஊருலகத்திலே வேறே ஒருத்தரும் பிள்ளைகளைப் பெத்து வளர்க்கவில்லையாமே? பிள்ளைகள் எண்டால் சும்மா என்ன பாவைப்பிள்ளைகளே, பிடிச்சு வைச்ச பிள்ளையார் போலே இருக்கிறதுக்கு? ஓடி, ஆடி விளையாடேக்கை காயம்,கீயம் வருந்தானே? சத்தம் போடாமல் போய் மருந்தைக் கட்டுவிச்சுக் கொண்டு வாவனடா!"எண்டு புறுபுறுத்தார்.

இடாக்குத்தரிட்டை போறவழியிலை
"நல்லா நோகுதோ மோனை?" எண்டு மயிலிறகாலை தடவுமாப் போலை அன்பா இதமாய் கேட்டான்.
"இல்லை அப்பா" எண்டன்.
"ஊசி போட வேணும். பயமாய்க் கிடக்கோ?"
"இல்லையடா! நீ தானடா சரியாப் பயப்பிட்டுக் குழறிப் போட்டாய்!"
"என்ன செய்யிறது மோனை? உங்களுக்கு ஒண்டெண்டால் என்னாலை தாங்கேலாமல் கிடக்கு."



ஐயே! இதுக்கு மிஞ்சி என்னாலை இந்தப் பாணியிலை எழுத ஏலாது!
ஈழத்தமிழ் உறவுகளே! உங்கள் சிந்தனைக்குச் சில:

ஏன் இந்தியக் எழுத்தாளர்களைப் பின்பற்றி;
தாயை, மற்றும் வயது மூத்த பெண் உறவினரைக் குறிப்பிடும் போது
"அம்மா கடிதம் எழுதினாள்.
அக்கா பாடம் சொல்லிக் கொடுத்தாள்.
பாட்டி கதை சொன்னாள். "
என்று பெண்பால் வினைமுற்றுச்சொல் வைத்து மரியாதையீனமாக எழுத என்று வரும்போது குறிப்பிடுகிறீர்கள்?
உங்கள் பேச்சு வழக்கில்
"அம்மா கடிதம் எழுதினா/எழுதினாவு
அக்கா பாடம் சொல்லிக் குடுத்தா/குடுத்தாவு .
பாட்டி கதை சொன்னா/சொன்னாவு. "என்றுதானே மரியாதையாகக் கதைக்கின்றீர்கள்?
ஒன்று மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
"எவுடி அவ?" என்ற திரைப்பட வசனத்தைக் கேட்ட பின் அவ என்று குறிப்பிடுவது  அவமரியாதையான சொல் என்று ஆகிவிடாது. அவள் என்பது தான் எங்கள் இயல்பான பண்புக்கு ஏற்காதது.
வயதில் இளைய பிறத்திப் பிள்ளைகளை, அறிமுகம் அதிகமில்லாத பிள்ளைகளை நீங்கள் போட்டுப் பலர்பால் வினைமுற்றுச்சொல் வைத்து மரியாதை கொடுத்துக் கதைப்பது எங்களில் பலரது பழக்கம். அதே போல
" பிள்ளை! கொப்பா வீட்டிலை நிற்குதோ?"
"அக்கா சட்டை தைச்சிட்டுது"
"அண்ணா தோட்டத்தாலை வந்தது, இப்ப கடைக்குப் போட்டுது" என மரியாதையான வடிவத்தில் தான் அங்கே ஒன்றன்பால் வினைமுற்றுச்சொல் பாவிக்கப் படுகிறது. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? பேச்சுவழக்கில் புழங்கும் மரியாதைச் சொற்களை உங்கள் எழுத்துக்கும் கொண்டு வாருங்கள்.
" அம்மா தேநீர் போட்டு தந்தாள் "என்பதை விட,
" அம்மா தேநீர் போட்டுத் தந்தா" என்பதும்
" அம்மா தேத்தண்ணி போட்டுத் தந்திச்சுது "என்பதும் எனக்கு இயல்பானதாகப் படுகின்றது.

பலநாட்களாக என் மனத்தில் இடறியபடி இருந்த கருத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

அன்புடன்
ந. குணபாலன்



Author: வர்மா
•8:16 PM


கொங்குதேர் வாழ்க்கை அரசரத்தும்பி
காமஞ்செப்பாது, கண்டது மொழிமோ
பயிரிய கெழி இய நட்பின் மயிலியல்
செறி யெற்று சரிவை கூந்தலின்
நரியவும் உளவோ நீ அறியும் பூவே

 இது குறுந்தொகை என்றசங்கப்பாடலில் இடம் பெற்றுள்ளது. இதனை எழுதியவர் இறையனார் எனக்கருதப்படுகிறது.

