Author: ஃபஹீமாஜஹான்
•8:32 AM








எங்கள் ஊருக்கு மிகச் சமீபமாக “வீரபாகுகல” என்ற ஒரு சிறு குன்று உள்ளது.இவ்விடத்தில் வீரபாகு மன்னன் தனது மாளிகையை அமைத்திருந்ததாகப் பெரியவர்களின் வாய்மொழிக் கதைகளினூடாகக் கேட்டறிந்துள்ளோம்.



அரசனது கோட்டையின் வாயிற்காப்பாளனாக எங்கள் ஊரைச் சேர்ந்த ‘குஞ்சுடையார்’ என்ற முஸ்லிம் ஒருவர்தான் கடமை புரிந்துள்ளார.; அரசனால் அவருக்குக் கொடுத்திருந்த தோள் பட்டி, உடைவாள், அரசனால் கையளிக்கப்பட்ட ‘சன்னச’ என்பன சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய குடும்பத்தாரிடையே இருந்துள்ளன. அதனை அவர்கள் பழம்பொருள் சேகரிப்போரிடம் சில்லறைக் காசுக்கு விற்றுவிட்ட படியால் தடயங்கள் கூட இல்லாமற் போயின.




முற்காலத்தில் “மாவீ” எனப்படும் நெல் விதைக்கப்பட்டு வயல்கள் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த வேளையில் அரசன் குதிரை மீதமர்ந்தவாறு ஊர் சுற்றிப் பார்த்த பொழுது அழகாகக் காணப்பட்ட நெல்வயல் வெளியைக் கண்டு இது தான் “மாவீவெல” எனப் பெயரிட்டானாம். காலப் போக்கில் இந்தப் பெயர் மருவி தற்காலத்தில் “மாய்வெல” எனப் பெயர் பெற்றுள்ளது.


மாய்வெல ஊரின் இட அமைவு:

மாய்வெலக் கிராமம் குருநாகல் மாவட்டத்தில் ‘இஹலஓதொட்ட கோரளை’ என்ற கோரளைப் பிரிவில் அமைந்துள்ளது. அத்துடன் மாய்வெல ஊரானது இப்பாகமுவ பிரதேசச் செயலாளர் பிரிவிலும் ஹிரியால தேர்தல் தொகுதியிலும் அமையப் பெற்றுள்ளது.


மெல்சிரிபுர நகரம்:


எங்கள் ஊருக்கான தபாலகம் அமையப் பெற்றிருக்கும் மெல்சிரிபுர நகரமானது முற்காலத்தில் ‘வெடகெய்யாபொ(த்)த’ என்றே அழைக்கப் பட்டு வந்தது.

இந்த ஊர் எல்லையில் காணப்படும் விசாலமான தென்னந்தோப்புகள் யாவும் எச்.எல்.டி.மெல் எனும் இங்கிலாந்து நாட்டவருக்குச் சொந்தமானதாக இருந்தன. தற்போது மெல்சிரிபுர நகரில் உள்ள கடைத் தொகுதிகள் அமையப் பெற்றிருக்கும் இடங்கள் யாவும் முன்னர் மெல் கம்பனிக்குச் சொந்தமான காணிகளாகவே இருந்தன. இவருடைய காலத்தில் கடைகள் கட்டப்பட்டதோடு நகரின் மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றும் கட்டப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்தோருக்கெல்லாம் இந்தக் கோபுரத்தில் இருந்து ஒலிக்கும் மணிச்சத்தத்தைத் துல்லியமாகக் கேட்க்கக் கூடியதாகவிருந்தது. மற்றும் சந்தைக்கான கட்டத்தொகுதியும் வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. மெல்சிரிபுர அழகான நகரமாக வடிவம் பெற இருந்த வேளையில் எச்.எல்.டி.மெல் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அத்துடன் நகர எழுச்சியும் பல தசாப்பதங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே மெல்சிரிபுர என்ற பெயர் உருவானது.

1970 ம் ஆண்டுக்குப் பின்னர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பல்லாண்டுகள் பழமை வாய்ந்த மணிக்கூடு அரசியல்வாதியொருவரால் களவாடப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது. வைத்தியசாலைக்கெனக் கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்போது மரக்கூட்டுத்தாபனம் அமைந்துள்ளது.


பெருமகனார் பரீத் ஹாஜியார் :

படித்தவர்கள் என்று குறிப்பிட ஒருவரும் இல்லாத வேளையில் படிப்பறிவில்லாத ஒருவர் தனது அன்பு மகனை ஊரில் குர்ஆன் ஓதக் கற்றிருந்த பெரியார் ஒருவரின் வீட்டுத் திண்ணையில் குர்ஆன் ஓத அனுப்பினார். பின்னர் பக்கத்துச் சிங்களப் பாடசாலையில் கல்வி பயில அனுப்பப் பட்டார்.பின்னர் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது படிப்பை முடித்துக் கொண்டார். பல பெரியார்களை உருவாக்கிய ஸாஹிரா இவரையும் ஊருக்கொரு ஒளிவிளக்காக அனுப்பிவைத்தது.



பள்ளிவாயிலும் கிராம வளர்ச்சியும்:

ஆரம்ப காலத்தில் மிகச் சிரமங்களுக்கு மத்தியில் ஒரு சில குடும்பங்களே இவ்வூரில் வாழ்ந்து வந்தன. எல்லா வீடுகளும் ஓலை வேயப்பட்ட வரிச்சுச் சுவர் வீடுகளாகவே காணப்பட்டன. எனினும் அக்காலத்தில் நாட்டு ஓடு வேயப்பட்ட நிலையில் பள்ளிவாசலொன்று காணப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப் பட்டது. இதற்கான தடயம் 1958ம் ஆண்டில் கிடைக்கப் பெற்றது. அவ்வேளையில் பள்ளித் தோட்டத்தின் தென்மேற்குத் திசையில் சிறிய மண் குவியல்கள் காணப்பட்டன. அவற்றை வெட்டிச் சமப்படுத்த முனைந்த பொழுது குவித்து வைக்கப் பட்டிருந்த ஓட்டுக் குவியல்கள் வெளிப்பட்டன.

அதன்பின்னர் தகரம் வேயப்பட்ட பள்ளிவாசலொன்று அமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பள்ளியில் உள் பள்ளி, புறப் பள்ளி என்ற இரு பகுதிகள் மாத்திரம் காணப்பட்டன. அப்போது தண்ணீர் வசதியோ , கழிப்பிட வசதியோ காணப்படவில்லை. தொழுகைக்கு வருபவர்கள் வுழூ செய்வதற்காக அருகிலுள்ள ஆற்றுக்கே செல்ல வேண்டும். இந்நிலையில் நலன்விரும்பியொருவரான கே.பீ.எம்.றசீத் என்பவரால் பள்ளியின் முன்வாயிலுக்குப் பக்கத்தில் சீமெத்துபூசப்பட்ட சிறு தொட்டியொன்று கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்தத் தொட்டிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு நிரப்பட்டது. பள்ளிக்குள் செல்பவர்கள் கால்களைக் கழுவிக் கொள்வதற்காக இத்தொட்டியில் உள்ள நீர் உதவிபுரிந்தது. பின்னர் 1952, 1953 காலப்பகுதியில் நலன்விரும்பிகள் இருவரினால் பள்ளிவாசலுக்கான கிணறு கட்டப்பட்டது.




(பழைய பள்ளிவாசலின் படம்(இமாமாகக் கடமையாற்றிய அப்துல் காதர் செய்யது இஸ்மாயில் அவரது மனைவியுடன்)


ஊரில் வாழ்ந்த பெருமகனார் 1955ம் ஆண்டு வாலிபர்களை ஒன்றுகூட்டி வாலிபர் சங்கமொன்றை ஏற்படுத்தினார். கட்டாயமாக ஐவேளைத் தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் நடத்த ஏற்பாடு செய்தார். அத்துடன் திங்கள் , வெள்ளி இரவுகளில் ராதீப் வைபவங்களும் தொடந்து நடாத்தப்பட்டு வந்தன.

இக்கால கட்டத்தில் சிறு பிள்ளைகளுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்கான முறையான வசதிகள் எதுவும் காணப்படவில்லை. ஓதத் தேவை என்ற நினைவுவரும் போது அப்துல் காதர் அப்பா( இவரை குருக்கள் அப்பா என்றும் அழைப்பர்) வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து ஓதக் கற்றுக் கொள்வார்கள். இந்நிலைலேயே ஊர் மக்களை ஒன்று கூட்டி அவர்களின் ஒத்துழைப்புடன் பள்ளிவாசல் புறப்பள்ளியில் அப்துல் காதிர் அப்பாவிடம் சிறு பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதவும் வழியமைத்துக் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து தெவுட்டலங்கை என்ற ஊரைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவரும் வலிகாமத்ததைச் சேர்ந்த ஒருவரும் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 1956ம் ஆண்டளவில் பள்ளிவாசலுக்கு அருகே வரிச்சுச்சுவரினாலான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு சிறு பிள்ளைகள் குர்ஆன் ஓதும் மத்ரசாவாக அமைக்கப் பட்டது.

