Author: ஹேமா
•4:12 AM
மூண்டு நாளா ஒரே அடை மழை.இது நாலாம் நாள்.ஈரலித்த காற்றோடு பொழுது விடிகிறது.ஆனால் வானம் வெளித்தாலும் மழையின் அறிகுறியும் கலந்தே.சூரிய வெளிச்சம் வந்தும் சூடாயில்லை பூமி.வளவு முழுக்க மரங்கள் முறிந்த கொப்பும் கிளையும் பழுத்தலும் பச்சையுமாய் ஒரே குப்பை.வேலிகள்கூட பாறி விழுந்துகிடக்கு.வீடு கட்டும் வேலை வேற நடந்துகொண்டிருக்கு.அதனால குழியும் குண்டுமாய்க் கிடக்கு.ஒரு பக்கம் மணலும்,சல்லிக் கல்லும் குவிச்சபடி.இன்னும் சொட்டுச் சொட்டாய் சொட்டும் நீர்த்துளிகள் சொட்டிக் கோடு கிழித்து ஓடி அந்தப் பள்ளங்களை நிரவிக்கொண்டிருந்தது.

தெருவில் 2-3 நாளைக்குப் பிறகு மனிதத் தலைகள் தெரிகின்றன்.திரும்பவும் மழை வரலாம் என்பதால் வேலுப்பிள்ளை அண்ணை கடை வாசலில சனம்.பறவைகளும் உடல் சிலுப்பிச் சந்தோஷச் சத்தம் போட்டபடி குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக்கொண்டிருந்தது.

பிரிந்து கிடந்த மேகங்கள் ஒன்று சேர்ந்துகொண்டிருந்தாலும் வானின் ஒரு மூலையின் அடுத்த அடை மழைக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.அவகாசங்களை அத்தனை உயிரினங்களும் பயன்படுத்திக்கொண்டிருந்தன.அப்படி ஒரு அடை மழை மழை தந்த ஆர்ப்பாட்டத்தை அந்தரத்துச் சூரியன் ரசித்தபடியே சின்னதாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.

ராகுல் வாசலில் ஈரலிப்பாய் இருக்க,நிலம் படாமல் குந்தியபடி வளவை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

"ச்ச....இப்பிடியொரு மழை.வந்தா மனுசரை இப்பிடி நாறடிக்கும்.இல்லாட்டிக் காயவைக்கும்.உலகத்தில் ஒண்டும் ஒழுங்கில்ல.இந்த மழைக்குள்ள எப்பிடி மேசனும் மரவேலை செய்றவையளும் வருவினம்.போக வரக்கூட முடியாம மரங்கள் வேற முறிஞ்சுகிடக்கு.நான்தான் கொஞ்சம் ஒதுக்கிவிடவேணும்."

இது அம்மான்ர நாச்சாரம் வீடு.அம்மா எனக்குத்தான் தந்தவ.அண்ணா அம்மான்ர சொல்லுக் கேக்காம தன்ர எண்ணத்துக்குக் கல்யாணம் செய்துகொண்டு போய்ட்டான்.அப்பா நாங்கள் சின்னனாய் இருக்கேக்கையே மாரடைப்பு வந்து எங்களை விட்டுப் போய்ட்டார்.அம்மாதான் கஸ்டப்பட்டு எங்களை வளர்த்தவ.

அம்மான்ர சீதன வீடு இது.தாத்தாதானாம் சின்னச் சின்னதா சேமிச்சு அம்மம்மான்ர ஆசைப்படி நிறையக் கஸ்டத்தோட கட்டின வீடாம்.அம்மா அடிக்கடி "இது வீடில்லை ராசா.தாத்தா அம்மம்மான்ர கோயில்" எண்டு சொல்லுவா.அவையளும் இந்த வீட்ல இருந்துதான் செத்துப்போனவை.

"அம்மாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல வீட்டை இடிச்சு இப்பத்தைய நாகரீகத்தோட கட்டுறது."

"ஏனப்பு இப்பிடியே வச்சுக்கொண்டு முன்னுக்கு நீ விரும்புற மாதிரிக் கட்டன்.நானும் இதுக்குள்ள கிடந்துதான் சாகவேணும்."

இஞ்சாலப் பக்கம் ஜானுவோ "என்னப்பா மழை வந்தா நாலு அறையும் நனைஞ்சு போகுது.பிள்ளைகளை எந்த நேரமும் கவனிச்சுக்கொண்டு இருக்கேலாது.நான் குசினிக்குள்ள இருக்க அவங்கள் மழைக்குள்ள கூத்தடிக்கிறாங்கள்."