மேற்கண்ட பாடலின் சொல் விளக்கத்தை இவ்வாறு கூறலாம்.
கொங்குதேர் வாழ்க்கைத்தேனைத் தேர்ந்தெடுத்து சுவைக்கும் அழகான சிறகுகளை உடைய தும்பிபோல எதனையும் தேர்ந்தெடுத்து ஆராயவேண்டும்.

காமஞ் செய்யாது கண்டது விருப்பு வெறுப்பற்ற விதத்தில் கூறுவாயோ

பயரிய‍  - -- பயிலுதல்
கெழிய  -  --இறுக்கமான
மயிலியல்- மயில் போன்ற சாயல்
அரிவை --  பெண் கூந்தலிலும் பார்க்க
நறியவும்-  நறுமணம் கலந்த

நீஅறிந்த பூக்களிலும் பார்க்க நறுமணம் உண்டோ?

கே.எஸ்.சிவகுமாரன்

சுடர் ஒளி

21/01/14
Author: யசோதா.பத்மநாதன்
•12:56 AM
நம்பிக்கையில் இயங்குகிறது உலகம்.

சோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?

உலகத்தின் பழம் பெரும் பண்பாடுகள் பலவற்றிலும் அத்தகைய நம்பிக்கைகள் பலவாறாக இருந்தன இன்னமும் இருக்கின்றன.

ஜனவரி ஒன்று ஆங்கிலப் புது வருடம்.

ஜனவரி 31ல் 2014க்கான புது வருடம் ஆரம்பிக்கிறது சீனருக்கு.




ஜனவரி 14ல் தமிழராகிய நமக்கு தைத்திங்கள் முதல் திகதி. ஆனால் ஏப்பிரல் 14 நமக்கான புது வருடமாகக் கணிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


சந்தோஷமாக வாழப்பிரியப்படும் மனிதர்களிடம் சோதிட நம்பிக்கையும்  நாட்காட்டிக் கணிப்பீடுகளோடு தோற்றம் பெற்றது.





எதிர்வு கூறல்களும் எதிர்காலம் கணிப்பிடலும் அவ்வகைப்பட்டவையே.அது நாட்டுக்கு நாடு பண்பாட்டுக்கு பண்பாடு தனக்கான தனித்துவங்களோடு விளங்குகின்றன.


நாடுகள் பலவும் அவற்றை அங்கீகரித்து நாட்டின் சிறப்பாக; தம்முடய வளங்களில் ஒன்றாக அரச முத்திரைகளை வெளியிட்டு அவற்றை அங்கீகரித்திருக்கிறன. அந்த முத்திரையின் படங்களையே இப்பதிவில் ஆங்காங்கே காண்கிறீர்கள்.




எண் சோதிடம்,கைரேகை சாஸ்திரம் என்பவற்றோடு ஒரு குழந்தை பிறந்த அந்த துல்லியமான நேரத்தை வைத்து பிள்ளையின் எதிர்காலத்தைக் கணிப்பிடும் முறை நம் பழந்தமிழ் பண்பாட்டில் இருக்கிறது.



சீனரிடம் புத்தபகவான் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ஒரு வித சோதிட நம்பிக்கை உண்டு. அது 12 மிருகங்களின் பெயரால் அழைக்கப்படுவதோடு  மரம். நெருப்பு, பூமி,உலோகம், நீர் ஆகிய 5 அடிப்படைகளில் இயக்கம் பெறுகிறதாக நம்புகிறார்கள். (அது பற்றி விபரமாக பின்னர் ஒரு தடவை பார்ப்போம்.)



அவுஸ்திரேலியர்களிடம் இன்னொரு விதமான சோதிட நம்பிக்கை உண்டு. அது 4 மூலக்கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.அது பூமி, நீர், காற்று நெருப்பு ஆகியவையாகும். இவை 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு மாத, திகதி அடிப்படையில் அவரவருக்கான இயல்புகள் சொல்லப்படுகின்றன.