அக்கால கட்டத்தில் பள்ளிவாசலருகே கழிப்பிட வசதிகள் இருக்கவில்லை. இந்நிலையில் வாலிபர் சங்கத்தினரை ஒன்றிணைத்து சிறுநீர் கழிப்பதற்கான 5-6 அறைகள் கொண்ட ஓலைக் கொட்டில்களை உருவாக்கி ஒழுங்குகளைச் செய்தார்.

அப்பொழுது வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கு நாற்பது பேர் கூடுவதற்குப் பெரும் பிரயத்தனமெடுக்க வேண்டிய நிலையிருந்தது. குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் பள்ளிவாசலுக்குப் போவதில்லை. இந்நிலையில் தொழுகை முடிந்து வெளியேறும் போது வருகை தந்தவர்களைப் பதிவு செய்ய கணக்குப்பிள்ளை என்பவர் நியமிக்கப்பட்டார். வருகை தராதவர்களிடமிருந்து ஐந்து சதம் அபராதம் அறவிடப்பட்டது. இதனால் கட்டாயமாக வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போகவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படிப் போகின்றவர்களில் ஒருசிலர் புறப்பள்ளியில் அமர்ந்து சத்தமிட்டுக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். தொழுகை முடியும் தருவாயில் தொழாத நிலையிலும் தமது பெயரைப் பதிவுசெய்து கொண்டு ஐந்து சதத்துக்கான அபராதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு திரும்புவார்கள். வராமலேயே வீட்டில் கிடந்தவர்கள் அல்லது மீன்பிடிக்கச் சென்றவர்கள் தங்களது சிறு பெண்பிள்ளைகளைப் பள்ளிவாசலுக்கு அனுப்பி பொய்ச் சான்றுகளைச் சொல்லி அபறாதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயன்றனர். இச்சம்பவமே அக்கால மக்களின் ஆன்மிக மற்றும் அறிவு நிலையை மதிப்பிட்டுக் கொள்வதற்குப் போதுமானதாகும்.

வெளியூர்ப் பாடசாலையொன்றில் கற்பித்தல்; தொழில் புரிந்த ஒருவரும் இவ்வுரில் வாழ்ந்து வந்தார். அவர் வாத்தியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். எனினும் இவ்வூர்ப் பிள்ளைகளுக்குக் கல்விகற்றுக் கொடுக்கும் பணிகள் எதனிலும் அவர் ஈடுபட்டாதாகத் தகவல்கள் இல்லை.



இந்நிலையில் 1956,1957 காலப்பகுதியில் வாலிபர்களுக்கும் வளர்ந்தோருக்கும் எழுத்தறிவையூட்டும் பணியில் பரீத்லெவ்வை ஈடுபட்டார். தனது சொந்தச் செலவிலேயே கரும்பலகை, மேசை, கதிரைகளைச் செய்து தனது வீட்டுக் கட்டிடம் ஒன்றிலேயே இரவு நேரங்களில் கற்பித்துக் கொடுத்தார். எந்த ஊதியமும் பெறாமலேயே இப்பணியை இவர் மேற்கொண்டார்.


1957ம் ஆண்டு கலாவௌயைச் சேர்ந்த ஹகீம் சாஹிப் என்பவர் எம்மூருக்கு வருகை தந்தார்.இவர் முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாயில்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வந்தார். அந்த வகையில் அவரது ஆலோசனையின் பயனாக வுழூ செய்வதற்கான (நீர்த்தடாகம்) ஹவுல் கட்டப்பட்டு கிணற்றில் இருந்து நீர்நிரப்பப் பட்டது. ஹகீம் சாஹிப் அவர்கள் வேலை முடியும் வரை பள்ளிவாசலிலேயே தங்கியிருந்தார்.



T.S.M.ஹனீபா ஆலிம் அவர்களின் வருகையும் ஊரின் மறுமலர்ச்சியும்:

1957ம் ஆண்டு மாவனல்லை கிருங்கதெனியவைச் சேர்ந்த T.S.M. ஹனீபா ஆலிம் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொடுக்க வந்து சேர்ந்தார். அவரது வருகை எமதூரின் புதிய அத்தியாயமொன்றைத் தொடக்கி வைத்தது. நல்ல கல்விச் சூழலில் பிறந்து வளர்ந்து இங்கே வந்து சேர்ந்த அவரினால் ஊர் மறுமலர்ச்சியடைந்தது. ஒரு கை தட்டி ஓசையெழாத போது பரீத்லெவ்வை அவர்களுக்கு இணைந்த மறு கையாக ஆலிம் வந்தடைந்தார்.

ஆலிம் அவர்கள் அல்குர்ஆன் ஓதிக்கொடுக்க ஆரம்பித்த ஓரிரு வாரங்களுக்குள்ளேயே பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். “நான் காலையில் படித்துக் கொடுப்பேன். மாலையில் ஓதிக் கொடுப்பேன். அதற்கான ஒழுங்குகளைச் செய்து தாருங்கள்” என்றார்;.

அந்தச் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் நிலத்தில் பாய்விரித்து அமர்ந்தே குர் ஆன் ஓதிவந்தனர். பள்ளிக்கூடம் நடாத்துவதற்குத் தளபாடங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் வளர்ந்தோருக்கு வகுப்பு நடாத்த தயாரிக்கப் பட்டிருந்த தளபாடங்கள், கரும்பலகை என்பன பரீத்லெவ்வை அவர்களிடம் இருந்தன. உடனே பரீத்லெவ்வை அவர்கள் செயற்பட்டு எந்தவிதத் தாமதமுமின்றி தளபாடங்களை எடுத்துவந்தார். ஓலைவேயப்பட்ட சின்னஞ்சிறு ஓதல் கூடத்தில் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடமும் ஆரம்பமாகியது.

1958ம் ஆண்டில் முதலாம் வகுப்புப் புத்தகத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். 1959ம் ஆண்டு இரண்டாம் வகுப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்து கற்பித்தார்.முஸ்லிம் பாலர் வாசகம், கணிதம், பூமி சாஸ்திரம், சிங்களம் இவைகள் தான் அன்றைய புத்தகங்களாக இருந்தன. பிள்ளைகளிடம் ஊசி , நூல், துணித்துண்டுகளைக் கொண்டு வருமாறு கூறி தையலையும் கற்றுக் கொடுத்தார். சிங்களம் கற்பிக்கவென சிங்களவரொருவர் ஒரு வாரம் வருகை தந்தார். பின்னர் லேனவ என்ற பக்கத்து ஊரில் இருந்து ‘பென்ச்சி’(Penchi) என்ற பெயருடைய ஒரு சிங்கள ஆசிரியை தொண்டராக வந்து சிங்களம் கற்பித்தார். அவர் பிள்ளைகளுக்குத் தையலையும் சொல்லிக் கொடுத்தார்.


பாடசாலைக்கான கட்டிட நிர்மாணம்:

இந்தப் பள்ளிக் கூடம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் பிள்ளைகளுக்குப் பாடசாலைக்கான கட்டிடமொன்றை உருவாக்கவும் திட்டமிட்டனர். பாடசாலைக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப கட்டப் பணியைப் பிள்ளைகளின் கரங்களே தொடக்கி வைத்தன. தற்போது பாடசாலை அமைந்துள்ள நிலத்தில் புதிய கட்டிடத்துக்கான அமைவிடம் தீர்மானிக்கப்பட்டு அதில் காணப்பட்ட பற்றைக் காடுகள் பிள்ளைகளின் கரங்களாலேயே பிடுங்கப்பட்டன. பின்னர் ஊர்மக்களின் உதவியினால் 60ஒ 20 சதுர அடியைக் கொண்ட கட்டிடம் அமைக்கப் பட்டது. தூண்கள் செங்கல்லினாலும் வரிச்சுச் சுவரைக் கொண்டும் இக்கட்டிடம் அமைக்கப்பட்டதோடு கூரைக்கு ஒலைவேயப்பட்டது. துரித கதியில் கட்டிடம் அமைக்கப் பட்டு 1959ம் ஆண்டு இறுதிப் பகுதியில் கட்டிட வேலைகள் பூத்தியடைந்தது.

பின்னர் கட்டிடத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க பரீத்லெவ்வை அவர்களின் தலைமையில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகத் தனது சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பல முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் வெற்றியும் கண்டார். அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து, உடனடியாகப் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கான உத்தரவு தந்திமுலம் கிடைக்கப் பெற்றது.