முதல் அம்மா சொன்னபடி முன் பக்கத்திலிருந்து இணைச்சு அழகாக்க நினைச்ச ராகுல்,பிறகு ஏனோ மனம் மாறி இடித்துக் கட்டவே முடிவெடுத்துவிட்டான்.அம்மாவைச் சமாதானப்படுத்தியும் விட்டான்.பாவம் சீதாம்மா.வேறு வழி என்ன அவவுக்கு ?

ஜானு அடுப்பங்கரையில் அலுவலாய் இருந்தாள்.பிள்ளைகள் கணணியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு மாத பாடசாலை விடுமுறை.அதனால் நானும் இரண்டு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு துபாயிலிருந்து வந்திருக்கிறேன்.மழை படுத்துற பாட்டைப் பார்த்தால் வீட்டு வேலையை முடிச்சிட்டுப் போகேலாது போல இருக்கு.

ஜானுவுக்கு காஸ் அடுப்பு வாங்கிக் குடுக்காட்டி என்னத் திண்டு கை கழுவியிருப்பாள். கறண்டும் மழையால நிண்டு நிண்டு வருது.ரெண்டு பிள்ளைகள்,எப்பவும் முனகினபடியே படுத்திருக்கிற அம்மா இதுக்குள்ள பெரிய வளவு வீடு எல்லாத்தையும் எப்பிடித்தான் அவள் கவனிப்பாள்.தொலைபேசியில சொல்லேக்கை நானும் திட்டுவன்.

"பிள்ளைகள் வளர்ந்திட்டினம்.அவையளின்ர வேலைகளை அவையளே செய்யினம்.அம்மாவும் தன் வேலைகளைப் பார்த்துக்கொள்றா.நீ என்ன வெட்டி விழுத்துறாய்" எண்டு.இங்கயிருந்து பார்க்கத் தெரியுது.கொஞ்சம் கஸ்டம்தான்.பாவம்தான் ஜானு.

"அம்மா பசிக்குது" என்று மகனின் குரல் கேக்குது.

"அப்பா எங்கயடா"

"அவர் கேற்றடியில குப்பை அள்ளிக்கொண்டு நிக்கிறார்."

அம்மாவின் குரலும் "பிள்ளை...தம்பி" எண்டு கூப்பிட்டுக் கேக்குது.

ஒற்றை அறையை இப்போதைக்கு வச்சுக்கொண்டு நான் ஜானு பிள்ளைகள் அதுக்குள்ளதான் சமாளிக்கிறம்.அம்மாவை மாட்டுக் கொட்டிலுக்குள்ளதான் கட்டில் போட்டுக் கொடுத்திருக்கு.வீட்டு வேலை முடியிற வரைக்கும்தானே.அம்மா அழ அழ பசுமாட்டையும் ஆட்டுக்குட்டியையும் வித்திட்டன்.நல்ல வேளை இந்த மழைக்குள்ள அதுகளும் நிண்டிருந்தா ஜானுபாடு எவ்வளவு கஸ்டம்.சீதாம்மா கனவில் அந்தப் பசுவும்,அவவின் ஐயாவும் அடிக்கடி வந்து போயினமாம்.அம்மா என்னைக் காணேக்கையெல்லாம் புலம்புறா.

"உங்களுக்கும் ஏலாமப் போச்சு.எப்பிடியம்மா இனி மாடும் ஆடும்..."சமாதானம் சொல்லி முடித்தான் ராகுல்.

பக்கத்து வீட்டு அம்மாச்சி அம்மாவை விசாரிக்கிறா.
"எப்பிடித் தம்பி அம்மா இருக்கிறா.இந்தச் சனியன் பிடிச்ச மழையால வந்து பாக்கவும் முடியேல்ல.பக்குவமாப் பாத்துக்கொள் தம்பி.பாவமது.கொப்பரும் செத்துப்போக உங்களோடயே அதின்ர காலமும் போய்ட்டுது.இனியாலும் அது சந்தோஷமாச் சாகவேணும்.என்னட்ட எல்லாம் சொல்லும்.சொல்லு வாறனாம் எண்டு" என்றபடி ஏதோ சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தா.

"அப்பா.....அம்மா சாப்பிட வரட்டாம்"

"சரி சரி வாறன்.போடச்சொல்லு இப்ப வந்திடுறன்."என்றபடி கை கால் அலம்பிக்கொண்டு சாப்பிட உடகார்ந்தான் ராகுல்.

