Author: ஜேகே
•12:52 AM


எல்லோருக்கும் வணக்கம்!

தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள்.

காலை ஆறு மணி!
தலையில் துவாய்,
கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா?
யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி
ஊமல் கரியில் பல் துலக்கி,
கரண்டு போன மின்கம்பம்
பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி.
டயர் வாரில் தேடா வலயம்
ஆழக்கிணற்றில் வாரும்போது
அரைவாசி தண்ணீர்
ஓட்டை வாளியால் ஓடிவிடும்.
முகம் கழுவி
சைக்கிள் எடுத்து
சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும்,
புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்!
அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று
வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்!
பாடசாலை இடை வேளை,
பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்!
அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும்
வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு.
அது முடிந்த பின்னும் நூலகம்
தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு
திருட்டுத்தனமாய் கரையெல்லாம் செண்பகப்பூ!
ப்ரியா, பாவைவிளக்கு,
அவ்வப்போது அம்புலிமாமா.
ஆடிகொருமுறை சங்கர்லால்!
பொன்னியின் செல்வன்,
கடல்புறா, கடல்கோட்டை, குவேனி.
செங்கை ஆழியானையும் சுஜாதாவையும்
காரை சுந்தரம்பிள்ளையையும்
காதலித்து வளர்ந்த ஈழத்து இளைஞன்
புலம் பெயருகிறான்.
புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் படைப்புகளும் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா? இது கருத்தரங்கு தலைப்பு. பார்த்தால் ஏதோ சந்தேகத்தில் எழுந்த கேள்வி போல படுகிறது. சந்தேகம் தேவையில்லாதது. அவர்களும் பங்களிக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லுவோம் என்று நினைக்கும்போது ….. எனக்கும் அந்த பயம் தொற்றிவிட்டது!

புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய பார்வையை, ஈழத்து புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற ஒரு வட்டத்துக்குள் சுருக்கி இந்த கட்டுரையை சமர்ப்பிப்பது சில திசைதிரும்பல்களை தவிர்க்கும் என்று நினைக்கிறேன். ஈழத்து புலம்பெயர் தமிழர்கள், வணிக, தொழின்முறை, மேற்குலக கவர்ச்சி (western imperialism) சார்ந்து புலம்பெயரவில்லை என்று நம்புவதோடு! அவர்களின் புலம்பெயர்வுக்கு மூல காரணம் ஈழத்தின் போரியல் நிலைமையும், இனங்களுக்கிடையேயான காழ்ப்புணர்வும் அடக்குமுறைகளும் என்று இந்த கட்டுரை முடிவு பூணுகிறது. அதை முன்முடிபு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? என்ற ஆராய்ச்சிக்குள் நுழையும் போது, “ஜூதர்கள் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்பது கடவுளின் விருப்பம்” என்று கிறிஸ்தவத்து பழைய ஏற்பாட்டின் உபாகமம் 28:25 சொல்லும் ஒரு விஷயம்.
I dispersed them among the nations, and they were scattered through the countries; I judged them according to their conduct and their actions.
இதிலே dispersed என்ற சொல் அப்புறம் diaspora வாக மருவியதை குறிப்பிடவேண்டும். அப்படியான ஒடுக்கப்பட்ட இனங்கள், புறக்கணிக்கப்பட்ட இனங்கள் தம் தாயகம் தொலைத்து புலம் பெயர்ந்து அங்கே மெதுவாக இலக்கியம் படைக்கும்போது, அவற்றுக்கே உரிய தனித்துவ கூறுகள் அந்த வகை இலக்கியங்களில் செறிந்து கிடக்கும். புலம் பெயர் இலக்கியம் பற்றி கலாநிதி ஷாலீன் சிங் என்ற ஆராய்ச்சியாளர் இந்த விஷயங்களை அலசுகிறார்(Diaspora Literature- A Testimony of Realism).
“Diasporic writing is full of feelings of alienation, loving for homeland dispersed and dejection, a double identification with original homeland and adopted country, crisis of identity, mythnic memory and the protest against discrimination”
புலம்பெயர் இலக்கியம் என்பது, உணர்வுகளையும், ஒதுக்கிவைக்கப்பட்டு இருப்பதால் வரும் ஆற்றாமையையும், தாயகம் மீதான காதலையும், அவர்கள் சிதறிக்கிடப்பதால் வரும் அயர்ச்சியையும், அடையாளங்கள் சார்ந்த குழப்பங்களையும்(identity crisis), நனைவிடை தோய்தலையும், இனவேறுபாடு, காழ்ப்புணர்ச்சக்கு எதிராக கிளர்ச்சியையுமே தன்னகப்படுத்திக்கு கொள்கிறது என்கிறார். இந்த வகை கூறுகள் ஈழத்து இலக்கியங்களில், குறிப்பாக புலம்பெயர் ஈழத்து இலக்கியங்களில், அந்த படைப்பாளிகள் கொண்டிருக்கும் அதிகப்படியான எழுத்துச்சுதந்திரத்தால் ஆளுமைப்பட்டு கிடக்கின்றன என்பதில் ஐயமில்லை.