இந்தக் காலகட்டத்தில் ஆலிம் அவர்கள் ஊரில் இருக்கவில்லை.



(1959 ம் ஆண்டு கட்டப்பட்ட ஆரம்பக் கட்டிடமும் அப்பொழுதிருந்த மாணவர்களும்)

பாடசாலை ஆரம்பமும் வளர்ச்சியும் :

1959ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி புதன்கிழமை குரு- தல்கஸ்பிட்டியவைச் சேர்ந்த M.A. கபூர் ஆசிரியர் அவர்கள் முதல் ஆசிரியராக வந்து கடமையை ஏற்றுக் கொண்டார். முதல் மாணவனாக Y.L.M. சத்தார் என்பவர் பதியப்பட்டார். இரண்டாம் மாணவனாக ஏ.அப்துல் வாஹித் என்பவர் பதியப் பட்டார்.

1960ம் ஆண்டு பங்கொல்லாமட என்ற ஊரைச் சேர்ந்த ஏ.எம்.சலீம் என்ற உதவியாசிரியர் வந்து சேர்ந்தார். எனினும் அவர் குறுகிய காலத்திலேயே இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார்.அவருக்கான பிரியாவிடை வைபவத்தை ஊர்மக்கள் மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். அத்துடன் ஊர்மக்களனைவரும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கண்டி வத்தேகமவைச் சேர்ந்த வை.தாஜுதீன் என்ற ஆசிரியர் தனது குடும்பத்தினரோடு இவ்வூருக்கு வருகை தந்து பாடசாலையில் பணி புரிந்தார். அத்துடன் D.E.ரணசிங்க என்ற சிங்களப் பெண் ஆசிரியை ஒருவரும் சிங்களம் கற்றுக் கொடுக்க வந்து சேர்ந்தார்.

1961ம் ஆண்டு, 1962ம் ஆண்டுகளில் மாணவர்கள் நான்கு இல்லங்களாகப் பிரிக்கப் பட்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விமரிசையாக நடாத்தப் பட்டன.

1959ம் ஆண்டில் முதலாம் வகுப்பில் கற்ற திறமையான மாணவர்கள் 1960ம் ஆண்டு; மூன்றாம் வகுப்புக்கும் 1961ம் ஆண்டு ஐந்தாம் வகுப்புக்கும்; வகுப்பேற்றப்பட்டனர்.

1962ம் ஆண்டில் காலியைச் சேர்ந்த M.A.M. ஹமீத் என்பவர் தலைமையாசிரியராக வந்துசேர்ந்தார். அதனைத் தொடர்ந்து மல்வானை, திப்பிட்டிய போன்ற இடங்களில் இருந்து பயிற்றப் பட்ட ஆசிரியர்கள் வந்து சேர்ந்தனர்.இன்னுமொரு மலே இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியையொருவரும் சிங்களம் கற்பிக்க வந்து சேர்ந்தார்.

1963ம் ஆண்டு பாடசாலையில் விடுமுறை வழங்கப்பட்டு தளபாடங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த வேளையில் நிகழ்ந்த ஒரு மினி சூறாவளியினால் பாடசாலை கட்டிடம் உடைந்து விழுந்தது. அடுக்கிவைக்கப் பட்டிருந்த தளபாடங்களும் சேதமடைந்தன. அஸர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஹமீத் அதிபர் அவர்கள் பாடசாலைக்கு அருகால் போய்க் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவமும் நடந்து முடிந்தது. அதிபர் நிலைதடுமாறிப் போனார். “நான் என்ன செய்வேன் ? மீதமுள்ள பொருட்களை எப்படிப் பாதுகாப்பேன்?” எனத் துயரத்துடன் சோர்ந்து நின்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலை அலமாரிகளையும் ஆவணங்களையும் மர்ஹ{ம் அப்பாஸ் அவர்கள் பாதுகாத்துத் தருவதாகக் கூறி அவரது வீட்டில் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார். மூன்று அலமாரிகளும் மேலும் சில பொருட்களும் அங்கு பாதுகாக்கப் பட்டன.

விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிக் கூடத்தை எவ்வாறு நடாத்துவது? எங்கே நடாத்துவது? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது. இக்காலகட்டத்தில் பரீத்லெவ்வை அவர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றிருந்தார்: அவரது பொறுப்பாளராக குடும்ப உறவினரான அப்பாஸ் அவர்கள் செயற்பட்டார். பரீத்லெவ்வை அவர்களின் வீட்டு முற்றத்தில் அமைக்கப் பட்டிருந்த நெல் களஞ்சியப் படுத்தும் கட்டிடத்தில் பாடசாலையை நடாத்துவதென அப்பாஸ் அவர்கள் தீர்மானித்தார். ஜனாபா பரீத் அவர்களின் அனுமதியுடன் அக்கட்டிடத்தை அதிபரிம் கையளித்தார்.





(மர்ஹூம் அப்பாஸ் அவர்கள்)



1965ம் ஆண்டு மீண்டும்(தற்போதிருக்கும்) நிலையான கட்டிடத்துக்கு வரும் வரை பரீத்லெவ்வை அவர்களின் வீட்டு வளவிலேயே பாடசாலை நடாத்தப்பட்டு வந்தது. இடநெருக்கடியின் காரணமாக ஒரு ஓலைக்கொட்டிலும் அமைக்கப்பட்டு அதிலும் வகுப்புகள் நடாத்தப் பட்டன. 1964ம் ஆண்டு பட்டப்பகலில் அந்தக் கொட்டில் தீக்கிரையானது. இந்த இழிசெயலை எவர் செய்தார் என்பது தெரியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்திலும் தளபாடங்கள் சேதமடைந்தன. புதிய கட்டிடத்தில் பாடசாலை ஆரம்பித்தபொழுது ஒருசில தளபாடங்களும் கரும்பலகையொன்றும் பக்கத்திலுள்ள மெதமுல்ல பாடசாலையில் இருந்தே இரவல் பெறப்பட்டன. காலம் கடந்தே அரசாங்கம் தளபாடங்களை வழங்கியது.

1960ம் ஆண்டு புதிய கட்டிடத் திறப்புவிழா மிகவும் சிறப்பாக நடாத்தப் பட்டது. சிறப்பு அதிதிகளைத் தேசிய கீதம் பாடி உள்ளே அழைத்து வந்து பின்னர் வரவேற்புப் பாடல் பாடப்பட்டது. அந்தப் பாடலின் சில வரிகள் பின்வருமாறு இருந்தன

வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே
வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே

பச்சிளம் பாலகர் நாம்
பல காலமாய்ப் பட்ட க~;டம்
பண்புடைப் பெரியோரே
பகுத்தறிவாளர்களே
பாங்குடன் சீராய் நாம்
பல கலைகள் கற்றிடவே
பகவான் அருள்புரிந்தான்
இன்று நாம் பாவால் வரவேற்றோம்

வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே
வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே


1966ம் ஆண்டில் மெல் கம்பனிக்குச் சொந்தமானதாக இருந்த மூன்று ஏக்கர் வயல் காணி வாங்கப்;பட்டது. பரீத் லெவ்வை, தலைமையாசிரியர் ஹமீத் ஆகியோரது இணைந்த முயற்சியினால் இது சாத்தியமாயிற்று. மெல் கம்பனி பரிபாளகர் D.E.நெத்தசிங்க என்பவர் பரீத் லெவ்வையவர்களின் நெருங்கிய நண்பராவார். இதன் மூலமாக இக்காணியைப் பெற்றுக் கொள்ளும் பணி இலகுவாயிற்று.

பாடசாலை படிப்படியாக முன்னேறிச் செல்லவே க.பொ.த. சாதாரண தரவகுப்பு நடாத்தத் தேவைப் பட்டது.இதற்கான அரசின் அனுமதியைப் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது.இந் நிலையில் எட்டாம் வகுப்பில் சித்தியடைந்த சம்சுதீன் என்ற மாணவன் இப்பாகமுவ பக்மீகொள்ள அல்-மினா பாடசாலைக்குச் சென்று கல்வி கற்றான். இம் மாணவன் எண் கணிதம் விN~ட சித்தியுடன் எட்டுப் பாடங்களிலும் சித்தியடைந்தான்.

பரீத் லெவ்வையவர்களின் அயராத முயற்சியினால் ஹிரியாலத் தொகுதி அரசியல்வாதி ஹேரத் அவர்களின் உதவியுடன் சாதாரண தரம் வகுப்பு நடாத்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. முதன் முறையாக 1969ம் ஆண்டு ஒரு மாணவனும் ஒரு மாணவியும் பரீட்சைக்குத் தோற்றினர்.