பூமியும் நீரும் அது போல காற்றும் நெருப்பும் ஆகிய கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவர் என்றும்: மாறாக நீரும் நெருப்பும் காற்றும் நிலமும் ஆகிய மூலக் கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் பட்டுக் கொள்ளாமல் இருப்பர் என்றும் அவுஸ்திரேலிய சோதிட நம்பிக்கை கருத்துச் சொல்கிறது. ( நீர் பெருக நிலம் தேவை: நிலம் நீரால் செழுமை பெறும். நெருப்பு பரந்து விரிய காற்றுத்தேவை. பூமிக்கு காற்றால் எது பயனும் இல்லை. அது போல நீருக்குக் காற்றாலும் பயனெதுவும் விளைவதில்லை. மனிதப் பிரிவுக்குள்ளும் அதுவே அடிப்படை என்கிறது இவர்களது சோதிட ஞானம் மற்றும் நம்பிக்கை.



அந்த நம்பிக்கைகளைத் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் அறிமுகப்படுத்துவது இப்பதிவின் நோக்கமாகும்.



அதே நேரம் நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் நீங்கள் வாழும் நாடுகளின் நம்பிக்கைகளை இங்கு பகிர்வதன் மூலம் இந்தப் பதிவை இன்னும் செழுமை பெறச் செய்யலாம்.

அவுஸ்திரேலிய பண்பாட்டு விழுமியங்களுக்குள் ஒன்றாகக் கருதப்படும் அவுஸ்திரேலிய சோதிட முறையை தைப்பொங்கல் வாழ்த்துக்களோடு இங்கே தருகிறேன். உங்களுக்கு அது எவ்வகையில் பொருந்திப்போகிறது என்பதையும் தான் ஒரு தடவை பாருங்களேன்.

கீழே வருபவை ஆங்கில ஆக்கம் ஒன்றின் தமிழாக்கம். பல விடயங்கள் சொல்ல இருக்கும் போதும் சுருக்கமும் செறிவும் கருதி சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.


மேடம்: 21 மார்ச் - 20 ஏப்பிரல் வரை.

மூலக்கூறு: நெருப்பு.
ஆளும் கிரகம் செவ்வாய்.
அதிஷ்ட தினம் செவ்வாய்,
பலம்: சக்தி, ஆர்வம், துணிச்ச, தன்னம்பிக்கை.
பலவீனம்: தன்னலம், கோபம், பொறுமை இன்மை.

இடபம்: 21 ஏப்பிரல் - 21 மே

மூலக்கூறு: நிலம்
ஆளும் கிரகம் வெள்ளி
அதிஷ்ட தினம்: வெள்ளி
பலம்: சார்ந்திருத்தல், இணைந்து செல்லுதல், மன உடல் உறுதி.
பலவீனம்: மாற்றங்களை எதிர் கொள்ளத் தயங்குதல்,


மிதுனம் 22 மே -21 ஜூன்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: புதன்
ஆளும் கிரகம்: புதன்
பலம்: மகிழ்வாய் இருத்தல், நல்ல தொடர்பாடல் திறன்,அனுசரித்து போகிற தன்மை
பலவீனம்: சுயநலம், அமைதியற்றிருத்தல், குழம்பிய மனநிலை



கடகம்: 22 ஜூன் - 23 ஜூலை

மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: திங்கள்
ஆளும் கிரகம்: சந்திரன்
பலம்: சூழலுக்கு தக்கவாறு தம்மை இசைவாக்கம் செய்து கொள்ளுதல், குடும்பத்தின் மீதான பற்றும் விசுவாசமும்.
பலவீனம்: தன் உணர்வுகளை வெளிக்காட்டாத தன்மை, சுடு சொல் பாவனை.


சிங்கம்: 24 ஜூலை - 23 ஓகஸ்ட்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்: சூரியன்
அதிஷ்ட தினம்: ஞாயிறு
பலம்: இரக்கம், தலைமைத்துவத்தன்மை, இயல்பான உற்சாகம்
பலவீனம்: பொறாமை, விட்டுக் கொடாத தன்மை, அடக்கியாளும் தன்மை.


கன்னி: 24 ஓகஸ்ட் - 23 செப்ரெம்பர்

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம் புதன்
ஆளும் கிரகம் புதன்
பலம்: காரியத்தை முழுமையாகச் செய்து முடித்தல், புரிந்துணர்வு, சூழலுக்கேற்ப அனுசரித்துப் போதல்
பலவீனம்: எல்லாவற்றையும் மிக நுட்பமாக அவதானித்து பிழை காணுதல், அமைதியற்றிருத்தல், ஒரு காரியத்திற்கு இன்னொருவரில் தங்கியிருத்தல்.