இந்த வகை அடைப்புக்குள் வரையறை செய்யப்படக்கூடிய இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கின்றனவா? எந்த இலக்கியமும், எந்த படைப்பும் அது எழுதப்பட்ட மொழிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுவதில்லை. கம்பனும் புகழேந்தியும், பாரதியும், கல்கியும், கி.ராஜநாராயணனும், புதுமைப்பித்தனும், சுஜாதாவும், செங்கை ஆழியானும் தமிழ் வளர்க்க இலக்கியம் படைக்கவில்லை. இலக்கியம் அதற்கென்று இருக்கும் இலக்கு நோக்கி எழுதப்படுவதே. படைப்பாளியின் திறமை, மொழி ஆற்றல், புதுமை, நோக்கு இவையெல்லாம் அபரிமிதமாகும் போது, அந்த படைப்பு சிறப்படைகிறது. அந்த சிறப்பு, அதை போன்ற சக படைப்புகளின் சிறப்பு, அதன் வாசகர் பரப்பு இவை எல்லாமே சேர்ந்து, அந்த மொழிக்கு வலிமை தானாகவே ஏற்படுத்திக்கொடுகிறது.

தமிழ் எங்கள் மொழி. தமிழில் குறிப்பிடத்தக்க ஆளுமை இருக்கிறது. சிந்தனை இருக்கிறது. ஏராளமான எண்ணங்கள், அனுபவங்கள் இருக்கிறது. அதுவும் புலம்பெயர் இனமான பின்னர், சுமந்து வந்த, வரும் சிந்தனைகளும், சூழல், கலாச்சார மாற்றங்களால் காணும் அதிர்ச்சிகளும் ஏராளமானது. இவற்றுக்கு வடிவம் கொடுத்து, வாசிப்பவனுக்கு அந்த வடிவம் நோக்கத்தை கடத்திச்செல்லுமாறு எழுதும்போது அந்த படைப்பு இயல்பாகவே முழுமை அடைகிறது. இங்கே வலியுறுத்துவது என்னவென்றால் படைப்புகளின் நோக்கம் தமிழ் வளர்ப்பதாக இருக்கவேண்டியதில்லை. நல்ல படைப்புகள் இயல்பாகவே தமிழை வளர்க்கும். தமிழ் ஒன்றும் நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு கிடையாது. யாரும் நாம் தமிழ் வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இலக்கியம் படைக்கவும் தேவையில்லை. நாம் நம் எண்ணங்களை, சிந்தனைகளை பகிர்வதற்கான ஒரு ஊடகம் தான் மொழி. எம் எண்ணங்களும் சிந்தனைகளும் அதை நாம் பகிரும் வண்ணங்களும் சிறப்படையும் போது தமிழுக்கு தானாகவே அந்த வளம் கிடைக்கிறது. செழிக்கிறது. ஆக எழுத்துக்குப்பைகளையும் இலக்கியத்தையும் பிரித்துணரவேண்டிய தேவை அவசியமாகிறது. அதுவும் குண்டுமணிக்குள் குப்பைகள் இருந்த காலம் போய் குப்பைகளுக்குள் குண்டுமணிகளை தேடும் நிலை. சவால் அதிகமானது.