(இடமிருந்து வலமாக மர்ஹூம்களான அல்ஹாஜ் பரீத் லெவ்வை,அதிபர் M.A.M. ஹமீத், முதலாவது ஆசிரியர் M.A.கபூர்)




இரண்டாவது கட்டிடம்:

1978 ம் ஆண்டு இக்கட்டிடத்தின் ஆரம்பக் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் சுவர்கள் செங்கல்லினாலும் கூரை ஓலைவேயப்பட்டும் கட்டப் பட்டிருந்ததோடு மண் தரையே காணப்பட்டது. இக்கட்டிடத்தைத் திறப்பதற்கு முன்னரே இக்கட்டிடமும் இடிந்துவீழ்ந்தது. பின்னர் 1980 ம் ஆண்டு தற்போதிருக்கும் இரண்டாவது கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டு அதன் திறப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.



பின்னிணைப்பு-1:

எங்கள் அயல்கிராமமான பண்டிபொல கிராமத்தில் இருந்து அன்றும் இன்றும் எங்கள் பாடசாலைக்கு முஸ்லிம் பிள்ளைகள் வருகை தருகின்றனர். ஆரம்ப காலத்தில் பண்டிபொல கிராமத்துக்கு அருகேயுள்ள புலத்வெல்யாய பகுதியில் இருந்து தமிழ்ப் பிள்ளைகளும் இப் பாடசாலைக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் கால் நடையாகவே வருவார்கள். அவர்கள் வரும் பாதையில் பாதைக்குக் குறுக்கே ஒரு நீரோடை செல்கிறது. அந்த நீரோடையில் இறங்கிக் கரையேறியே மாணவர்கள் வரவேண்டியிருந்தது. மழை காலத்தில் நீரோடை நிரம்பி ஓடும். இதனால் மழைக்காலம் என்றால் மாணவர் வருகை தடைப்படும். இந்தப் பிரச்சினை குறித்து பண்டிபொல ஊர்மக்களும் மாய்வெல ஊர்மக்களும் ஆசிரியர்களும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன் படி தென்னை மரங்கள் இரண்டை வெட்டி தற்காலிகப் பாலம் (ஏதண்ட) ஒன்றை அமைத்தார்கள். பாதுகாப்புக் குறைந்த இப்பாலத்தினாலும் இடைக்கிடையே பிள்ளைகள் சிரமத்துக்குள்ளானார்கள். நிரந்தரமான பாலம் அமைக்கப் பட்டதன் பின்னர் பிரச்சினை தீர்ந்துள்ளது.



பின்னிணைப்பு-2:


1955ம் ஆண்டு மாய்வெல ஊர்வாசிகளுள் 7 பேருக்கு அயல் கிராமமான ‘நாபெட’ கிராமத்தில் ‘ஹேன்யாய’ என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வீதம் அரசாங்கம் காணிகளை வழங்கியது.அங்கே காடுவெட்டி , நிலம் திருத்தி வீடுகளை அமைத்துக் கொஞ்ச காலம் குடியிருந்தனர். அங்கு சிங்கள மக்களே கூடுதலாக வாழ்ந்து வந்தனர். இதனால் தமது கலாசாரப் பாரம்பரியங்களும் பள்ளிவாசலுடனான தொடர்பும் துண்டிக்கப் பட்டுவிடும் என்ற அச்சத்தினால் காணிகளைச் சிங்கள மக்களுக்கே விற்றுவிட்டு மாய்வெல ஊருக்கு வந்துவிட்டனர். இதன்பின்னர் 1990ம் ஆண்டளவில் சுவர்ணபூமித்திட்டத்தின் கீழும் நாபெட பகுதியில் எமது கிரமத்தைச் சேர்ந்த சில குடும்பங்களுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. அவர்களும் வீடுகளைக்கட்டிச் சிலகாலம் இருந்து விட்டு பின்னர் முன்னோர்கள் செய்த படியே காணிகளைவிற்றுவிட்டு வந்துவிட்டனர்.



பின்னிணைப்பு-3:

ஆரம்பத்தில் மாய்வெல பள்ளிவாசல் இமாமாக(லெப்பை) அருகேயுள்ள கொஸ்முல்ல கிராமத்தில் வசித்து வந்த அப்துல் காதர் என்பவர் கடமைபுரிந்தார். அவர் 1940 களின் ஆரம்பப் பகுதிவரை (1943 ம் ஆண்டு வரையென நம்பப் படுகிறது) இப்பணியில் ஈடுபட்டார். அவர் காலமாகி 40 வது நாளன்று அவருடைய மகனான செய்யது இஸ்மாயில் என்பவர் இப்பணியை ஏற்றுக் கொண்டார். இவர் 1983ம் ஆண்டு வரையும் இப் பணியில் ஈடுபட்டார். சுமார் 40 வருடங்கள் இமாமாகக் கடமையாற்றிய இவர் 1984ம் ஆண்டு காலமடைந்தார். அவ்வாறே முஅத்தீன் பணியில் 1960 களின் ஆரம்பத்திலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை சம்சுதீன் என்பவர் ஈடுபட்டுவந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின்னிணைப்பு -5:

கொஸ்முல்லை அப்துல் காதிர் அவர்களின் முத்த மகளான றஹ்யானத்து உம்மாவின் ஒரே புதல்வனே பரீத் லெவ்வை ஆவார்.



பின்னிணைப்பு -6:
பாடசாலை ஆரம்பிக்கப் பட்ட வேளையில் இருந்த ஊர்மக்கள்; விபரம்:
1. மெல்சிரிபுர ‘மினர்வா’ ஹோட்டல் றசீத் வீடு:பெற்றோர் , பிள்ளைகள் -5.மொத்தம் -7
2. மெல்சிரிபுர வடிவேலு வீடு: பெற்றேர் , பிள்ளைகள்-3. மொத்தம்-5
3. தெமடகொள்ள யூசுப் வீடு : பெற்றோர் ,பிள்ளை-1. மொத்தம்-3
4. தெமடகொள்ள ஹனீபா வீடு : வாப்பும்மா , பெற்றோர், பிள்ளைகள்-6. மொத்தம்-9
5. தெமடகொள்ள அ~;ரப் வீடு: உம்மும்மா , பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-6
6. தெமடகொள்ள பாத்துமாநூர், பிள்ளைகள்-3. மொத்தம்-4
7. கபூர்வீடு: சகோதரன் , சகோதரி . மொத்தம்-2
8. செய்யது இஸ்மாயில்(லெப்பை) வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
9. ஹ{ஸைன் வீடு: பெற்றார், பிள்ளைகள்-6. மொத்தம்-8
10. ஜெபர்தீன் வீடு: பெற்றார், பிள்ளைகள்-2. மொத்தம்-4
11. செய்னுள் ஆப்தீன் வீடு: பெற்றார் , பிள்ளைகள்-2. மொத்தம்-4
12. செல்லையா வீடு: பாட்டன், பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-6
13. அப்பாஸ் வீடு : பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
14. சஹாப்தீன் வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2
15. செய்யத் (வட நாநா) வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
16. அப்துல்காதர்வீடு: பெற்றோர், பிள்ளைகள்-6. மொத்தம்-8
17. அகமது மீராலெவ்வை வீடு: ஒருவர். மொத்தம்-1
18. யூசுப் வீடு: ஆச்சி,பேரன்-1, மகன்,மருமகள், பிள்ளைகள்-3 மொத்தம்-7
19. பல்கீஸ் வீடு: தாய், பிள்ளைகள்-3. மொத்தம்-4
20. இஸ்மாயில் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
21. பரீத்லெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5
22. அர்கிஸ் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
23. உதுமாலெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-4. மொத்தம்-6
24. வாத்தியார் வீடு: கணவன் ,மனைவி. மொத்தம்-2
25. அப்துல் ஹமீத் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-4. மொத்தம்-6
26. அப்துல் ஹமீத் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
27. செல்லா ஆச்சி, மஹ்மூத். மொத்தம்-2
28. கரீம் நானாவீடு: பெற்றோர்,மகன்-1 மொத்தம்-3
29. சேதா வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2
30. (சுருட்டு) சஹாப்தீன் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
31. சம்சுதீன் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
32. அப்துல் அஸீஸ் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5
33. ஜவாத் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. தங்கை உம்முநோநா. மொத்தம்-6
34. ஐதுரூஸ்(சிங்கப்பூர்) வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
35. தாஹிர் வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2
36. முத்தலிப் வீடு: தாய் , மகன்- மருமகள், மொத்தம்-3
37. மஜீத் உம்மா வீடு: தாய். மொத்தம்-1
38. மம்மது அப்பா வீடு: பெற்றோர், மகன்-1, மகள்-1. மொத்தம்-4
39. கொஸ்முல்ல இஸ்மாயில் லெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-7. மொத்தம்-9
40. மாணிக்கம் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
41. வெலிப்பிட்டி றசீத் நாநா கடை: ஒருவர். மொத்தம்-1
42. வடவன குலாம் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5
43. அப்துல்லா அப்பா வீடு: பெற்றோர், மகள்-1. மொத்தம்-3
44. தெமடகொள்ள கடை ஹமீத்: ஒருவர். மொத்தம்-1


