Author: யசோதா.பத்மநாதன்
•7:02 AM
மாங்காய் கடித்துத் தின்ற காலம், விளாங்காய் பங்குக்காய் சண்டை பிடித்த காலம், செம்புளி புளிக்க புளிக்க கண்களைச் சுருக்கிக் கொண்டு சுவைத்த பொழுதுகள்,..... 

அது போல ஒன்று தான் குருத்தோலைகளில் பாம்பும், பம்பரமும், மணிக்கூடும், காப்புகளும், கண்ணாடியும் செய்து ஏதோ ஒரு விதமான பெருமிதத்தோடு கம்பீர ராணிகளாய் நடை போட்டிருந்தோம்.கம்பீர ராஜாக்களும் அது போலத் தான்.

ஆண் பெண் சமரசம் நிலவிய வயது! 

அது ஒரு காலம்! போருக்கு முன்பான குழந்தைகளின் பள்ளிச் சீருடைக் காலம்!







பெரு விரல் காட்டி கோபமும் சின்னவிரல் காட்டி நேசமும் போட்டிருந்தோம். நான் உமக்கு .......... தாறன். நீர் எனக்கு...........தாறீரா என்று அடிக்கடி பண்டமாற்றுகள் செய்து கொண்டோம்.

வீட்டோரப் புழுதிச் சிறுவர்கள் அவிழும் கால்சட்டையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் நீண்ட தடியில் ரின் மூடியை இணைத்து வாகன சாரதியாய் ஆகிக் கொள்ள நாம் எல்லாம் பயணிகளாய் பின்னால் ஓடினோம். வர்க்க பேதம் தெரியா மனசுகள். அதில் தான் நமக்கு எத்தனை ஆனந்தம்! பெருமிதம்!! 

சரிந்து நிற்கும் முருங்கை மரம் பஸ்ஸாய் ஆக பேப்பர்கள் எல்லாம் காசாய் ஆனது. தந்தைமார் வேலையால் வரும் நேரம் மண்ணிலும் இலைகுழைகளிலும் சமையல் தயாராது. குரும்பைகளில் தேரும் கோயிலும் சுற்று மதிலும் செலவில்லாமல் தயாரானது.


இயற்கையோடு அதன் போக்கோடு ஒன்றித்து வாழ்ந்த வாழ்க்கை நமது. நம் குழந்தைகளோ தொழில் நுட்ப யுகத்தில் சீமேந்துக் கட்டிடத்தினுள்ளே சுயாதீனமாய் உலா வருகிறார்கள்.

உங்கள் குழந்தைக் காலங்களில் என்ன எல்லாம் செய்தீர்கள்?

படம்: நன்றி, கூகுள் இமேஜ்.

This entry was posted on 7:02 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On May 22, 2012 at 10:12 AM , Muruganandan M.K. said...

அருமை.
குழந்தைப் பருவத்து ஞாபகங்களை
அள்ளி மகிழ வைத்தீர்கள்

 
On June 2, 2012 at 8:53 AM , அ. வேல்முருகன் said...

கடந்து வந்த பாதையை
நினைவூட்டியமைக்கு
நன்றி