Author: வர்மா
•10:07 AM
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் புஷ்கரணியில் தீர்த்தமாடிய அற்புதமான காட்சி






















பட உதவி; பிரியா
Author: சினேகிதி
•7:57 AM
கனடால இப்ப கோடை காலம். நேற்று கொஞ்ச நேரம் எங்கட தோட்டத்தில போய் நிண்டனான் அப்ப அங்க நிக்கிற pears மரம் மற்று அம்மா பராமரிக்கிற கொஞ்சம் வெங்காயம் கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பாவற்காய் கொஞ்சம் பச்சை மிளகாய் கொஞ்சம் கத்தரி கொஞ்சம் வெண்டிக்காய் இப்பிடி எல்லா மரங்களையும் பாத்துக்கொண்டு நிக்கேக்க எனக்கு 13 வருசத்துக்கு முதல் ஊரில எங்கட வீட்டில நின்ற மரங்கள் அந்த மரங்களோடு எனக்கிருந்த தொடர்பும் ஞாபகத்து வந்திச்சு.கனநாள ஈழத்து முற்றத்துக்கு வரேல்லத்தானே நான் அதான் இன்டைக்கு
எப்பிடியும் கதை சொல்ற என்டு முடிவெடுத்திட்டன்.



நான் சொல்லப்போற மரங்களில் எத்தினை இப்ப உயிரோட இருக்கெண்டு எனக்குத் தெரியாது.டக்கெண்டு இப்ப ஞாபகத்துக்கு வாறது எங்கட வீட்டு வாசல்ல ஒரு குட்டிப்பந்தல் இருக்கு அதில எப்ப படர்ந்து பூத்திருக்கிறது சின்ன சிவப்பு நிற ரோசாப்பூ.அதோட சேர்த்து மஞ்சள் நிற கோண் பூ. உண்மையா இதுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாது. இந்த இரண்டு பூக்களும் சேர்ந்து எங்கட வீட்டு மதிலோட படர்ந்திருக்கும். கேற்றில நிண்டு ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இந்த மஞ்சள் பூவின் மொட்டை ஆய்ஞ்சு நெத்தில அடிச்சா டொக் டொக் என்டொரு சத்தம் வரும். அப்பிடி விளையாடுறதுக்காக நிறைய மொட்டுகளை அநிநாயமாக்கியிருக்கிறம் நானும் எங்கட gang ம். ஒரு நாள் அப்பிடி மெய்மறந்து மொட்டடிச்சு விளையாடிக்கொண்டிருக்கும்போது கால் சின்ன விரல் மதிலுக்கும் gate க்குள்ளும் போய்ட்டுது. போய் நசிபட்டு நிகம் சப்பளிஞ்சு போய் ரத்தமெல்லாம் வந்திச்சு ( இந்த இடத்தில நீங்க உச்சு கொட்டோணும். சரியா). இன்று வரைக்கும் அந்த நிகம் கிளிச்சொண்டு மாதிரி வளைஞ்சு ஒரு மாதிரித்தான் இருக்கு :) :(..

இந்தக் கொடிக்குப் பக்கத்தில ஒரு மரம் நிண்டது. அது கிறிஸ்மஸ் மரம் மாதிரியிருக்கும் கிட்டத்தட்ட. கிறிஸ்மஸ் சேப்லதான் வளரும். கேற்றன் 2 பக்கமும் நின்றது. எங்கட வீட்டின் அடையாளம் அந்த மரங்கள். மற்ற மரங்களோடு ஒப்பிடும்போது இந்த மரங்கள் நல்ல strong அதால நாங்கள் கயிறு கட்டிட்டு பாய்ஞ்சு விளைாயாட இந்த மரங்கள் அநேகம் உதவி செய்யும். அடிவேண்டேக்க சுத்தி சுத்தி ஓடுறதும் இந்த மரத்தைச் சுத்தித்தான்.

இதுக்குப் பக்த்தில நீட்டுக்கு 4 தென்னை மரம் நிண்டது. எங்கட வீடு நடுவில முன் பக்கமும் பின் பக்கமும் மரங்கள். முன் பக்கம் 3 தென்னை மரம். 2 பச்சைத் தேங்காய் மரம் 1 செவ்விளநீர் மரம். அது கொஞ்சம் உயரம் என்டதால எனக்குப் பெரிசா தென்னை மரத்தோட ஒத்துவாறதில்ல. ஆனால் அந்த மரங்களைப் பார்த்துத்தான் அம்மம்மா காவோலை விளக் குருத்தோலை சிரிக்கிற கதை சொல்லித்தந்தவா. இதில வந்த இளநீர் அநேகமாக் கோயிலுகு்குத்தான் போயிருக்கெண்டு நினைக்கிறன் ஏனென்டால் எனக்கு எங்கட வீட்டு இளநீ குடிச்ச ஞாபகம் இல்லை. வேற ஆக்கள் வீட்ட வழுக்கல் சாப்பிட்ட ஞாபகங்கள் நல்லாவே இருக்கு.