நன்றி: கு.மாய்வெல முஸ்லிம் வித்தியாலய- "பொன்விழா மலர்-2009"
(கட்டுரையை எழுதியவர் பாடசாலையின் பழைய மாணவியான எனது தாயார்)



பி.கு:அப்பாடா! பிரபாவிடமிருந்து ஒருமாதிரியாக தப்பிச்சாச்சு.
ஃபஹீமாஜஹான்
Author: கிடுகுவேலி
•1:56 PM

அலைகடல் சூழும் ஈழமணித் திருநாட்டின் தலையெனத் திகழ்வது யாழ்ப்பாணம். அதற்கு மேற்காக சுமார் 20கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு அழகிய சிறிய தீவுதான் காரைநகர். இங்கே இரு சிறப்புகள். ஒன்று ஈழத்துச் சிதம்பரம். அடுத்தது அழகிய ஆழம் குறைந்த கடற்கரையான “கசூரினா பீச்”. கோவில் என்றால் சிதம்பரம். அந்தச் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் மிக பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறதோ, அதே போன்று அதன் வழியொத்ததான வழிபாட்டு முறைகள் இந்தச் சிறிய தீவில் இருக்கும் காரைநகர் சிவன் கோவிலிலும் நடைபெறுவதால் இது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படலாயிற்று.

தொண்மையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இந்த ஆலயத்தில் இன்று மார்கழித் திருவாதிரை விழாவின் தேர்த்திருவிழா. ஈழத்தில் பஞ்சரத பவனி நடைபெறுகின்ற ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களுல் இவ்வாலயமும் ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றை தன்னகத்தே கொண்டு அவ்வூர் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர் சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமான். ஆனாலும் மக்களின் தீராத காதல் எல்லாம் பூரணை புட்கலாம்பிகா சமேத ஆண்டி கேணி அய்யனார் மீது என்றால் மிகையல்ல.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கிணங்க இவ்வூர் மக்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். இதனால்தானோ “காகம் பறவாத இடமும் இல்லை, காரைதீவான் போகாத இடமும் இல்லை” என மிகச்செல்லமாக (??) அழைக்கிறார்கள். உழைப்பதில் ஒரு பகுதியினை இந்தச் சிவன் சந்நிதானத்தில் செலவிட அவர்கள் தயங்குவதேயில்லை. இரண்டு இராசகோபுரங்கள், இரண்டு மூல மூர்த்திகள், இரண்டு ஆதீனகர்த்தாக்கள், இரண்டு மிகப்பெரிய மகோற்சவங்கள் என ஆலயத்துக்கும் இரண்டுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. 

ஆரம்பத்தில் இவ்வாலயத்தினை அம்பலவிமுருகர் என்று சொல்லப்படுகின்ற ஒரு சிவனடியார் உருவாக்கினார். இன்றும் அவர் வழித்தோன்றல்களாலேயே ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மணியகாரர் நிர்வகிக்கும் ஒரு சில கோவில்களுள் இதுவும் ஒன்று. ஆ.அம்பலவிமுருகன் மற்றும் மு.சுந்தரலிங்கம் என்போர் தற்போதைய ஆதீனகர்த்தாக்கள்.  இவ்வூர் மக்கள் சொல்வார்கள் “மாப்பாண முதலி வைச்ச வேலும் (நல்லூர்க்கந்தன்) அம்பலவி முருகன் வைச்ச கல்லும் (ஈழத்துச் சிதம்பரம்) நம்பிக்கையில் வீண்போகாது”. இவ்வாறு இவர்கள் இன்றும் பக்தியோடு இந்த ஆலயத்தை வழிபட்டு வருகிறார்கள். 

ஈழத்திலே தலபுராணம் கொண்டுள்ள ஒரு ஆலயமாக இது இருக்கின்றது. நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன், பண்டிதமணி சோ. இளமுருகனார் ஆக்கிய “ஈழத்துச் சிதம்பர புராணம்” இன்றும் சான்றோர்களால் போற்றப்படுகின்ற ஒரு தலபுராணம். இதற்கு உரை எழுதியவர் அவரது பாரியார் பண்டிதைமணி பரமேசுவரியார்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டதுதான் சிவகாம சுந்தரி சமேத சிவசிதம்பர நடராசப் பெருமான். மிடுக்கான இராச தோற்றம். எழிலே உருவான அற்புதமான மூர்த்தம். திருவாசகத்திற்கும் தில்லைக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது. அதே போல இந்த நடராசர் சிலையில் 51 சுடர்கள் உள்ளன. அவை திருவாசகத்தின் 51 பதிகங்களை நினைவூட்டுகிறது.  வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர்கள் ஒரே சிலையிலேயே அமையப் பெற்றது மேலும் சிறப்பு. நடேசர் அபிசேகத்தின் போது உடுக்கை ஏந்திய கையாலும், அக்கினியேந்திய கையாலும் வழிந்து வரும் திரவியங்கள் இவ்விரு முனிவர்களின் சிரசிலும் பொழிவது அற்புதமே. எத்தனையோ அறிஞர்கள் இந்த நடராசர் விக்கிரகத்தினைப் பார்த்து வியந்தும் பாராட்டியும் எழுதியுள்ளார்கள். பரந்த உலகமெங்கும் சென்று பிரசங்கம் செய்த திருமுருக கிருபானந்தவாரியார் இந்த நடராசர் மூர்த்தம் பற்றி சொல்லும் போது, ‘நான் எங்கும் காணாத பேரெழில் இதிலே கண்டேன்’ என்பார். அதேபோல தமிழகத்து அறிஞர் மு. பாஸ்கரத் தொண்டைமானும் இந்த சிலை பற்றி விரிவாக விபரித்து ஒரு கட்டுரையே எழுதியுள்ளார். 

இந்த ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் அன்று அரசாண்ட குளக்கோட்ட மன்னனால் இந்தியாவின் திருவுத்தர கோச மங்கையில் இருந்து வருவிக்கப்பட்டவர்கள். அவர்களின் 27வது பரம்பரையைச் சேர்ந்த வி.ஈஸ்வரக்குருக்கள் இப்போதுள்ள பிரதம சிவாச்சாரியார். 

ஈழத்தின் புகழ்பெற்ற அத்தனை தவில், நாதஸ்வர மேதைகளும் இந்த ஆலயத்தில் ஒரு தடவையாவது கச்சேரி செய்திருப்பார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மிகப்பிரபல்யமான சகல வித்துவான்களினதும் கச்சேரியும் இங்கே நடந்துள்ளது. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என எல்லா ஆண்டுகளிலும் தங்கள் நாதஸ்வர தவில் இசையை இங்கே வழங்கியிருக்கிறார்கள். அந்தளவிற்கு இவ்வூர் மக்கள் இந்த இராச வாத்தியத்தை நேசிக்கிறார்கள். ஈழம் பெற்றெடுத்த ஒப்பற்ற தவில்மாமேதை வி. தெட்சனாமூர்த்தி இந்த ஆலயத்தில் இருந்தே தனது ஆரம்ப காலப் பயிற்சியை தந்தையிடம் இருந்து பெற்றவர். அவர் எங்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாலும் திரும்பியவுடன் இந்த ஆலயத்தை வந்து தரிசித்துவிட்டே அடுத்த அலுவல்களைக் கவனிப்பார். தமிழகத்தின் பிரபல தவில் வித்துவான்கள் வலையப்பட்டி சுப்பிரமணியம், அரித்துவாரமங்கலம் பழனிவேல், கலியமூர்த்தி தற்போது பிரபலமாக இருக்கும் திருப்புன்கூர் முத்துக்குமாரசுவாமி, வாசுதேவன் ஆகியோரும் நாதஸ்வர வித்துவான்களாகிய நாமகிரிப்பேட்டை கணேசன், காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம்பிள்ளை, மாம்பழம் சிவா சகோதரர்கள் என பலரும் இந்த ஆலயத்தில் நாதகாணமழை பொழிந்திருக்கிறார்கள். 

இந்த ஆலயத்தின் ஆதீன கர்த்தாக்களில் ஒருவராகிய மு. சுந்தரலிங்கம் அவர்கள் தமக்கேயுரித்தான பாணியில் திருமுறைகளைப் பாடுவார்கள். இவரது பாடல்களைக் கேட்க என்றே வரும் அடியவர்கள் இருக்கிறார்கள். 