துலாம்: 24 செப்ரெம்பர் - 22 ஒக்ரோபர்

(23 ஒக்ரோபர் வரை என சில குறிப்பிடுகின்றன)
மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வெள்ளி
ஆளும் கிரகம்: வெள்ளி
பலம்: பொறுமை, சமநிலை பேணுதல், காதலும் மகிழ்ச்சியும்.
பலவீனம்: கவனமின்மை, அக்கறை இன்மை, உணர்வு வசப்படுதல்.

விருச்சிகம்: 23 ஒக்ரோபர் - 21 நவம்பர்  (22 ஒக்ரோபரில் இருந்து என சில குறிப்புகள் குறிக்கின்றன)

மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: செவ்வாய்
ஆளும் கிரகம்: புளூட்டோ
பலம்: நம்பத்தகுந்தவர்கள், விசுவாசம் உள்ளவர்கள், அன்பும் பொறுமையும் கொண்டவர்கள்.
பலவீனம்: பிடிவாதம், அன்பில் பொறாமை, உணர்வு வசப்படல்.

தணுசு: 23 நவம்பர் - 21 டிசம்பர்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்; வியாழன்
அதிஷ்ட தினம்: வியாழன்
பலம்: அறிவு பூர்வமான சிந்தனை, உறவை மேம்படுத்தும் ஆற்றல் நேர்மை
பலவீனம்: கூர்மையான நாக்கு, மாறும் தன்மை, கவனமற்றிருத்தல்

மகரம்: 22 டிசம்பர் - 20 ஜனவரி

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம்: சனி
ஆளும் கிரகம்: சனி
பலம்: கடின உழைப்பு, பொறுப்புணர்வு, மனப்பலம், சுதந்திர மனப்பாண்மை
பலவீனம்: கோபம், தலைமைத்துவத்தை ஏற்க மறுத்தல், அடங்க மறுத்தல்.

கும்பம்: 21 ஜனவரி - 19 பெப்ரவரி

மூலக்கூறு: காற்று
ஆளும் கிரகம்: யுரேனஸ்
அதிஷ்டதினம்: சனி
பலம்: நட்புணர்வு, புத்திசாலித்தனம்,இரக்கமும் ஆதரவுமாயிருத்தல், நடைமுறையோடு ஒத்துப் போதல்
பலவீனம்: பொறுப்பற்றிருத்தல், முதல் தடவையில் எல்லாவற்றையும் எடை போட்டு விடுதல், தன் அபிப்பிராயத்தில் பிடிவாதமாயிருத்தல்.

மீனம்: 20 ஃபெப்ரவரி - 20 மார்ச்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வியாழன்
ஆளும் கிரகம்: வியாழன்
பலம்: ஆடம்பர மோகமின்மை, அமைதியும் கோபம் வராத நிலையும், சிறந்த ஞாபக சக்தியும் புத்திக் கூர்மையும்.
பலவீனம்: உணர்வு நிலை ஊசலாடிக்கொண்டிருத்தல்,

Author: யசோதா.பத்மநாதன்
•2:39 PM
புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

புது வருஷத்தில் பிள்ளையார் சுழி போட்டு படலை திறக்கிறது ஈழத்து முற்றம்!



மாற்றங்கள் பல வந்து விட்டன. பண்பாட்டில், பழக்கவழக்கங்களில், அன்றாட வாழ்வில், வாழும் வழிகளில் என பல கூறுகளிலும் அது தன் இருப்பை காட்டி வருகிறது.

கால ஓட்டங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே! யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்டமுறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச்  சங்கடங்களை  தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.

அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும்  வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் சீமேந்தினால் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தலும் மரபு. சில படலை அமைப்புகள் நிழல் மட்டும் கொடுத்த படி இருப்பதும் இயல்பு. அவை இப்போது வெகுவாக அருகி வருகின்ற போதும் சில இடங்களில் அவை இன்றும் புழக்கத்தில் இருக்கக் கானலாம். அவற்றின் சில படங்களைக் கீழே காண்க.

 (படங்கள்: நன்றி; கூகுள் இமேஜ்)











இவ்வாறே தெரு மூடி மடங்களும் அமைந்திருந்தன. தெருவையே மூடியவாறு அமைந்திருக்கும் கீழ்கண்ட இத்தகைய நிழலும் ஆறுதலும் தரும் அமைப்புடய வீதி ஒழுங்கைக் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஒரு கால கட்டத்தின் வடபகுதித் தமிழரின் ஒப்புரவான வாழ்க்கை முறைக்கு சாட்சியாக அமைந்துள்ளன.