"என்னப்பா நான் ஒரு விஷயம் சொன்னனான் யோசிச்சீங்களோ" எண்டபடி ஜானு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்.

"ஓமப்பா யோச்சிருக்கிறன்.திடீரென்று ...பாப்பம் செய்யலாம்.இப்ப சாப்பாடு தாரும்."என்று வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான்.

"உங்க...உவரைப் பாருங்கோ.நாங்களே இருக்க இடமில்லாம சமைக்கிறது எங்க சாப்பிடுறது எங்க படுக்கிறது எண்டு தெரியாமல் திண்டாடுறம்.இவரும் வீட்டுக்குள்ள படுக்க வேணுமாம்.அடி...வெளில போ பிறகு சாப்பாடு வைக்கிறன்.அம்மான்ர கட்டிலுக்குக் கீழ ஒரு சாக்குப் போட்டிருக்கிறன்.அது குளிருதாமெல்லோ மாப்பிள்ளைக்கு"

என்று திட்டிக்கொண்டே நாயை வெளியில் துரத்த அது பின் பக்கமாய் ஓடின ஓட்டத்திலே பலமாகக் குரைக்கத்தொடங்கியது.

"ஏனப்பா அடிச்சனியே.பாவம் ஏன் இப்பிடிக் குரைக்குது" என்றபடி பின் பக்கம் போன ராகுல்

"அம்மா....அம்மா ஏனம்மா இங்க வந்தனீங்கள்.எங்களைக் கூப்பிட வேணாமே" சேற்றில் விழுந்துவிட்ட சீதாம்மா எழும்ப முயற்சித்துகொண்டிருந்தா.

"இல்லையப்பு கூப்பிட்டனான்.உங்களுக்குக் கேக்கேல்லையோ என்னவோ.சரி நானே வருவமெண்டுதான் வந்தன்.அந்தச் சருகுக்குள்ள தடி தண்டுகள் கிடந்து தடக்குப் பட்டு விழுந்திட்டன்.எழும்புவமெண்டா வழுக்கி விழுறன்."

"எங்கையெண்டாலும் அடிபட்டுப்போச்சோ"

"இல்லை இல்லை எனக்கு ஒண்டும் ஆகேல்ல.நோகேல்ல.என்னை ஒருக்கா பிடிச்சுக்கொண்டுபோய் விடு.என்ர உடுப்புகளை மட்டும் எடுத்துத் தந்துபோட்டுப் போ."

"சரி உடுப்புகளை மாத்துங்கோ.சாப்பாடு எடுத்துக்கொண்டு வாறன்" என்றபடி பிடித்துக்கொண்டு வந்து விட்டு கொடியில் கிடந்த உடுப்புகளை எடுத்துக் கொடுத்துப் போனான் ராகுல்.

பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.மழையும் பெய்துகொண்டிருந்தது.இரவாக மின்சாரம் தடைப்பட....

"எங்க நெருப்புப் பெட்டி"

"அண்ணா இங்க இரடா பயமாக்கிடக்கு."

"பிள்ளை எனக்கும் மெழுகுதிரி கொண்டு வா பிள்ளை.அப்பிடியே நுளம்புத் திரி இருந்தாலும் கொண்டு வா.நுளம்புக் கடி தாங்கேலாமக் கிடக்கு" எண்டு சீதாம்மாவின் குரலும்.

இருட்டுக்குள் கைத்தொலைபேசியும் அலற ராகுல் பேசத்தொடங்க மேசன் தான் சொன்னார்."எப்பிடியும் 10 நாட்களாவது வேலை செய்யமுடியாதாம்.ஓடர் பண்ணின சீமெந்து வரேல்லையாம்."

ராகுலுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது மழைக்கு மேல.
குளிரும் காற்றும் நுளம்பும் பூச்சிகளுமாய் இருள் விடியத் தொடங்கியது.

ராகுலுக்கு ஜானு சொன்ன யோசனை நல்லதாகவே பட்டது.

"இஞ்சப்பா மழை கொஞ்சம் விட்டிருக்கு.இந்த இடைக்குள்ள பிள்ளைகள் ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தலை மயிரையும் வெட்டிக்கொண்டு,வரேக்க மீனும் மரக்கறிகளும் வாங்கிக் கொண்டு வாறியளே.நாளைக்கு மழை கொஞ்சம் குறையேக்க நிறைய வேலைகள் கிடக்கு.மேசன் வராட்டிலும் நாங்க செய்ய வேண்டியதுகளைச் செய்து வைக்கலாம்."