இன்று பஞ்சரத பவனி. கனகசபையில் இருந்து நடராசர் மல்லாரியுடன் எழுந்து மல்லாரியுடன் ஆடி ஆடி வருகின்ற அந்த அற்புதக்காட்சி காணக் கண் கோடி வேண்டும். “ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொள்கிறது” என அடியவர்களும் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து இறைஞ்ச, அரோகரா ஓசை எங்கும் ஒலிக்க, மல்லாரி முழங்க அந்தக்கணங்கள் எல்லாம் அருகிருந்து பார்க்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.  இந்தக் காட்சியைக் காண உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் காரை வாழ் மக்கள் திருவாதிரைக்கு அங்கே கூடி விடுவார்கள்.  மாமணி வீதியாம் மூன்றாம் வீதியில் பஞ்சரதங்களும் ஆடி அசைந்து வரும் காட்சி வருணனைகளுக்கு அப்பாற்பட்டது. மார்கழி மாதமாதலால் மழைக்கோ வெள்ளத்துக்கோ குறைவில்லை. அடியவர்களின் அங்கப் பிரதட்டனையும் அடி அழித்தலும் பல சமயங்களில் ஒரு அடி வெள்ளத்தில் கூட இடம்பெற்றிருக்கிறது. 

விழாக்காலங்களில் மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபையில் மகேசுவர பூசை இடம்பெறும். கிடைக்காமல் போகாது என்று எண்ணுமளவிற்கு மிகத்தாராளமாக அன்னதானம் வழங்கப்படும். இப்போது அமரர். தியாகராஜா மகேஸ்வரன் (முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் உவந்து கட்டித்தந்த இன்னோர் அன்னதான மண்டபத்திலும் அடியவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. 

மேலும் இந்தவிழாக்காலங்களில் காரைநகர் மணிவாசகர் சபை பாடசாலை மாணவர்களுக்கிடையே சைவ சமய பாடப்பரீட்சை நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களும் பரிசில்களும் வழங்குவார்கள். அத்தோடு மட்டுமல்லாமல் தமிழ், சைவ அறிஞர்களை அழைத்து சொற்பொழிவுகளையும் ஒழுங்கு செய்வார்கள். தமிழக அறிஞர்கள் பலரும் இங்கே மேடையேறியுள்ளார்கள் என்பதும் ஒரு சிறப்பே. 

இந்த ஆலயத்தை சூழ உள்ள பகுதி திண்ணபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அது மிகவும் களிமன் சார்ந்த பகுதி. இதனால் இங்குள்ள முதியவர்கள் திண்ணைக் களியான் என்று சிவனை மிகவும் அன்பாக அழைப்பார்கள்.  பல புலவர்கள் ஆலயத்தின் மீது பல பக்திப்பாமாலைகள் பாடியுள்ளார்கள். 

தேர்த்திருவிழாவின் நள்ளிரவின் பின்னதாக ஆருத்திரா அபிசேகம் நடைபெறும். மிக மிக அரிதான ஒரு காட்சி. சிதம்பரம் சென்று ஆருத்திரா தரிசனம் காண முடியாதவர்கள் எல்லாம் அந்த குறித்த நாளிகைக்காக இங்கே கூடுவார்கள். பிரமாண்ட வசந்தமண்டபத்தில் நடைபெறும் இந்த அபிசேகத்தின் போது ஈழ, தமிழக நாதஸ்வர தவில் வித்துவான்களின் கச்சேரி நடைபெறும். சுமார் 5 மணித்தியாலமாக நடைபெறும் இந்தக் கச்சேரியைக் காணவென்றே பல இசைரசிகர்கள் குழுமியிருப்பார்கள். கலைஞர்களும் தமது வித்துவத்திறமையைக் காட்டும் ஒரு களமாக இதைப் பயன்படுத்துவார்கள். 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆடலரசனின் நடனமும், நாதகானமழையும் இன்றைய சிறப்பாக அங்கே அமையும். 
Author: வடலியூரான்
•1:53 AM
திருவெம்பாவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறம்,இதென்ன திருவெம்பா?,இப்பிடியொரு சொல்லை நாங்கள் கேள்விப்படவேயில்லையே எண்டு உங்களிலை கொஞ்சப் பேர் நினைக்க வெளிக்கிட்டுடிவியள் எண்டு எனக்குத் தெரியும்.இரண்டும் ஒண்டு தான்.அந்த "வை" யை உச்சரிக்கிறதிலை எங்களுக்கு ஒரு பஞ்சி.பின்னை அது தான் திருவெம்பா எண்டு சொல்லித் தான் சொல்லுவம்.


மார்கழி மாசத்திலை தான் திருவெம்பா வரும்.அதுவும் அந்தக் குளிருக்கை விடிய வெள்ளனவெல்லாம் கோயிலுகளிலை பூசைகள் நடக்கும்.இந்தமுறையும் திருவெம்பா தொடங்கப் போகுதாம் எண்டு போன வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலிலை அறிவிச்சது என்ரை காதிலை கேட்டிச்சுது.அது தான் எனக்கும் முந்தின எங்கடை காலத்து திருவெம்பாப் புதினங்களை ஒரு பதிவா எழுதிப் போடுவம் எண்டொரு யோசனை வர,சட்டுப் புட்டெண்டு இந்தப் பதிவை எழுதிப் போடுறன்.



திருவெம்பா எண்டு சொல்லிச் சொன்னால் ரண்டு விசயம் ஞாபகத்துக்கு வரும்.ஒண்டு எல்லாக் கோயிலிலையும் அவல்,கடலை எண்டு கன சாமானுகள் சாப்பிடக் குடுப்பினம்.மற்றது சங்கூதிப் பண்டாரம்.முதல்லை அவல்,கடலை அலுவலைப் பாத்திட்டு,பிறகு சங்கூதிப் பண்டாரத்தைப் பாப்பம்.ஏனெண்டால் சாப்பாட்டை காத்திருக்க வைக்கக் கூடாதெண்டு சொல்லுவினம்.



முந்தியெல்லாம் சின்னனிலை, ஒராம்,இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கை,திருவெம்பாக் காலத்திலை விடியக் காலமை 5 மணிக்கே அம்மாவோ,அம்மம்மாவோ அடிச்சு எழுப்பிப் போடுங்கள்."அங்கை கோயில்லை பூசையாகுது.இஞ்சை நீ படுத்துக் கிடக்கிறாய் எண்டு விடியவெள்ளனவே பேச்சு விழத் தொடங்கீடும். நாங்களும் எழும்பி,நித்திரை தூங்கித் தூங்கிப்,பல்லை மினுக்கி,முகத்தைக் கழுவிப் போட்டு,குளிக்கப் பஞ்சியாயுமிருக்கும் அதே நேரம் பயங்கர குளிராயுமிருக்கும்,குளிக்கவே மனம் வராது எண்டாலும் சும்மா ஒரு போமாலிற்றிக்காக(formality)கேக்கிறது.."... என்ன குளிக்கிறதோ.." எண்டு..."...ஆய்.. சின்னப் பிள்ளையள் தானே.. அது காரியமில்லை.." முகத்தைக் கழுவிப் போட்டுப் போ எண்டு அம்மம்மா சொல்லுவா.சிலவேளை அம்மா சுடு தண்ணி வைச்சுத் தருவா.அதுக்கை கொஞ்சம் பச்சைத் தண்ணியை விட்டு,ஒரு வாளிக்கை கலந்து போட்டு,ஒரு வாளித் தண்ணியிலையே குளிச்சுப் போட்டுக் கோயிலுக்குப் போறது.எப்பிடிப் பாத்தாலும் சிலவேளையிலை அரைக் குளிப்பு இன்னும் சில நாள் அதுவும் இல்லை.அவ்வளவு தான்.



