Author: ந.குணபாலன்
•10:34 PM





இதோ  நுப்பத்திரண்டு ஆண்டுகளின் முன்னே வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த நாலு கவிதைகள். நாலு கவிதைகளும் நாலு வெவ்வேறு கவிஞர்களால் எழுதப் பட்டவை. இரண்டு மாச கால இடைவெளியில் தொடர்கதை போல வெளிவந்தவை. வாசித்து மகிழுங்கள்.



புதிய காரோடு வருவேன்>பொறுத்திருங்கள்!

ஆக்கம்:செ. குணரத்தினம்
வீரகேசரி 09.09.79




மதிப்புள்ள எனதருமை
மாமாவே!
         தங்களது
இனிப்பான கடிதம் கண்டேன்..
என்றாலும் எந்தனற்கு
இனிமேலும் முத்திரைகள்
ஒட்டாமல் அஞ்சல் ஒன்றும் 
அனுப்பாதீர்! அனுப்பிவைத்தால்
அதைஎடுக்க முடியாது.


புனிதாவின் வயதுகூடிப்
போகுதென்றும், அவளுக்கென்மேல்
பிரியமென்றும், பேத்தியொன்றைப் 
பார்க்க மாமி  ஆசைகொண்டு  
உருகுகின்றாள் என்றும் சொன்னீர்!
இவர்களது ஆசைகளை
நிறைவேற்றி வைப்பேன்! இன்னும் 
நாலாண்டு பொறுத்திருங்கள். 

கையிலே பணமில்லாமல்
கலியாணம் முடித்தால் வாழ்க்கை
மையிருளாய் மாறுமென்று
மாமா! நான் எண்ணுவதால்,
வையமே போற்றி வாழ்த்த
வெளிநாடு போயுழைத்து
தையலவள் புனிதாவை நான்
தப்பாமல் மணமுடிப்பேன்!

வடக்கு நாட்டான் மாப்பிள்ளையாய்
வருவா   னென்று  சாதகத்தில்
குருக்கள் சொல்லி இருப்பதாலே,
கவலையின்றிச் சிலவருடம்
பொறுத்திருங்கள்! என்னுடைய
புதியகாரைக் கொண்டுவந்து
மருமகன் நான் ஊரறிய
மணவறையில் வீற்றிருப்பேன்!






ஏங்க வைக்கலாமோ?
ஆக்கம்: மு. சடாட்சரன்
வீரகேசரி 23.09.79

என் ஆசை மருமகனே!
                                      நீ   வரைந்த அஞ்சல்,
இருமுறை நான் படித்தவுடன் எழுதுகின்றேன். உன்றன்,
பொன்னான கையொப்பம் இல்லாத கடிதம்
போடுகின்ற பழக்கத்தை விட்டுவிடும்! இனிமேல்.

முன்வரைந்த கடிதத்தில் முத்திரை நான் ஒட்டி
முச்சந்திப் பெட்டியிலே போட்டுவிட்டதுண்மை.
இன்று "உணவு முத்திரை"தான் ஒரே பேச்சே!
என்பதனால் தபாற்காரர் கையாடிடாரோ?....

நாலாண்டு பொறுத்திருக்கக் கூறுகிறாய் தம்பி!
நாலாண்டில் எவ்வளவோ நடந்துவிடல் கூடும்.
கோலோச்சும் மன்னவர்கள் குலைந்துவிடுவார்கள்.
கொடும்புயலும், பெருமழையும் அழித்துவிட நேரும்.
ஏலாமையால் மனைவி  வாட்டிலிருக் கின்றாள்.
ஏங்கியவள் அழுவதனைப் பார்க்கமுடி யாது.
காலையெழுஞ்   சூரியன்போலக் கன்னியெழி லோடு,
காத்திருக்கும் நங்கையைநீ ஏங்கவைக் கலாமோ?

வேலையொன்றுக் காகவேநீ வெளிநாடு போனால்,
வேல்சொடும், காரோடும் வருவேனென் கின்றாய்.
கூலிகளாய்      ஹொட்டல்களில் கோப்பைவெளி யாக்கிக்
கொண்டுவரும் பணங்காசை யார்விரும்பு வார்கள்?
ஏழைகளாய் வாழ்ந்தாலும் இழிதொழிலைச் செய்யோம்.
எவருக்கும் அடிபணியோம்! எங்களுயிர் மானம்
போலிகளாய் வாழ்வதிலோர் புண்ணியமும் இல்லை.
பொழுதுகளை வீணாக்கிப் புழுங்குவதும் தொல்லை.

நல்லிளைஞர் எல்லாரும் வெளிநாடு சென்றால்
நாம்பிறந்த பொன்னாடு நலிவடைந்து போகும்!
வல்லமையும், நல்லறிவும் வெளியேறி விட்டால்
வளமெல்லாம் வீணாகி வரண்டுவிடும் ஈழம்.
கல்வியறி வுள்ளவன்நீ காலம்வீ ணாகக்
கருதுவதோ? நம்நாடு கமத்தொழிலில் ஓங்கும்!
பொல்லாத ஆசைவழிப் போயுலை கின்ற
'பூர்சுவா' ப்பேய் மனப்பான்மைபூண்   டிருக்கவேண்    டாம்.

கையிலொரு காசுமில்லை என்கின்றாய் தம்பி!
காற்சட்டை சேட்டோடு சைக்கிளிலும் ஏறி
ஓயயாரமாய்ப் பவனி போகின் றீராமே?