"சரி நான் கூட்டிக்கொண்டு போய்ட்டு வாறன்.அம்மாவையும் கூட்டிப்போகவேணும்.ராஜன் ஆட்டோ கூப்பிட்டால் உடன வருமோ?"

"ஓம் ஓம் வருவார்.நான் சொல்லி வைக்கிறன்...ஒரு மூன்று மணி போல வரச்சொல்லி."

"சரி...சரி கறிவேப்பிலை கொப்பும் முறிஞ்சுகிடக்கு.அம்மாவுக்குப் பிடிச்ச நல்ல துவையலும்,தக்காளிப்பழச் சொதியும்,சின்னமீனும் பொரிச்சுவிடும் போதும் இண்டைக்கு. நான் வாறன்" என்றபடி பிள்ளைகளோடு வெளியே போனான் ராகுல்.

சீதாம்மாவிடமும் போய்ச் சொன்னான்
"அம்மா வெளிக்கிட்டு நில்லுங்கோ.நான் வந்தவுடன சாப்பிட்டிட்டு டொக்டரிட்ட போய்ட்டு வருவம்."

"ஏனப்பு எனக்கென்ன.நல்லாத்தானே இருக்கிறன்.வேலை வெட்டி செய்யேலாது. விழுந்தெழும்புறன் எண்டா அது எனக்கு வயசு போய்ட்டுது.
இதுக்கு டொக்டரிட்ட போய்க்காட்டி ஒண்டும் செய்யேலாது."

"இல்லையம்மா நேற்றும் விழுந்து போனியள்.சாப்பிட்டிட்டு போய்ட்டு வருவம்." ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்தாள் சீதாம்மா.

ராகுல் வர,எல்லோருமாகச் சாப்பிட்டும் முடிய ஆட்டோவும் வந்தது.ராகுலும் சீதாம்மாவும் புறப்பட சீதாம்மாவின் நாய் சீதாம்மாவை தடவிச் சுற்றிப் போனது.

போகும் வழியில் "ஏனப்பு...எங்கட டொக்டரிட்ட போகாம எங்க போற ?"

"இது வேற டொக்டரம்மா.ஜானு இங்க கதைச்சு வச்சிருக்கிறாள்.காசும் கட்டியிருக்கு.எனக்கும் இங்க நல்லதெண்டு படுது அதுதான்" என்றான்.

கதைத்துக்கொண்டிருக்க ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவை ஆட்டோ ராஜனிடம் "இதிலதான் அண்ணை நிப்பாட்டுங்கோ.நிண்டுகொள்ளுங்கோ நான் வந்திடுவன்."

"இதிலையோ அண்ணை !"எண்டு கேள்விக்குறியோடு பார்த்த ராஜன் நிப்பாட்டினார்.

இறங்கி நடந்தனர் சீதாம்மாவும் ராகுலும்.இவர்களைக் கண்டதுமே முதலே அறிவித்தல் கொடுத்ததுபோல ஒரு தாதி வந்து மிகவும் அன்போடு அணைத்துக் கூட்டிப்போனார்.

தாதியோடு வரவேற்பறையில் இருந்திவிட்டு டாக்டருடன் கதைத்து வருவதாகப் போனான் ராகுல்.சீதாம்மா சுற்றும்முற்றுமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.அழகாகப் பூமரங்களும் புற்தரைகளுமாய் அழகாக இருந்தது சுற்றாடல்.சில வயதானவர்கள் அங்குள்ள கதிரைகளில் காற்றாட இருந்தார்கள்.

ராகுலும் டாக்டரும் வந்தார்கள்."அம்மா இப்போதைக்கு நீங்கள் இங்கதானாம் இருக்க வேணும்.அங்க வீட்லயும் குளிரும் நுளம்புமாய் அவஸ்தைதானே.வீடும் கட்டி முடிய நீங்களும் வரலாம்."சீதாம்மாவின் வாயில் எதுவும் வரவில்லை.மனம் மட்டும் ஏதோ உளறிக் கொண்டிருந்தது.சொன்னாலும் இப்போ கேட்கும் மனநிலையிலும் ராகுல் இல்லை.

சீதாம்மாவைக் கூட்டிப்போனார்கள் நான்கு பேர் இருக்கும் ஒரு அறையொன்றைக் காட்டி."இனி இதுதான் அம்மா உங்கட இருப்பிடம்.உங்கட வயசை ஒத்தவையளும் இருக்கினம்.பொழுதும் போகும்.நாங்களும் அடிக்கடி வந்து பாத்திட்டுப் போவம்தானே.என்ன ஒரு மாசம்தானே."என்றபடி ராகுல் நாளை வருவதாகச் சொல்லி டாக்டருடன் கதைத்தபடியே போய்க்கொண்டிருந்தான்.