பண்டாரி அம்மன் கோவிலை 5 மணிக்குப் பூசை தொடங்கும்.அங்கை தான் முதல்ப் போவம்.ஒரு லக்ஸ்பிறே அல்லது அங்கர் பாக்(Bag) ஐயும்(அந்தக் காலங்களிலை உந்தச் சொப்பின் பைகளின்டை பாவனை மிச்சும் குறைவு)மடிச்சுக் காச்சட்டைப் பொக்கற்றுக்கை வைச்சுக் கொண்டு தான் இந்த வானரப் படையள் கோயிலுக்குப் படையெடுக்குங்கள். போனவுடனை பாக்கிற முதல் வேலை இண்டைக்குச் சுவாமிக்கு என்ன படைச்சுக் கிடக்கிறது எண்டு பாக்கிறது தான்."...ஆ .ஆ.கடலை கிடக்குது..அவலுக்கு கக்கண்டு போட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது...வெள்ளையாக் கிடக்குது...இஞ்சாலை கிடக்கிறது சக்கரைப் பொங்கல்...மோதகமும் கிடக்குது.கனக்கக் கிடக்குது... ஆளுக்கு ரண்டுப் படி குடுப்பினமோ...?அதுக்கிடையிலை கணக்குப் போட்டுப் பாக்கிறது..கோயிலிலை ஒரு 50,60 சனம் நிக்குது..எல்லாருக்கும் ரண்டுப் படி குடுத்து,பேந்து உபயகாரரும் தங்கடை வீட்டையும் கொஞ்சம் மோதகம் கொண்டு போகோணும்.. அப்பிடிப் பாத்தால் உவ்வளவும் காணாது.ஒரு வேளை ஐயர் உபயகாரருக்கெண்டு புறிம்பா உள்ளுக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறாரோ தெரியாது...சரி அதை விடுவம்...பெரியாக்களுக்குக் குடுக்காட்டிலும் சின்னப் பெடியளுக்கெண்டாலும் குடுப்பினம்...ம்.. பாப்பம்.பிறகு இஞ்சாலை வைரவருக்கு,சின்ன வடை மாலை தானே போட்டுக் கிடக்குது.உந்த வடை மாலையிலை 20 வடையும் வராது போல கிடக்குது.அப்ப உதைச் சனத்துக்குக் குடுக்க மாட்டினம் போல கிடக்குது.அங்காலை 2 தாம்பாளத்துக்கை கதலி வாழைப் பழமும் அடுக்கி வைச்சுக் கிடக்குது.அப்ப அதுவும் குடுப்பினம்.இந்த மனக் கணிப்பெல்லாம் கோயிலுக்குப் போன கையோடையே நாங்கள் செய்து போடுவம்.




அங்காலை ஒரு பக்கத்தாலை பூசையள் நடந்து,திருவெம்பாப் பாட்டுப் படிக்க வெளிக்கிட்டிடுவினம்.சிலவேளை ஐயரே படிப்பார்.இல்லாட்டில் ஆம்பிளையள், பெடியள்,பொம்பிளையள் எண்டு நல்லா "..ஆ. ஆ..." எண்டு இழுத்துப் பாடக் கூடினாக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டா,ஒரு ஓடரிலை படிப்பினம்."...ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்." எண்டு தொடங்க,எங்களுக்கு,"எப்ப உந்தப் பாட்டெல்லாம் முடிச்சு அவல் கடலை தரப் போறியள் எண்டு யோசனை ஓடிக் கொண்டிருக்கும்.



இடையிலை ஒரு பாட்டிலை ஒரு வரி வரும்..".. போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்.." எண்டு.நாங்கள் சின்னப் பெடியள் உதைக் கேட்டிட்டு, எங்களுக்கை சிரிச்சுக் கொள்ளுவம்.(பிழையா யோசிச்சுப் போடாதையுங்கோ.எங்களுக்கு உதை மாதிரி ஒரு கூடாத சொல்லொண்டிருக்குதெண்டு அந்தக் காலத்திலேயே தெரியும்.அவ்வளவு தான்.அட.. சொன்னால் நம்புங்கோப்பா.அடம் பிடிக்கிறியளப்பா..ம்ம்)அதெல்லாம் முடிஞ்சு,"போற்றி அருளகநின் ஆதியாம் பாதமலர்,போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்..........போற்றியாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்.."எண்டு 20 ஆம் பாட்டும் முடிய பெடியளின்ரை முகத்தில சந்தோசத்தைப் பாக்கோணும்.அப்பா சொல்லி வேலை இல்லை.





பேந்தென்ன,திருநீறு,சந்தனம் எல்லாம் வாங்கிப் பூசி அடுத்த அற்றாக்குக்கு(Attack) றெடியாயிடுவாங்கள்.அடிபட்டுப் பிடிபட்டு,அந்த லக்ஸ்பிறே பாக்கை நிறைக்கிறதிலை தான் குறியாய் இருப்பம். எங்கடை ஊரிலை உள்ள கோயிலுகள் தங்களுக்கை ஒரு அகிறீமன்ற்(Agreement) வைச்சிருந்ததுகள் போல கிடக்குது.ஒண்டின்ரை பூசை முடியத் தான் மற்றதினரை பூசை தொடங்கும்.எண்டாத் தான் பக்த கோடிகள்(வேறை யார் அவல்,கடலைக்குப் ஓடிற நாங்கள் தான்)கோயிலுக்கு நிறைய வருவினம் எண்டாக்கும்.பண்டாரி அம்மன் கோயில் முடிய வைரகோயில்லை 6 மணிக்கும்.அது முடிய மாலந்தெணிப் பிள்ளையாரிலை 6.30 க்கும்,கடைசியா ஆலடிப் பிள்ளையாரிலை 7 மணிக்கும் பூசை நடக்கும்.



போகாத கோவிலெல்லாம் திருவெம்பாக்குத் தான் போவம்.ஒவ்வொரு கோயில்லையும் திருநீறு,சந்தன்ம் குடுக்க,திரும்பவும் ஏற்கனவே பூசிக்கிடக்கிற திறுநீறு சந்தனத்துக்கு மேலையே பூசுறது.காதிலை பூ வைக்க்கிறது பெரிய பாடாப் போடும்.முதல்க் கோவிலிலேயே பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப்பூவையோ காதிலை லௌட்ஸ்பீக்கரைஇ(Loud Speaker)கட்டிற மாதிரி வைச்சாப் பிறகு மற்றக் கோவிலிலை வாங்கிற பூவை எங்கை தலைக்கு மேலையே வைக்கிறது.அதிலையும் சில பேர் இரண்டு காதிலையும் ஒரு லௌட்ஸ்பீக்கரை முன்னுக்கும் மற்றதை பின்னுக்கும் பாக்கக் கட்டிற மாதிரி, முன்னுக்கும் பின்னுக்கும் பாக்கிற மாதிரி பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப் பூவையோ வைச்சுக் கொண்டு போவாங்கள்.ஒவ்வொரு கோயிலையும் போய் அங்கை தாற போவையும் காதிலை அடைவாங்கள்..ம்ம்ம்.



இப்பிடி எல்லாக் கோயில்லையும் வாங்கினதுகளை வீட்டை கொண்டு வந்து,சில வேளையில காலமைச் சாப்பாடே உதாத் தான் இருக்கும்.சிலவேளையில உதோடை சேர்த்து ஒரு றாத்தல் பாணோடை காலமை அலுவல் முடிஞ்சு போடும்.சாப்பிட்டு முடிய அந்த லக்ஸ்பிறே பாக்கெல்லாம் கழுவிக் கொடியில காயப் போட்டிடுவம்.பிறகு நாளைக்கும் எடுக்கலாம்(றீ ஊஸ் - Re Use)எண்டொரு முற்போக்கு சிந்தனை தான்.சில பேர் இதையே பள்ளிக் கூடத்துக்கு கட்டிக் கொண்டு வந்து இன்டேவலுக்கும்(Interval) சாப்பிடுவாங்கள்.இப்பிடியே திருவெம்பா போகும்.எங்களுக்கும் திருவெம்பாப் பூசை இருக்குது.முட்டிக்கொத்தாத்தைப் பிள்ளையாரிலை(முட்டிக் கொற்றவத்தைப் பிள்ளையார்)6 ம் பூசையும் மாயக்கைப் பிள்ளையாரிலை 7 ம் பூசையும் எங்கடை தான்.அந்த 2 நாளும் உபயகாரர் எண்டு எங்களுக்கு கொஞ்சம் கூட அவல்,கடலை,மோதகம்,வடை,பஞ்சாமிர்தம் எல்லாம் பூசைக்கு வந்த சனம் ஓரளவு போய் முடிய ஐயர் எடுத்துக் கொண்டு வந்து தருவார்.அந்த 2 நாளும் அலுக்க அலுக்கச் சாப்பிட உந்த அவல் கடலைப் பைத்தியம் எல்லாம் அதோடை தன்ரை பாட்டிலை நிண்டிடும்.உதைத் தான் சொல்லிறது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செண்டு.உதெல்லாம் சின்ன வயசுச் சமாச்சாரங்கள்.




இனி சங்கூதிப் பண்டாரத்துக்கு வருவம்.சங்கூதிப் பண்டாரம் எண்டால் என்னெண்டு தெரியாதாக்களுக்காண்டி,திருவெம்பாக் காலங்களிலை ஊரிலை இருக்கிற பெடியள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து விடிய வெள்ளன எழும்பி,சேமக்கலம்,சங்கு எல்லாம் ஊதிக்கொண்டு,திருவெம்பாப் பாட்டுப் படிச்சுக் ஒண்டு போறதை தான் சங்கூதிப் பண்டாரம் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறது.நீங்களெல்லாம் வெடிவால் முளைச்ச வயசுகளிலை, உங்கடை ஊர் சங்கூதிப் பண்டாரங்களிலை ஊதப் போயிருப்பியள்.அது நல்ல பம்பலாத் தான் போகும்.எங்கடை ஊரிலையும் சங்கூதிப் பண்டாரத்துக்கு ஊத போற பெடியள்,ஊரிலை இருக்கிற மற்ற எல்லாக் கோயிலுகள்ளையும் இருந்து சேமக்கலங்கள்,சங்குகள்,ஒரு பெற்றோல் மாக்ஸ்,திருவெம்பாப் பாட்டுப் புத்த்கம் எல்லாம் எடுத்து வைச்சுக் கொண்டு எங்கடை ஊர் வாசிகசாலைக் கட்டிடத்துக்குள்ளை தான் படுப்பாங்கள்.