நல்லதொரு படைப்பிலக்கியம் எழுதிவிட்டாலேயே அது தமிழுக்கு வளம் சேர்த்துவிடுமா என்றால் இல்லை. அது யார் வாசிப்பதற்காக படைக்கப்பட்டதோ அவர்களை சென்றடையவேண்டும். அங்கீகரிக்கப்படவேண்டும். கொண்டாடப்படவேண்டும். நாற்பதுகளில் உருவாகிய தமிழ் அச்சு ஊடகங்களின் மலர்ச்சி, திராவிட எழுச்சி, சிறுபத்திரிகைகள் என்பன வாசிப்பு பரம்பலை அதிகரித்தது. எழுத்தாளன் உருவாவதற்கு முதல் தகுதி அவன் வாசகனாய் இருத்தல் வேண்டும். வாசகர்கள் அதிகமானார்கள். அவர்களுள் இருந்து எழுத்தாளர்கள் உருவாகினார்கள். இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பின்னரான எழுத்தாளர்களுள் மகுடம் சூடியவர்கள் எல்லோருமே 60, 70களில் எழுத்துலகில் காலடி பதித்தார்கள். திராவிட இயக்க எழுச்சியை இந்த வண்ணாத்திப்பூச்சி விளைவின் முதல் படபடப்பாகவும் சொல்லலாம்.
ஈழத்து இலக்கியபரம்பலை இந்த அடிப்படையில் ஆராய்ந்தால், 1983 ம் ஆண்டை ஒரு முக்கிய திருப்புமுனையாக கொள்ளலாம். இது 1988இல் உமா வரதராஜன் எழுதிய “உள் மன யாத்திரை” என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து ஒரு பகுதி.
"ஊரடங்குச்சட்டம் பற்றி திடீர் என அறிவிப்பு வந்தது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரே மாதிரி சொன்னார்கள். தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை வாசிக்கவந்தவன் வளமையான ஒரு அறிவிப்பாளனும் இல்லை. அவன் தப்புத்தப்பாக அறிவிப்பை வாசித்தான். சந்தைக்கு போயிருக்ககூடிய தன் மனைவியை. பாடசாலைக்குப்போன தன் குழந்தைகளைப் பற்றி இந்த வேளையில் அவனுக்கு ஞாபகம் வந்திருக்கலாம்”
இந்த வகை புதுமையான, பல தளங்களில் யோசிக்கவைக்கும் எழுத்துக்கள் 80களில் ஈழத்தில் உருவானது. அதுவே 90களில் சற்றே உணர்ச்சி மேலிட்ட, புரட்சி, போர், இன ஒடுக்கல் சார்ந்த எழுத்துக்கள் நோக்கி தீவிரப்படுத்தப்பட்டது. இதிலே மூன்று வகை இலக்கியங்கள் இருக்கின்றன. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தோன்றிய இலக்கியங்கள். அவை கோட்பாட்டு ரீதியான எண்ணங்கள் சார்ந்து சிறிதும் பிறழாத எழுத்துக்கள். ஈழத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து உருவாகிய படைப்புக்கள் பல மதில் மேல் பூனை ரகம். 95ம் ஆண்டுக்கு பின்னரான செங்கை ஆழியான் எழுத்துக்களில் அந்த வித தயக்கம் கலந்த நடையை காணலாம். மூன்றாவது வகையான புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் முழு சுதந்திரத்தை அனுபவித்தார்கள்.
“கருவில் இருந்தென்
காதல் மனையாளின் வயிற்றில் உதைத்த
பயல் நினைவில் இருந்தென்
நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்
நமக்கிடையே ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கின்றது
விசா என்ற பெயரில்”
என்று மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே நோர்வே சென்று, விசா சிக்கலால் பிரிந்திருக்கும் கணவன் துயர் சொல்லும் ஜெயபாலன் கவிதைகள் இலக்கியத்தரம் மிகுந்து வெளிவந்தாலும், புலம்பெயர் இலக்கியங்கள் என்பது பொதுவாக போர், புரட்சி, கோட்பாடுகள், விரிசல்கள் சார்ந்த எழுத்துக்களால் ஆளப்பட்டு ஒருவகை வார்ப்புக்குள் சுருங்கிவிட்டது சோகமே.