தென்னை மரங்களுக்கு நடுவில ஒரு தேசி மரம் இருந்தது. பெரிய உயரமில்லை. வட்டமா நிலத்தோட முட்டுற மாதிரி வளர்ந்திருந்தது. எனக்கு இந்த மரத்தில ஒரு தனி விருப்பமிருந்தது. தேசி இலையின் வாசம் நல்லாப்பிடிக்கும். நிலத்தில முட்டுற காய்ஞ்சு போன தேசித் தடிகளை முறிச்சு மரத்துக்கு கீழ அமைதியா நிழல்ல இருந்து சட்டி பானை எல்லாம் வச்சு சோறு கறி காய்ச்சினது அங்கதான். சில நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில தேசிப்பழம் விழிந்திருக்கும். அம்மா விடிய வெள்ளென தேசிப்பழம் விழுந்திருக்கா என்று பார்த்து எடுத்துக்கொண்டு வரச்சொல்லி என்னைத்தான் அனுப்புவா.2 நாளைக்கு முதல் மகான் என்ற தொடர் பார்த்தன் விஜய் ரீவில.அதில குட்டி பரமஹம்ஸர் சொல்லுவார் தான் மல்லிகைப் பூச் செடியோட கதைச்சனான் அதான் மரம் எனக்கு நிறையப் பூ தந்ததென்று. அது உண்மை என்டால் எங்கட தேசி மரம் நல்லாக் காய்ச்சதுக்கு நான் தானுங்கோ காரணம். எங்கட கோழியும் சில நேரம் காரணமா இருக்கலாம். ஏனென்டால் அவாவும் தேசி மரத்துக்கு கீழ வந்துதான் முட்டை போடுறவா.

மற்ற மதில் கரையில ஒரு பப்பாசி மரம் நின்டது. நல்ல ஒரேஞ் நிறப்பழம். நினைக்கவே வாயூறூது. அப்பிடியொரு இனிப்பு அந்தப் பப்பாசிப்பழம். கனடால இருக்கிற பப்பாசிப்ழம் ஊசி போட்டுப் பழுக்க வைக்கிறதாலயோ என்னவோ இனிப்பே இல்லை. எங்கட வீட்டுப் பப்பாசிப்பழத்துக்கு நல்ல கிராக்கி. எங்கட பெரியப்பாக்கு 6 பிள்ளையள். வீட்ட வாறநேரம் தன்ர வீட்ட கொண்டுபோறன் என்டு பப்பாசிப்பழம் ஆய்ஞ்சுகொண்டுபோய் ஆருக்கும் வித்துப்போட்டு அந்தக்காசோட ஆள் கள்ளுத்தவறணைக்குப் போயிடும். பிறகு நாங்கள் ரியூசனுக்குப்போகேக்க பெரியம்மா என்னடி ஒரு பப்பாசிப்பழம் கொண்டுவரேல்ல இந்த முறை. அரிசிப்புட்டோட சாப்பிட நல்லாயிருக்கும் என்டுவா அப்பத்தான் தெரியும் பெரியப்பான்ர வண்டவாளம்.

கொய்யா மரம் நிண்டது. ஆகச்சின்னனில எனக்கும் அக்காக்கும் கிரந்தி அதால அம்மா கொய்யாப்பழம் சாப்பிட விடுறேல்ல ஆனால் நாங்கள் களவா மரத்தில வச்சே கடிச்சிருக்கிறம். லக்ஸ்பிறே பாக் கட்டி அது வெடிக்கிற அளவுக்குப் பெருசா வரும். அப்புறம் மாதுளம் பழம். அது நான் நட்ட மரம். காய்ச்சல் வாற நேரமெல்லாம் நேக்ரோ குடிச்சிட்டு சத்தி எடுத்ததும் அந்த மரத்துக்குக் கீழதான். (opps). மாதுளம் பழம் பழுக்க முதல் வெள்ளையா இருக்கேக்க பிஞ்சுக்காய் சாப்பிட நல்லாயிருக்கும். பழம் இன்னும் நல்லாயிருக்கும்.