மழை திரும்பவும் அடித்துக் கொட்டத் தொடங்கியது.சீதாம்மாவின் மனமும் இடியும் மின்னலும் புயலுமாய் நனைந்துகொண்டிருந்தது.

அடுத்த நாள் உடுப்புகளோடும் ஜானு பிள்ளைகளோடும் வந்து பார்த்துப் போனார்கள்.இரண்டு மூன்று நாளுக்கொருமுறை வந்து போனார்கள்.ஒரு வாரத்தின் பின் தான் சீதாம்மாவுக்குச் சரியாக உணர முடிந்தது அது ஒரு வயோதிபர் மடம் என்று.

இரண்டு நாள்... மூன்று நாள் ...என்று ஒரு வாரமென்று...இப்போ குறைந்தே விட்டது.

இரு வாரத்தின் பின் எல்லோரும் வந்தார்கள்.சீதாம்மா
அழத்தொடங்கிவிட்டா. தான் வரப்போகிறேன் வீட்டுக்கு என்று.பிள்ளைகள் கூட்டிப்போகலாம் என்றார்கள்.இல்லை வீடு சரியாகத் திருத்தப்படட்டும் என்று தவிர்த்துப் போனார்கள்.

பின்னொருநாள் வீடு மழை காரணமாகத் திருத்தப்படவில்லையென்றும் சீதாம்மாவை இங்கேயே இருக்கும்படியும் அடுத்தமுறை தான் வந்து கூட்டிப்போவதாகவும் ஒரு தொலைபேசியில் செய்தி சொல்லிவிட்டு அணைத்துவிட்டான் அன்னை உறவை ராகுல்.

சீதாம்மா இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறா அந்த வயோதிபர் மட வாசலில் குந்தியபடி.யாரும் வருடம் கழிந்தும் வந்தபாடில்லை.ஆனால் சாப்பாடும்,படுக்கைக்கும் பணம் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லி அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

எப்போவாவது ஜானு குழந்தைகள் வந்து பார்த்துப் போனார்கள்.ராகுலும்
3 - 4 மாதத்திற்கொருமுறை தொலைபேசியில் கடமைபோலப் பேசுவான் ஏதாவது.

ஆனால் நாச்சாரம் வீடு பற்றி மட்டும் ஒன்றுமே சொல்லமாட்டான்.
சீதாம்மாவின் மனமோ நாச்சாரம் வீட்டுக்குள்ளேயே அலைந்தது.வீடு முழுதுமாய் இடிக்கப்பட்டதும்,கராஜ் கட்டுவதற்காகத் தாத்தா வைத்த தென்னை மரம்கூட உயிர் விட்டதும் சீதாம்மாவுக்குத் தெரியாமலே போனது.

அதே அடை மழை இன்றும் இன்னும் பெய்துகொண்டிருக்க்கிறது.
சீதாம்மாவின் மனதிலும் கண்களிலும்.
Author: வடலியூரான்
•9:57 PM
மூத்தவன் சுகமா முகாமிலையிருந்து வந்தால் முதலிப் பேத்தியம்மாளே அவனை உனக்கு காவடி எடுக்க வைக்கிறன், இடையிலை நிக்கிற இளையவன் ஒரு பிரச்சினையுமில்லாமல் இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்தால் இத்திமரத்தாளே எனரை இரண்டாவது பெட்டையினரை மூத்த பெடியன் காவடியெடுக்க, நான் பாற் செம்பு எடுப்பன்,எட்டிலை செவ்வாயிருக்கிற என்ரை கடைசிப் பெட்டைக்கு இந்தச் சம்பந்தமாவது முற்றாகி வந்தால் முள்ளு மிதி போட்டு நான் பாற்செம்பு எடுக்கிறன்,என்றை புருசன் ஆசுப்பத்திரியாலை சுகமா வந்து சேர்ந்தால் எனரை அம்மாளாச்சியே என்றை இரண்டாவது பெடியனை உனக்கு காவடியெடுக்க வைச்சு, அஞ்சு கொத்துப் பானையிலை பொங்கி,ஒரு பெரிய பிலாப்பழமும் வெட்டிப் படைக்கிறன் என்பது போன்ற நேர்த்திகள்( கடவுளை நோக்கி வைக்கப்படும் விண்ணப்பம்) சாதாரண, சராசரியான ஈழத்து தாய்மார்களினால் அவர்களின் இஸ்ட தெய்வங்களிடம் வைக்கப்படுவனவாகும்.