 A Man Riding a Bike - Royalty Free Clipart Picture
ஒவ்வொரு நாளும்சினிமா பார்க்கின் றீராமே?
மெய்யாகக் கூறுகின்றேன் மினைக்கேடுதல் விட்டு
மேல்நாட்டு மோகமதும் தீரமுயல் வாய்நீ!
கையைக்காலை வருத்தி உழைப்பாயெம் போலே!
கவலையிலை.

                                      நலம் வேண்டும்,
                                      மாமா
                                      குழந்தைவேல்



மாமாவின் மகளுக்கு மடலொன்று வருகின்றது.
ஆக்கம்: குரு-இன்பம்
வீரகேசரி 07 .10 .79


அன்புநிறை மச்சாளுக்கு,
                                                          ஆசை அத்தான் எழுதுவது;
தலைக்குமேல் வெள்ளம் தடம்புரண் டோடும்போது
கலைபேசி யுன்னைக் களிப்பூட்ட வரவில்லை.
மாமாவும் அண்ணரும் மடல்போட்டுப் பேசுகிறார்,
மங்கையுனை அண்ணனுக்கு மணம்முடிக்க என்று.
இத்தனைக்கும் நம்கதையை ஏன்தான் மறைத்தாயோ?
இறுதியிலே சொல்லலாம் என்றிருக் கின்றாயோ?

தீப்பள்ளையக் கோவில் வனவாசத் திருவிழாவில்
கற்பூரச்சட்டி ஏந்திக் கன்னிநீ போகையிலே,
காவடியெடுத்து நானுந் தாளத்தோ டாடிவந்தேன்!
உருவேறிச் சாமி உக்கிரமாய் ஆடுதென்றார்!
உனைப்பார்த்ததால் அல்லோ அவ்வாட்டம் நான்போட்டேன்.
உண்மையில் யாரறிவார் உனையன்றி என் நடிப்பை?


கொம்மா முறுக்கிவிடக் கொப்பாநின் றாடுகிறார்.
மாமிக்கு என்னோடு மருந்துக்கும் விருப்பமில்லை.
முட்டாள், மடையன் என்றுமுடிவாகச் சொன்னாவாம்.
சுட்டாலும் வெண்சங்கு கரியாகப் போய்விடாதே!
நம்முடைய முடிவுபற்றிக் கொப்பருக்குச் சொல்லிப்பார்.
நலமில்லை என்றுகண்டால் வழியுண்டு கைவசத்தில்!

சீக்கிரமாய் மருந்துபோட்டுத் திருப்பிடலாம் நம்மிடத்தில்!
சீனியின் விலையிப்போ சிறகுவந் தேறிப்போச்சு.
உப்போதித் தருகின்றேன் சோத்துக்குள் சேர்த்துவிடு.
தப்பென்று இதைநீ தவறாக நினைத்தால்
வாடகைக் காரொன்றில் வந்துநான் நிற்கின்றேன்;
உடுத்த உடுப்போடு ஓடிவரச் சம்மதமோ?

மாமா வயலுக்கும் மாமிவாட் டிலுமென்றால்,
மாறாமல் இக்கடிதம் வந்துனக்குச் சேரும்.
தந்திபோல் உன்பதிலைத் தவறாமல் அனுப்பிவிடு.
நம்பியிருக் கின்றேன் நட்டாற்றில் விட்டிடாதே!
அண்ணனைப் பற்றியிங்கே அதிகம்நான் சொல்லவில்லை.
அவனிங்கே கமலஹாசன் அப்பாவுக்குச் சொல்லிவிடு.
                                                            
                                                                                          ஆசை அத்தான்
                                                                                           குஞ்சுத்தம்பி



மாமியின் மனக்குமுறல்!
ஆக்கம்: கோட்டையூர்க் கோகிலன்
வீரகேசரி 14 .10 .79


கரியமால் நிறத்தை வென்ற
கணவரே! என்னைப் பாரும்.
காலையில் எழுந்து நீங்கள்
கரவாகு வட்டை போனால்
மாலையில் திரும்பி வாறீர்.
மற்றவை அறிய மாட்டீர்.
பக்கத்து வீட்டில் உள்ள
பார்வதிப் பிள்ளை யோடு
பாஞ்சாலி கோயில் கொண்ட
பள்ளையம் போனாள் பிள்ளை.
கற்பூரச் சட்டி ஏந்தி
நம்மகள் வலம் வந்தாளாம்.
காவடி எடுத்த அந்தக்
கந்தையர் மகன் கண்டானாம்.
பிள்ளையைக் கண்டு அந்தப்
பேய்மகன் பட்ட பாடு
சொல்லிட முடியா தென்று
சொன்னாள் 'பாறி' தானே.
ஆலயம் கோயில் செல்லும்
ஆண்களோ மிகவும் மோசம்!
ஆண்கள்தான் மோசம் என்றால்,
பெண்களும் பெரிய மோசம்!
புயலினால் சிதைந்த வேலி
புதுப்பித்து மூன்று மாதம்.
எம்மகள் ஏறி ஏறி
இரண்டடி பதிஞ்சு போச்சு!


என்னடா புதின மென்று
எண்ணிநான் எட்டிப் பார்க்கக்
கண்ணாடி அணிந்து அந்தக்
கந்தையர் மகன்தான் நின்றான்.
"எனக்கவர் வேணும்" என்று
எம்மகள் துணிந்து சொன்னாள்.
"என்னடி சொன்னாய்?" என்று
ஏசியே இரண்டு போட்டேன்.
பிறகவன் வரவு மில்லை.
பிரச்சினை எதுவு மில்லை.