கோயில் திருவிழாக்களின் போது தண்ணீர் பந்தல்கள் அவ்வாறான அமைப்பை ஒத்த வகையில் போடப்படுவதும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி செய்து அனுப்புதலும் தண்ணீர் பந்தல் போடும் தொண்டர்களின் சேவையின் பாற்படும்.



தண்ணீர் பந்தல் 

கூடவே தண்ணீர் தொட்டியும்  மாடுகள்முதுகு சொறிவதற்கான ஆவுரோஞ்சிக் கற்களும் (ஆ - மாடு, உரோஞ்சி - சொறிதல், கல் - கல்) ஆங்காங்கே பொது இடங்களில் சுமைகளோடு வரும் நடை பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சுமைதாங்கிக் கற்களும் அம் மக்களின் வாழ்க்கை முறையினை சொல்லும் இன்னொரு அம்சமாகும். வாய் பேசா ஜீவன்களின் சங்கடங்களை அறிந்து அவைகளுக்கு தேவையான விடயங்களைப் பொது இடங்களில் அமைத்து வாழ்ந்து வந்த ஒரு வசந்த வாழ்க்கையினை சொல்லும் அந்த விடயங்கள் எல்லாம் இப்போது வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் அமைந்து போனது காலத்தின் கட்டளை போலும்.




ஆவுரோஞ்சிக்கல்லும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கான தொட்டியும்

ஆனால், இந்தியாவிலோ சற்று வேறுபட்ட முறையில் அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. நம் ஊரில் காணப்பட்டிருக்கும் படலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் திண்ணை போன்ற அமைப்பு முறைகள் அங்கு வீட்டோடு சேர்த்து அமைக்கப்படிருப்பதை அவர்களின் பாரம்பரிய வீடுகளில் காணலாம்.

இந்திய வீட்டோடு கட்டப்பட்டுள்ள திண்னைகள்






ஆனால் நாற்சார வீடுகள் கேரளாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள தமிழ் மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த கட்டிடக்கலையாகும்....


ஆனால் இவ்வாறு இலங்கையின் வட பகுதியில் வீட்டுப் படலையோடு அமைக்கப்பட்டிருந்த கூரையும் திண்ணையும் சேர்ந்ததான அமைப்பு முறை அங்கு மட்டும் தனித்துவமாகக் காணப்பட அங்கு நிலவிய சாதி அமைப்பு முறையும் ஒதுக்கப்பட்ட மக்கள் தம் வீடுகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே அத்தகைய அமைப்புகள் அங்கு ஒரு கால கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்றும் தலித் எழுத்தாளர் டானியலும் பேராசிரியர்.சிவத்தம்பியும் கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவை ஆராய்ச்சி செய்து நிறுவுவதற்கு வேண்டியன.

இப்போது சிட்னி என் வசிப்பிடமாகி வருடங்கள் பலவாயிற்று. 30, 35 வருடங்களுக்கு முற்பட்ட பல வீடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் தொடர்மாடி வீடுகள் முளைத்து வருகின்றன. இப்படியான மாற்றங்களை எதிர் கொள்வது பல வேளைகளில் சிரமமாக பார்க்க கவலை அளிக்கும் விடயமாக இருக்கிறது. 

என் வீடு அமைந்திருக்கிற பாதையில் உள்ள பல வீடுகளில் இருந்த பல மூதாதையர்கள் இடம்பெயர்ந்து மூதாதையர்கள் விடுதிகளுக்கு போகிறார்கள். போகிற போது இள வயதில் இருந்து தாம் வசித்து வந்த வீடுகளை தம் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டோ, விற்று விட்டோ போகிறார்கள். கைமாறும் வீடுகள் மிக விரைவாகவே தன் சோபையை; பாரம்பரியத்தின் அழகை இழந்து அந்த இடத்தில் நவீன மோஸ்தரிலான வீடுகளும் தொடர்மாடிக் குடி இருப்புகளும் முளைத்து விடுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் இத்தகைய மாற்றங்களை பார்க்க பல வேளைகளில் கஸ்ரமாக இருக்கிறது.

நடந்து போகின்ற வேளைகளில் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டோ, களை பிடுங்கிக் கொண்டோ நிற்கும் மூதாட்டிகளை; புன்னகையோடு நலமா நீ என விசாரிக்கும் தோல் சுருங்கிய கிழவர்களை எல்லாம் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. அவர்கள் இருந்த இடங்களை போனோடு சல்லாபிக்கும் அருகாமைகளைக் கவனிக்காத; கவனிக்க விரும்பாத, கனவுகளில் மிதக்கும் இள முகங்களும் புது மோஸ்தரிலான வீடுகளும்.