2003/2004 ம் ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர் இலக்கியம் ஒரு சில எழுத்தாளர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்தந்த நாட்டில் ஒரு பத்திரிகை. சொல்லப்போனால் இரண்டு பத்திரிகைகள். ஒன்று ஆதரிக்கும். மற்றையது எதிர்க்கும்! அவ்வப்போது ஆன்மீகப்புத்தகங்கள், கவிதைத்தொகுப்பு. ஈழத்து வாழ்க்கையை நினைத்து ஏங்கும் சிறுகதைத்தொகுப்புகள் என ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் தாமே பணம் கொடுத்து பதிப்பிக்கும் சோகம். இந்த வகை புத்தகங்களை வாசகன் தேடி தேடி அலைந்து திரிந்து வாசிக்கிறானா என்று கேட்டால் அயர்ச்சி தான் எஞ்சும். இணையத்தளங்களும் பத்திரிகை, சஞ்சிகை வடிவிலேயே இருந்ததால் எழுத்து சமவுடமைப்படுத்தபடாமலேயே இருந்தது. பத்திரிகைக்கு எழுதுவதில் இருக்கும் சிக்கலே இணையத்திலும் இருந்தது. பிரபலமான எழுத்தாளராய் இருத்தல் வேண்டும். அல்லது இணையத்தளத்து உரிமையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்தாவது இருக்கவேண்டும். அச்சு ஊடகத்தில் படைப்பு வந்திருக்கவேண்டும். அந்த ஊரில் இலவசமாக வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகைக்கு அதன் கோட்பாட்டை மீறாதவாறு எழுதவேண்டும். வாசகர் வட்டம் என்று ஒன்று கிடையாது. இது எல்லாவற்றையும் விட சிக்கல், படைப்பை கணணி எழுத்துருவாக்குவது. தமிழ் விசைப்பலகை தொழில்நுட்பம் கடினமாக இருந்த காலம். எழுத ஆர்வம் இருப்பவனும் இந்தவகை சிக்கல்களால் வாளாமல் இருந்த காலம். தொழில்நுட்பம் தெரிந்து இலக்கியம் புரியாத பலர் எழுதிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது தான்,
“சற்றுநேரம் என்னையே பார்த்துக்கொண்டு நின்றவள், எனக்கு மிகவும் பரிச்சயமானவள் போல ரகசியக்குரலில், “இந்தபூனை குட்டியாக இருந்தபோது ஆணாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் பெண்ணாக மாறிக்குட்டி போட்டு விட்டது” என்றாள். பிறகு இன்னும் குரலை இறக்கி, “இந்தக்கறுப்பு குட்டிக்கு மாத்திரம் நான் பெயர் வைத்துவிட்டேன். அரிஸ்டோட்டல்” என்றாள்.
ஏன் அரிஸ்டோட்டல்?
பார்ப்பதற்கு அப்படியே அரிஸ்டோட்டல் போலவே இருக்கிறது இல்லையா?
என்ற அ.முத்துலிங்கத்தின் “மகாராஜாவின் ரயில் வண்டி” போன்ற, வாசகனையும் புத்திசாலியாக்கும் சுவாரசிய எழுத்துக்கள் அவ்வப்போது வந்துபோகும். அவற்றை “நீயிருந்தால் நான் இருப்பேன்” ரக காதல் கவிதைகள், “தமிழனே புறப்படு, தரணியை வசப்படு” என்ற அர்த்தமற்ற வெறும் சந்தக்குப்பைகள், திரை விமர்சனங்கள், உணர்ச்சிவசப்பட்ட ஊர் நினைவுச் சிறுகதைகளுக்கு மத்தியில் தேடிக்கண்டுபிடித்து கொண்டாடவேண்டியது புலம்பெயர் வாசகர்கள் தமிழுக்கு செய்யவேண்டிய பங்களிப்பும் கூட.