விடிய 2,3 மணிக்கு எழும்பி,அந்தப் பனிக்குளிருக்கை ஒராள் பெற்றோல்மாக்ஸ் பிடிக்க,இன்னொராள் பாட்டுப் படிக்க,ஒவ்வொரு பாட்டும் முடியிற இடைவெளிக்குள்ளை சேமக்கலம் அடிச்சு,சங்கூத கொஞ்சம்,பக்கப் பாடு,பம்பலுக்கெண்டு ஒரு மிச்சம் எண்டு ஒர் 15 - 20 ஒண்டாப் போகும்.ஊரிலை இருக்கிற எல்லா ரோட்டாலையும் 2,3 தரம் போய் ஊதிப் போட்டு,வந்து 4 ,5 மணிக்குப் படுத்திடுவாங்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பெடியளுக்கு ஒரு பெரிய கேத்திலுக்கை தேத்தண்ணியும்,கடிக்கிறதுக்கு,கல்பணிஸோ,மலிபன் பிஸ்கட்டோ இல்லையெண்டால் தட்டை வடையோ(அது தான் எங்கடை பருத்துறை வடை)குடுப்பினம்.



பம்பலாத் தான் இருக்கும்.வெடிவால் முளைச்ச வயசு தானே?வாசியாலைக்கை படுத்திருகேக்கை ஒருத்தன்ர சாரத்தை கலட்டிறது(ஆனால் எல்லாரும் உள்ளை காற்சட்டையும் போட்டு கொண்டு தான் வருவாங்கள்),காலைப் போடுறது,கையைப் போடுறது,நித்திரையைக் குழப்பிறது எண்டு கொசப்பு வேலையளுக்கும் குறைவில்லை.அதோடை சங்கூதிக் கொண்டு போகேக்கை றோட்டுக் கரையோடை காய்ச்சு நிக்கிற கொய்யா,மாதாளை,மாங்காய்,முத்தின வாழைக்குலையெல்லாம் இதோடை காணாமல்ப் போடும்.வாழைக்குலை முத்தாட்டிலும் பரவாயில்லை,திருவெம்பா தொடங்கிறதுக்கு முதல் வெட்டிப் போடோணும் எண்டு வெட்டிப் போடிறளவுக்குக் கூடச் சனம் இருக்குது.


அதோடை பட்ட சீசனும் தொடங்கீடும் எண்டதாலை(பட்டம் பற்றிய முந்தியதொரு என் பதிவு) வேலியளிலை கட்டி கிடக்கிற கமுகஞ்சிலாகையளும் திருவெம்ப்பாவோடை காணாமல் போடும்.அதோடை கடைசி,கடைசிக்கும் முதல் நாளுகளிலை ஒரு பறையை வாடகைக்கு எடுத்து சங்க்கூதிப் பண்டாரத்தோடை சேத்து அடிச்சுக் கொண்டு போற வழக்கமும் எங்கடை ஊரிலை இருந்துது.அந்தக் காலம் 50,100 ரூபா குடுத்தே ஒரு பறையை வாடகைக்கு எடுக்கலாம்.இப்ப 400,500 குடுக்கோணுமாம்.


பறையை ஒரு பெரிய கரியல் உள்ள சைக்கிளொண்டில்(உங்கடை அம்மப்பாமார்,அப்பப்பாமார் வைச்சிருந்திருப்பினம்.பெரிய வெங்காய மூட்டையள்,அரிசி மூட்டையள்,தவிட்டு,புண்ணாக்கு மூட்டையள் ஏத்திக் கொண்டு போகலாம்.இல்லாட்டில் குடும்பம் 4,5 பெடியள் எண்டு கொஞ்சம் பெரிசெண்டாலும் ஒரு பெரிய கரியல் பூட்டினால் தான் எல்லாத்தையும் ஒண்டா இழுத்துக் கொண்டு வல்லிறக்கோயில் மாதிரிப் பெரிய கோயிலுகளுக்குப் போகலாம்.)கட்டி,சும்மா பம்பலா அடிச்சுக் கொண்டு போறது.



ஆரும் பெரிசுகள்,பெடியளை வாசியாலையிலை வைச்சு அப்பிடி இப்பிடியெண்டு பேசியிருந்தால் அவற்றை வீட்டு வாசல்லை கொண்டு போய் விடிய வெள்ள்ன அவரை எழும்புமட்டும் அடிச்சு அவரை எழுப்பிறதுக்குத் தான் பறையடிக்கிறது.அப்பத்தான் அதுகளும் ,"உதகளுக்கேன் புத்தியைச் சொல்லுவான்,உதுகளைத் திருத்தேலாது" எண்டு யோசிக்குங்கள்.


நான் போனமுறை கனகாலத்துக்குப் பிறகு திருவெம்பாக்காலத்திலை ஊரிலை போய் நிண்டனான்.என்ரை ஒண்டை விட்ட அண்ணன் ஒருத்தன்.என்னை விட 3 வயசு கூட.அவன் இப்ப இருக்கிற சங்கூதப் போற பொடியளட்டைச் சொன்னான்"உந்தப் பறை கொண்டோய் அடிக்கிற குரங்குச் சேட்டையொண்டும் செய்யாதையுங்கோ.பாட்டை மட்டும் படிச்சுக் கொண்டு போங்கோ.ஊரிலை சனம் நிம்மதியாப் படுக்கிறேல்லையே?" அதுகளும் விட்டிச்சுதுகளே.உவரென்ன எங்களெக்குச் சொல்லிறது.இந்தமுறை உவற்றை வீட்டு வாசல்லை தான் கொண்டோய் வைச்சு அடிக்கிறது.


அவனுக்கும் தெரியும் தானே.அவனும் உவங்களின்டை வயசெல்லாம் கடந்து வந்தவன் தானே. அவனும் உப்புடி ஆற்றையோ வீட்டு வாசல்லை அடிச்சு ஆரையும் எழுப்பியிருந்திருப்பான் தானே.?பூவரசங் கம்பெல்லாம் முறிச்சு கேற்(Gate) வாசல்லை வைச்சிட்டுத் தான் படுத்தவன்.அவன்ரை வீட்டு வாசல்லை றோட்டுக்கு லைற்ற் போட்டு வைச்சிருக்கிறான்.ஆனால் அதுக்கு சுவிச் கறண்ட் எல்லாம் இவன்ரை வீட்டையிருந்து தான்.விடியக் காலமை வெள்ளன 3 மணிக்குப் போய் நிண்டு கொண்டு அவன்றை வீட்டு வாசல்லை நிண்டு அடிச்சிருந்திருக்கினம்.அவன் எழும்பி வந்து உள்மதிலடியில நிண்டு கொண்டு ஆராக்கள் எண்டெல்லாம் வடிவாப் பாத்துப் போட்டு,லைற்றை நிப்பாட்டிப் போட்டு,பூவரசங்க் கம்போடை மதிலாலை ஏறி றோட்டுக்குக் குதிச்சு,வெளு வெளு எண்டு வெளுத்தெடுத்துவிட்டான்.அவங்கள் சைக்கிள்,பறை எல்லாத்தையும் போட்டிட்டு,அங்காலை இருந்த வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலையும் மதிலாலையும் ஏறி விழுந்து ஓடித் தப்பிட்டாங்கள். ம்ம்ம்.. அப்பிடி இப்பிடியெண்டு திருவெம்பாக் கால ஞாபகங்கள் பம்பலா,பசுமையா,இப்பவும் கிடக்குது.ம்ம்ம்ம்ம்


புறிம்பு - புறம்பாக/வேறாக
தாம்பாளம் - நைவேத்தியம் சுவாமிக்குப் படைக்கப் பயன் படும் தட்டு
வாசியாலை - வாசிகசாலை
வல்லிறக்கொயில்- வல்லிபுரக்கோவில்
மாதாளை - மாதுளை
முத்தின - முற்றின
கமுகஞ்சிலாகையள் - கமுகம் சலாகை
காரியமில்லை - பெருந்தவறல்ல
சட்டுப் புட்டென - உடனேயே
சேமக்கலம் - ஒரு வகை கோயில் மணி என்று சொல்லலாம்