நேர்த்தி வைக்கப்பட்ட கோவில்களுக்கு,நேர்த்தி செலுத்த வேண்டிய தினங்களில், காவடியிலோ,பாற்செம்பிலோ, கரகத்திலோ தங்களை வருத்திப் பாலை சுமந்து சென்று அந்தந்தக் கோவில்களின் சுவாமிகளுக்கு அபிசேகத்திற்கு கையளிப்பதால், த்மது பாவங்கள் களையப்பட்டு, நேர்த்திகள் நிறைவேறுகின்றன அல்லது நிறைவேற்றப் படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.



பாற்காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி,துலாக் காவடி, செடில் காவடி, ஆனந்தக் காவடி, ஆட்டக் காவடி எனப் பல காவடிகள் உள்ளன.இதிலே ஆனந்தக் காவடி, பால் காவடி என்பன செடில் குத்த இயலாதவர்களாலும் பறவைக் காவடி,தூக்குக்காவடி போன்றவை கடும் நேர்த்திக் காரர்களாலும் எடுக்கப்படுபவையாகும்.



செடில் காவடி தான் பெரும்பாலானவர்களால் எடுக்கப்படும், பம்பலான, பார்ப்பதற்கு ரசிக்கக்கூடிய, கண்டு களிக்கக்கூடியதாகவிருக்கும்.அவன் எடுக்கிறான், நான் எடுத்தாலென்ன என திடுதிப்பென ,திடீரென முடிவெடுத்து கோஸ்டியாகக் களமிறங்கக்கூடியதாக இருக்கும்.



கடுமையான நேர்த்திகாரர், காவடி எடுக்கிற கோயிலை விளக்கு வைச்ச தினத்திலையிருந்து, மச்சம்,மாமிசம் சாப்பிடாமல் இருந்து, காவடியோ,பாற்செம்போ எடுக்கிற நாளிலை சாப்பிடாமல் விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டு போய், கோயிலை இறக்கினாப் போலை தான் சாப்பிடுவினம்.




காவடி எடுக்கிறதெண்டால் செடில் குத்தினாத்தான் மரியாதை."ஆ.. அவன் ஆயிரதெட்டுச் செடில் குத்தினானாம், கையிலை,நெஞ்சிலை எல்லாம் அலகு குத்தினானான்ம், இத்தினை செடிலை அறுத்தானாம் எண்டதிலை தான் அவன்ரை வீரம்??? தங்கியிருக்குது.செடில் எப்பவும் வந்து வைரவருக்கு முன்னலை வைச்சுத் தான் குத்தப்படும். பறை எல்லாம் சுத்தி நின்று அடித்துக் கொண்டிருக்க அந்த அடியிலேயும், கூடி நிக்கிற சனத்தின்ரை அரோகராக் கோசத்திலேயும் வலி பெரிசாகத் தெரியாது.



வைரவருக்கு ஒரு தேங்காயை அடிக்கச்ச சொல்லிப்போட்டு, முதல் வாய்க்குத் தான் அலகு குத்தப்படும்.எண்டால்த்தான், முதுகிலை குத்தேக்கை வலிச்சாலும் ஆளாலை கத்தேலாமல்ப் போடும் கண்டியளோ.பிறகு செடில் எல்லாம் குத்தினாப் போலை அப்பிடியே காவடியைத் தோளிலை ஏத்தாமல் ஒருக்கால் கோவிலை சுத்திவந்திட்டு, பிறகு ஐயர் காவடியை,பாற்செம்பைத் தூக்கி ஏத்திவிட்டாப் பிறகு, அப்பிடியே ஆடிக் கொண்டு வெளிக்கிடவேண்டியத் தானே.ஒவ்வொரு சந்திகள், கோயில்கள் எல்லா இடமும் நிண்டு, ஆடி, கோயிலுக்குப் போய்ச்சேர எப்பிடியும், சாமம் ஆகிப் போடும்.



சின்னனிலையெல்லாம் எப்பாடா கோவிலிலை "காவடி நாள்" வரும் எண்டு காத்துக் கிடக்கிறது. காவடி பார்க்கவென்ற பொதுவான காரணத்தை தாண்டி, இன்னுமொரு கொஞ்சம் ஸ்பெசலான காரணமும் உண்டு.ஆண்டு இரண்டு,மூன்று களில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் படிக்கிற புத்தகத்துக்கை வைக்கிறதுக்கு மயிலிறகுகளை இந்தக் காவடிகளிலை ஆட்டையைப் போடலாம் எண்டு தான் உந்தக் காத்திருப்பெல்லாம்.