இந்த சூழலில் தான் Unicode எழுத்துருவும் சம காலத்தில் Blogger, Bloglines, Wordpress போன்ற வலைப்பதிவு மென்பொருட்களும் தமிழுக்கு அறிமுகமாகிறது. யார் வேண்டுமானாலும் கணக்கொன்றை ஆரம்பித்து தனக்கென்று ஒரு இணைய சுட்டி, வடிவமைப்பு எல்லாமே ஏற்கனவே இருப்பதால் எழுதுவது மாத்திரமே இங்கே எழுத்தாளன் செய்யவேண்டிய ஒன்று. ஈகலப்பை, கூகிள் இண்டிக் போன்ற எழுது மென்பொருள்கள் தமிழ் தட்டச்சை இன்னமும் இலகுவாக்க இன்ஸ்டன்ட் எழுத்தாளர்கள் புற்றீசல் போல வெளிவர ஆரம்பித்தார்கள். அவற்றுள் ஆந்தைகளும் கழுகுகளும் புறாக்களும் இல்லாமலும் இல்லை.

யார் வேண்டுமானாலும் எப்போதும் எதையும் எழுதலாம் என்ற சுதந்திரம், எழுத்து சமவுடமையாவதற்கு பெரிதும் உதவியது. வாசகர்கள் எழுத்தாளர்களாய் பரிணாமம் அடைய இது ஏதுவானது. இதை திராவிட, இந்திய சுதந்திர போராட்ட சமயத்தில் இடம்பெற்ற சிறுபத்திரிகை, கையெழுத்துப்பத்திரிகை சார்ந்த எழுத்துப்புரட்சியுடன் ஒப்பிடலாம். எழுத முனைவுபவர்களுக்கு களமும் கருத்தும் கொட்டிக்கிடந்தது. இங்கே பதிப்பாளர் தேவையில்லை, இணையத்தள செலவு இல்லை. இன்னாரை திருப்திப்படுத்தவேண்டிய நிலையில்லை என்றவுடன் புதுப்புது இலக்கிய நடைகள், தேடல்கள், என்று புலம்பெயர் எழுத்தாளர்களின் வெளி அதிகரித்தது. பதிவர்கள் என்ற தனித்துவ எழுத்தாளர் சமூகம் உருவானது. இங்கே வாசகர்களுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள இடைவெளி குறைந்தது. எழுத்தை கொண்டாடும் வாசகர் கருத்துகள், படைப்பு வெளியாகி இரண்டு நிமிடங்களில் பிரசுரமானது. விமர்சனங்களும் தான். எழுத்தாளர்களை வாசகர்களும், வாசகர்களை எழுத்தாளர்களும் இனம் காணுவதற்கு பொதுவான ஒரு சந்தை இல்லாத குறையை திரட்டிகள் தீர்த்துவைத்தன. தமிழ்10, தமிழ்மணம், தமிழ்வெளி, இன்டெலி போன்ற பொதுத்திரட்டிகளும் ஈழத்து முற்றம், ஈழவயல், தேனீ, வினவு போன்ற ஒருங்கமைப்பு தளங்களும் இந்தவகை பதிவர்களை இனம்கண்டுகொள்ள உதவ, புலம்பெயர் படைப்புகள் மெல்ல மெல்ல உச்சம் பெற தொடங்கின. அது இலக்கிய உச்சமா இல்லை வெறும் எழுத்துக்களின் குப்பையா என்பது இன்னமும் விரிவாக ஆராயப்படவேண்டியது.