அண்மையில் ஒரு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். ஒருவர் எழுதி இருந்தார்.தொழில்நுட்பம் வருவதற்கு முன்பான வாழ்க்கை முறையைக் கடசியாகச் சந்தித்த சந்ததி நாங்கள் தான் என்று. அதனால் தான் இதகைய வலியோ என்னமோ.

இரண்டையும்; இரண்டு விதமான வாழ்க்கை முறையையும் ஒரு வாழ்க்கைக் காலத்தில் - ஒரு மெலனியத்தில் சந்தித்திருக்கிறோம். 

இப்போதெல்லாம் அவற்றை அழிவதற்கிடையில் புகைப்படமாகச் சேமித்துக் கொள்ள தோன்றுகிறது. 

இவற்றை படமாக எடுக்கத் தோன்றியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்த முறையில் தமிழையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கற்பித்துக் கொடுக்க அவர்களுடய கண்களூடாக நம் நாட்டு வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்க நான் கையாள விரும்பும் ஒரு உத்தியும் இது வாகும். ( அது சம்பந்தமாகச் சேமிக்கத் தொடங்கிய பல புகைப்பட ஆவணங்கள் சேமிக்கப்பட்ட அரைவாசியில் நிற்கிறது. என் வாழ்க்கைக்காலத்துக்குள் அதனைச் செய்து முடித்து விட வேண்டும்.)

அவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகளில் சில அதிசய ஒற்றுமைகள் உண்டு.(இனி வரும் படங்கள் நான் எடுத்தவை)

1. சங்கடப்படலை போன்ற அமைப்பு







படலைக்கு நிழல் தருவது போன்ற அமைப்பு இங்குள்ள பழைய வீட்டு அமைப்போடு கூடப் பிறந்தவை. ஆனால் அவை கொடி மலர்கள் படர வீற்றிருக்கும். அவற்றின் சில படங்களையே மேலே காண்கிறீர்கள்.

புகைக்கூடுகள்: அங்கும் இங்கும்

நம் ஊரிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. இங்குள்ள பாரம்பரிய வீடுகளிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் புகைக்கூடுகள் துல்லியமாய் வெளித்தெரியும். ஆனால் இவை இரண்டுக்கும் உபயோகங்களில் பெருத்த வேறுபாடுண்டு. 

அங்குள்ள புகை போக்கிகள் சமையல் அறையில் இருந்து விறகடுப்பின் புகையை போக்க அமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள புகை போக்கிகள் குளிர்காலத்து குளிரைப் போக்க வரவேற்பறைக்குள் விறகுகள் போட்டு எரிக்க பயன் பட்டு வந்தன. இவை கணப்படுப்புகள். இப்போதெல்லாம் இத்தகைய புகை போக்கிகளோடு வீடுகளை இங்கு யாரும் கட்டுவதில்லை. அதற்கான தேவையும் இல்லாது போயிற்று. அந்தப் பாரம்பரியத்தின் இடத்தை மின்சாரத்தில் இயங்கும் கணப்புகளும் குளிர் சாதனங்களும் நிரப்ப இப்போது வீட்டின் வெளிச் சுவர் புறமாக ஒரு சிறு கருவி மட்டும் வெளித்தெரிகிறது. 

அது வீட்டின் வெளிப்புற அமைப்பில் பாரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இப்போதெல்லாம் மிக அபூர்வமாகக் காணப்படும் கணப்படுப்பு கொண்ட பாரம்பரிய அவுஸ்திரேலிய வீட்டின் படங்களைக் கீழே காண்கிறீர்கள்.






இவை எல்லாம்; இத்தகைய வீடுகள் எல்லாம் காலப்போக்கில்; இன்னும் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு தசாப்தங்கள் கடந்தால் கூடக் காணக்கிட்டாது.



வெளி விறாந்தைகள் கொண்ட வீடுகள்




இவற்றோடு ஒத்ததான நம்மூர் வீடுகளின் படங்களை எடுக்க இன்னும் காலம் கனியவில்லை.



ஈழத்து முற்றத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நத்தார், புது வருட வாழ்த்துக்கள்! அன்பும் அமைதியும் சுபீட்சமும் எங்கும் நிறைவதாக!

     அன்பே சிவம் !