புத்தகதுக்கை மயிலிறகை வைத்துப் பவுடர் போட்டால் அது குட்டி போடும் எண்டு முந்தி யாரோ இழக்கின கதைய நம்பி பவுடர் எல்லாம் போட்டிருந்திருக்கிறோம்.அதுமட்டுமில்லாமல் அந்த மயிலிறகு உள்ள புத்தகத்தை திறக்கும் போது வானத்தின் கண்ணில் அது பட்டுவிட்டால் குட்டி போடாது எண்டிறது அடுத்த புழுகு.ஆனால் அது குட்டியும் போடயில்லை ஒரு சுட்டியும் போட்வில்லை.





ஆனாலும் வானம் பாத்திடும் எண்டதுக்காகவேண்டி, பக்கத்திலை இருக்கிற நண்பனட்டை என்னட்டையும் மயிலிறகு இருக்குது எண்டதை காட்டாம்ல் இருக்க எப்பிடி முடியும்? மனம் விடாதே.அவனுக்குக் காட்டிறதுக்காக மேசைக்குக் கீழை போய் புத்தகத்தை மேல் பக்கமாய் படக்கென்று திறந்து,நண்பனுக்குக் காட்டி, வானத்துக்குக் காட்டாத கெட்டிக் காரர் நாங்கள் .




நண்பனுக்குத் தான் குடுக்க் மாட்ட்ம்.ஆனால் இந்த மயிலிறகை நண்பிகள் கேட்டால் மட்டும் பல்லையிளித்துக் கொண்டு எடுத்துக் கொடுத்து,செட்டையடித்து பேட்டுக் கோழியை கரக்ற் பண்ண வெளிக்கிடும் சேவலின் புத்தியும் எங்களுக்கு இருந்ததுவும் மயிலிறகின் மெல் ஈர்ப்பு வருவதற்கு அல்லது மயிலிறகை ஆட்டையைப் போட வேண்டியதொரு தேவையை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னுமொரு காரணம்.




ஆனால் மயிலையோ,மயிலிறகையோ காண ஏலாத எங்கள் ஊரில் மயிலிறகை எடுப்பதற்குரிய ஒரே வழி இந்தக் காவடிக்ளின் போது எடுப்பது தான்.ஆனால் காவ்டியில் உள்ள மயிலிறகு முறிந்து விழுந்து,முறிந்த இடத்தில் நான் நின்று, அந்த இடத்தில் என்னைப் போல மயிலிறகு பொறுக்குவதற்கு காத்துக் கொண்டு நிற்கும் என் சகபாடிகளோடு போட்டி போட்டு, அதுக்குள்ளாலையும் எனக்கு மயிலிறகு கிடைக்கிறது என்பது லேசுப் பட்ட காரியமில்லை.



ஒரே வழி காவடியிலியிருந்து ஆட்டையைப் போடுறது தான்.அதற்கு பொருத்தமான நேரம், காவடிகள், ஆடுபவர்களின் தோளில் ஏற்றுவதற்கு முதல் ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது எடுப்பது தான்.ஆனாலும் அது ஒண்டும் இழுத்தெடுக்க வராது..வழி? பிளேட்டோடை களத்திலை இறங்கி, சத்தம் போடாமல் மண்டி,மண்டி காவடிக்குப் பக்கத்திலை போய் நிண்டு கொண்டு, அறுக்கிறது மாதிரி வேறை யாருக்கும் தெரியாமல் அறுத்தெடுத்துக் கொண்டு போறது தான் வழி.அப்பிடித் தான் ஒருக்கால் செய்ய வெளிக்கிட்டு, அந்தக் காவடிக்காரர் திரத்த வெளிக்கிட , குண்டியிலை குதிக்கால் அடிபட ஓடினதெல்லாம் பழங்கதை.





காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.






அது மட்டுமில்லாமல் முதுகிலே ஆழமாக குத்தப் படும் செடிலினால் ஏற்படும் வலியையும் கூட மறங்கடிக்கச் செய்யும்.செடில் அறுத்து, குருதி கொட்டினாலும் துடி துடித்துவிடாமல் தடுத்துவிடக் கூடியது. "டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு " என்று அடிக்கும் அடிக்கு ஆடுபவன், செடில் பிடிப்பவன், காவடிக்கு முன் பைலா ஆடுபவன்,காவடி பார்க்க வந்தவன் எனப் பலரையும் ஆட வைக்கும்.அந்தமாதிரியான ஒரு இசைக் கருவி.