பதிவுலகத்தின் இலக்கிய பங்களிப்பு பற்றிய ஒரு சின்ன உதாரணம். சயந்தன் என்று ஒரு பதிவர். எழுத்துலகில் நீண்ட காலம் இயங்கி புலம்பெயர்ந்து கோட்பாட்டு வெளிக்கு அப்பால் எழுத்தில் பரிசோதனை முயற்சி செய்யும் எழுத்தாளர். பதிவுலகம் என்ற ஒன்றில்லாவிட்டால் அவர் எழுதிய ஆறாவடு என்ற நாவல் பரந்துபட்ட வாசிப்பையும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் அடைந்திருக்காமல் பெட்டிக்குள்ளேயே முடங்கியிருக்கும். ஆறாவடுவை விமர்சனம் செய்கையில், கதை முடியும் தருவாயில் புதிதாக ஒரு உறுத்தலான பாத்திரத்தை அறிமுகப்படுத்துவது நாவல் நெறி அல்ல என்று சுஜாதா சொல்லியதை எடுத்துக்காட்டி காட்டமாக என் பதிவில் விமர்சித்திருந்தேன். பதிலுக்கு ஒரே வாரத்தில் சயந்தன் சிறுகதை ஒன்றை எழுதுகிறார். “மகா பிரபுக்கள்” என்னும் ஈழத்து வீட்டில் கட்டப்படும் கக்கூஸ்கள் தொடர்பான ஒரு பின்நவீனத்துவ சிறுகதை. இடையில் விமர்சகர்களுக்கும் பதில் வருகிறது.

அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிறார்”
அன்னம்மா எதுவும் புரியாமல் விழித்தாள். மருமகளின் பெயர் கவிதா தானே.. இவர் எதையோ மறைக்கிறார். மகன் வரட்டும் அவனையே கேட்டு விடுகிறேன்..என்று நினைத்துக் கொண்டாள்.
வெறுமனே வாசகர்களாய் இருக்கக்கூடிய சுப்பனும் குப்பனும் இலக்கிய தளத்தில் எழுத்தாளனை விமர்சனம் செய்ய, அதற்கு எழுத்தாளன் சிறுகதையிலேயே பதில் கொடுக்கும் சூழல் பதிவுலகத்தில் இருக்கிறது. இலகுவில் பத்தோடு பதினொன்றாக சென்றுவிட்டிருக்கக்கூடிய அவலம் இன்றி, இந்த வகை இலக்கிய சர்ச்சைகளின் விளைவாக தமிழுக்கு ஆறாவடு என்ற நூல் பரந்த அளவில் அறிமுகமாகிறது. இருபது விமர்சனக்கட்டுரைகள். எழுத்தாளனின் பதில் ஒரு சிறுகதையில். இந்த பங்களிப்பு வெறுமனே மூன்று வாரங்களுக்குள் தமிழுக்கு கிடைக்கிறது. இது பதிவுலகம், சமூக ஊடகங்களான Facebook, twitter மூலம் மாத்திரமே சாத்தியப்படக்கூடிய ஒரு அம்சம்.

விசரன், சக்திவேல், வாலிபன், ஜி, கானா பிரபா, அருண்மொழிவர்மன், மணிமேகலை போன்ற அடுத்த தலைமுறை புலம்பெயர் எழுத்தாளர்கள் உடனடியாக நினைவுக்கு வரக்கூடிய இலக்கியம் படைக்கக்கூடிய பதிவர்கள். இந்தவகை பதிவர்களின் பொதுவான ஒரு கூறாக நனைவிடை தோய்தல் என்னும் தங்கள் இளமைக்கால ஈழத்து அனுபவங்களை பகிரும் முறையை காணக்கூடியதாக இருக்கிறது. ஈழத்து தளம் தாண்டிய, எங்கள் போரியல் வரலாறு தாண்டிய எழுத்து என்பதை காண்பது மிக அரிதாக இருக்கிறது. “என் இனிய இயந்திரா”, “மோகமுள்”, “பொன்னியின் செல்வன்”, “குவேனி”, சீரோடிகிரி போன்ற வேறுபட்ட தளங்களை தேடும் எழுத்தாளர்களும், அவற்றை இலக்கியம் என்று அங்கீகரிக்க்கூடிய வாசகர் சமூகமும் எங்கள் சமூகத்தில் இருந்து தொன்றவேண்டிய தேவை ஈழத்து இலக்கியம் ஒருவித ஸ்டீரியோடைப்புக்குள் செல்லாமல் இருப்பதற்கு மிக முக்கியம்.

பதிவுலகத்தில் மிகவும் பிரபலமான, பலரால் வாசிக்கப்படுகின்ற இரண்டு வகை எழுத்துக்கள் உண்டு. ஜனரஞ்சமான சினிமா, இசை, நகைச்சுவை என்று வாசகர்களை கவரும் விதமாக எழுதப்படும் எழுத்துக்கள். இன்னுமொன்று அரசியல், போராட்டம், புரட்சி, எதிர்ப்பு அரசியல் சம்பந்தப்பட்ட பத்திகள். இந்தவகை எழுத்துக்கள் எந்த மொழிப்படைப்பிலும் இருக்கும் தான். மொழியை ஊடகமாக பயன்படுத்தி வாசகர்களை அடையும் எழுத்துவகை. இவற்றை இலக்கியம் என்ற வரையறைக்குள் அடக்குவது இலக்கியத்துக்கு நாம் செய்யும் துரோகமாக போய்விடும்.

ஏழு வருடங்கள் கடந்தபின் பதிவுலகத்தில் முதலாளித்துவ பாண்பு அதிகரித்து வாசகர்களை கவர்வதற்காக சமரசம் செய்யும் எழுத்துக்கள் அதிகரிக்கத்தொடங்கியிருக்கின்றன. வாழ்க்கையை எழுத்துக்கே அர்ப்பணித்திருக்கும் முத்துலிங்கம் போன்றவர்களின் எழுத்துக்களை விட தினம்தோறும் எழுதப்படும் சினிமா பதிவுகள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. இந்த வகையில் எழுதும் நபர்களுக்கு எழுத்து தொழின்முறை துறையும் இல்லை. வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வமும் இல்லை. இவ்வாறான படைப்புகள் காலப்போக்கில் பதிவுலகை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கு, தமிழுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய படைப்புகளை எழுதுபவர்களை இனம் கண்டு கொண்டாடவேண்டும். அதை அச்சு நூல்களில் இலக்கியம் தேடும் தேர்ந்த வாசகர்கள் தான் தங்கள் கடைக்கண்னை பதிவுலகம் பக்கமும் செலுத்தவேண்டும்.

ஈழத்து முற்றம் என்று ஓரளவுக்கு ஈழத்து நினைவுகளை சுமந்துவரும் ஒரு பதிவு தளம் இருக்கிறது. இங்கே சுமார் நாற்பது எழுத்தாளர்கள் இணைந்து அவ்வப்போது ஈழம் சார்ந்த படைப்புகளை தருகிறார்கள். ஆனால் இலக்கியம் மட்டுமே பேசும், இலக்கியம் தவிர்ந்த வேறு எந்த விஷயங்களையும் தள்ளிவைக்கும் ஒரு திரட்டி தளம் நம்மிடம் இல்லை. நம் இலக்கிய படைப்புக்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பரந்துபட்ட ஒரு வாசகர் தளத்தையும் ஏன் எழுத்தாளர் தளத்தையும் கூட உருவாக்கலாம். நல்ல படைப்புகள் அச்சில் ஏறுவதை உறுதிப்படுத்தலாம். இதற்கு கிடைக்கும் அங்கீகாரம் பதிவுலகத்தை விட்டு ஒதுங்கியிருக்கும் மூத்த எழுத்தாளர்களையும் உள்ளகப்படுத்தும். ஒரு இலக்கிய குலாம் அமைத்து தரமற்ற பதிவுகளை மட்டுறுத்தி, ஆண்டு தோறும் சிறந்த நாவல், சிறுகதை, மரபு இலக்கியம் சார்ந்த பிரிவுகளுக்கு விருதுகள் கூட கொடுக்கலாம்.
இந்த முயற்சிக்கு ஆஸ்திரேலியா எழுத்தாளர் அமைப்பு முன்னின்று ஆதரவு வழங்கினால், நானே முதல் அடியை எடுத்துவைக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.
வணக்கம்.