(உங்களுக்காக அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் என்னிடமிருந்த ஒரு காணொளி.)



காவடி போற ரோட்டாலை சனம் வாளிகளிலை தண்ணியள்ளிவைச்சிருக்குங்கள்.அந்தத் தண்ணியை காவடி ஆடுறவனுக்கு ஊத்திறாங்களோ இல்லையோ செடில் பிடிக்கிறவனுக்கும், பைலா ஆடுறபவனுக்கும், சேட்டுக் கழட்டாமல் மாப்பிளை போல வந்து பெண்டுகளுக்கு நல்லபிள்ளை போல நடிக்கிறவனுங்களுக்கும் ஊத்துவாங்கள்.அவங்களைச் சீண்டுவதும் அவங்களுக்கு தண்ணியை ஊத்திப் போட்டு அதைப் பார்த்த சரக்குகள் ஏதாவது ரியாக்சன் குடுக்குதுகளோ எண்டும் ஒரு லுக் விடுவாங்கள்.




காவடியாடுறவங்கள் நேர்த்தி எண்டு சொல்லி எடுத்தாலும், ஆனால் மற்றப் பெடியளுக்கெல்லாம் அது பம்பலாய்ப் போடும்.சரக்குகள் பார்க்குது எண்டால் காவடி ஆடிறவங்கள் நல்லா உன்னி இழுத்து, செடில் அறுக்க வெளிக்கிடுவாங்கள்.சிலவேளையிலை தௌவல் ஒண்டு தான் காவடி எடுத்துது எண்டால், அது பெரிசா இழுத்து ஆட்டாது.ஆனால் செடில் பிடிக்கிறவன் விடமாட்டான்.தான் இழுத்து அறுத்துப்போடுவான்.






இண்டைக்கும் எங்களுக்கெல்லாம் ஏதாவது பாட்டியளுக்குப் போனாலும் அந்தக் காவடிக்கு ஆடிற மாதிரி ஆட்டம் ஒருக்காலெண்டாலும் ஆடாட்டில் ஏதோ பாட்டியிலை ஆடினமாதிரி ஒரு பீலிங் வராதாம் கண்டியளோ.

எஙக்டை ஊரிலையும் பண்டாரி அம்மன்கோவிலிலை ஒவ்வொரு சித்திரை வருச்ப் பிறப்பண்டைக்கு பின்னேரம் தான் காவடியும், அடுத்தநாள் வேள்வியும் நடக்கும்.இந்தமுறையும் அதுக்குத்தான் போறதுக்காண்டி நாளைக்கு வெளிக்கிடிறன். போனால்த் தானே செடிலுகள் பிடிச்சு,கூத்துகள் அடிச்சு, முசுப்பாத்தியா இருக்கும்.அதுதான் அவசரமா ,திருப்பியும் பாக்காமல் எழுதிப் போட்டிட்டிப் போறன்.ஆச்சியும் பிறகு கோவிச்சுப் போடுவா, எல்லாரும் கலியாண வீட்டோடை தன்னைத் தனிய விட்டுட்டுப் போட்டாங்களெண்டு. அது தான் எதோ படக்கெண்டு எழுதிக் கிடக்குது.ஏதாவது பிழையள் கிடந்தால் சொல்லுங்கோ.

உன்னி - கொஞ்சம் ஊண்டி இழுத்தல் எண்டு சொல்லலாம்
தௌவல் - நோஞ்சான்/ஏலாவாளி மாதிரியான ஆக்கள்
செடில் - முதுகிலே அல்கால் குத்த்ப்படுவது
Author: HK Arun
•10:30 AM
குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

"குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிறியவர்கள்" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.

உறவுமுறைச் சொற்கள்

யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "குஞ்சையர்" போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.

சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்

தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; "குஞ்சம்மா", "குஞ்சாச்சி" என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.

சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி

சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; "குஞ்சித்தம்பி", "சின்னக்குஞ்சு" என அழைக்கும் வழக்கும் உள்ளது.

சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு

மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் "குஞ்சு" எனும் சொற்பதம் "சிறிய" எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.

ஆண் உறுப்பு

தமிழரிடையே ஆணுறுப்பிற்கு "குஞ்சு" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) "குஞ்சு" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம்.

விக்கிப்பீடியாவில் நான் எழுதியது.