பிற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம் சார்பில் என்னுடைய உரை!

|
This entry was posted on 12:52 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On May 29, 2012 at 3:30 AM , கானா பிரபா said...

சிறப்பானதொரு பகிர்வு நன்றாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறீர்கள் நன்றி

 
On June 1, 2012 at 4:02 AM , ஜேகே said...

நன்றி பிரபா

 
On June 6, 2012 at 2:11 AM , More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

 
On June 15, 2012 at 3:20 AM , கரவைக்குரல் said...

சிறப்பாக இலக்கியம் பற்றிய விடயங்களை ஆழமாக ஆய்வு செய்து பதிவிட்டுள்ளீர்கள். பதிவிற்ற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
பலவழி ஊடகங்கள் வாயிலாக எழுத்துக்கள் மீதுள்ள உங்கள் பார்வை அமைந்திருக்கிறது.தனித்தனியே உங்கள் ஆய்வு அமையவேண்டும்.அதன் மூலமாக பல விடயங்களை எதிர்பார்க்கின்றோம்.
நன்றி

 
On June 16, 2012 at 8:09 PM , innaiyaveli.blogspot.in said...

naan oar ezhuththaalan.55 aandugalaaga thamizhil ezhudhi varubavan. dhaarini pathippagam enra nool veliyoottu niruvanam nadaththubavan.thangal australia katturai nanru. adhai en cheithi madalil prasurikka virumbugiraen. Adhu vilaikku virkappaduvadhalla.Free.Enavae thangal anumadhi vaendugiraen

 
On June 30, 2012 at 12:30 AM , அம்பாளடியாள் said...

எந்த இலக்கியமும், எந்த படைப்பும் அது எழுதப்பட்ட மொழிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுவதில்லை. கம்பனும் புகழேந்தியும், பாரதியும், கல்கியும், கி.ராஜநாராயணனும், புதுமைப்பித்தனும், சுஜாதாவும், செங்கை ஆழியானும் தமிழ் வளர்க்க இலக்கியம் படைக்கவில்லை. இலக்கியம் அதற்கென்று இருக்கும் இலக்கு நோக்கி எழுதப்படுவதே. படைப்பாளியின் திறமை, மொழி ஆற்றல், புதுமை, நோக்கு இவையெல்லாம் அபரிமிதமாகும் போது, அந்த படைப்பு சிறப்படைகிறது. அந்த சிறப்பு, அதை போன்ற சக படைப்புகளின் சிறப்பு, அதன் வாசகர் பரப்பு இவை எல்லாமே சேர்ந்து, அந்த மொழிக்கு வலிமை தானாகவே ஏற்படுத்திக்கொடுகிறது.மிக அருமையாக அலசி ஆராய்ந்து சொல்லப்பட்ட உண்மை!... என் மனத்தைக் கவர்ந்து நிக்குறது தங்களது
ஆக்கம் தொடர வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

 
On July 11, 2012 at 5:36 AM , ஜேகே said...

வையவன் .. தாராளமாக பயன்படுத்துங்கள் .. நன்றி.

அன்புடன்,
ஜேகே
www.padalay.com

 
On July 11, 2012 at 5:37 AM , ஜேகே said...

நன்றி கரவைக்குரல் ..

 
On July 11, 2012 at 5:38 AM , ஜேகே said...

நன்றி அம்பாளடியாள். நான் சகொதரியல்ல .. சகோதரன் :)

அன்புடன்,
ஜேகே
www.padalay.com

 
On July 30, 2012 at 6:57 AM , HK Arun said...

சிறப்பான ஆய்வுடன் கூடிய ஆக்கம்!

மகிழ்ச்சி!