மே பிளவர் என்றொரு மரமும் நின்றது. இளநாவல் நிறத்தில கொத்து கொத்தாப் பூக்கும் அந்தப்பூ. மே-யூன் காலத்தில் மட்டும்தான் அந்தப்பூ பூக்கும். அதற்குப்பக்கத்தில் சில குறோட்டன்கள் எக்ஸோறா மற்றும் நாலுமணிப்பூ நிண்டவை. நாலுமணிப்பூ நிறைய நிறத்தில நிண்டது. மஞ்சள்தான் நிறைய நிண்டது.



வீட்டுக்குப்பின்னால மதில் கரையோட ஒரு அரலி மரம் (நாவல் நிறம்) ஒரு நெல்லி மரம் ஒரு தென்னை மரம் ஒரு பப்பாசி நிறைய செவ்வரத்தை மரங்கள் நின்றன. செவ்வரத்தம் பூவின் அம்மா யூஸ் செய்து தருவா. சுடுதண்ணில பூப்போட்டுத் தங்கச்சி குளிக்க வாக்கிறது. பிறகு அப்பிடியே ஆசையில நாங்களும் செவ்வரத்தப்பூவால் நனைந்த தண்ணில குளிக்கிறது...ம் இப்பிடியோ எவ்வளவோ ஞாபகம் வருது. அடிக்கிறதுக்கு கூட அம்மா முதல் முறிக்கிறது செவ்வரத்தம் தடிதான. நிறைய திட்டு திட்டா இருக்கும் அந்தத் தடில அடி பட்டால் சும்மா அந்த மாதிரி சுணைக்கும்.

இந்த மரங்களைப் பற்றி எழுதும்போது வேறு பல ஞாபகங்களும் கூடவே ஞாபகம் வருகிறது.

மீண்டும் வருகிறேன்.
Author: வர்மா
•8:34 PM
வரலலாற்றுப்பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதீர்த்தோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.































பட உதவி; பிரியா






Author: வர்மா
•3:27 AM
வரலாற்றுப்புகழ்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமிஆலய தேர்த்திருவிழா இன்று சிற்ப்பாக நடைபெற்றது










பட உதவி; பிரியா

Author: வடலியூரான்
•3:00 AM
இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது
Author: வடலியூரான்
•2:55 AM
மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.



கோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.




மாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள்ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.


நாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்டுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.



வடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் "நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிடிக்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ)



அறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு போடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.



சிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில் மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.



சாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும் சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும் சமையற்காரனதும் சுத்தத்தை. கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.




பின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கிட்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.


சொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே "அவக்" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது. சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.



சரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள் எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.



அங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்?.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை....!!!...வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.
Author: ஹேமா
•2:25 AM
தட்ஷணாமூர்த்தி
நினைவலையொன்று வீசியடிக்கிறது இன்று தொலைபேசியூடாக அம்மாவோடும் அப்பாவோடும்.

ஞாபகங்கள் ...இதுதான் எங்கட பலஹீனம்.எல்லாத்தையும் மனசுக்குள்ள பொக்கட் போல நிரப்பி வச்சுக்கொண்டு திரியிறம்.அது உடம்பு முழுக்க ஊர்ந்தபடி திரியுது.எதையும் பெரிசா நினைக்காமல் மறந்திட்டா நிறையப் பிரச்சனைகள் குறையும்.ஒதுக்கித் தள்ளி வச்சிட்டு இதுகள் இல்லாட்டி எங்களுக்கென்ன எண்டு இருக்க முடியாமல் இருக்கு.

லண்டனில இருந்து வாற தொலைக்காட்சியில ஒரு விளம்பரம்.அதில கோயில் திருவிழா. அங்க ஒரு மேளச்சமா.அதைப் பார்த்தால் ரசிச்சுச் தொலைச்சிட்டுப் போகவேண்டியதுதானே. ஏன் உடன் எங்கட உப்புமடச் சந்தியடிப் பிள்ளையார் கோயில் ஞாபகத்துக்கு வரவேணும்.அது துரத்தியடிக்குது ஊர் வரைக்கும்.தூரமாய்க் கேட்ட மேளச் சத்தம் இப்ப பக்கதில கேக்குது. அந்த மண்வாசனை செம்பாட்டுப் புழுதியும்,பனக்கூடலும்,பனம்பழ வாசமும்,பன்னாடை, காவோலை,கொக்கறை,ஙொய் என்று பறந்து பயமுறுத்தும் மாட்டிலையான் அதைத்தொடர்ந்து....

அப்புக்குட்டி அண்ணாட்ட ஏதோ ஒரு பனைமரம் குறிச்சு அந்தப் பனைக் கள்ளுத்தான் வேணுமெண்டு வாங்கிக் குடிச்சிட்டு சித்தியை அடிக்கிற சித்தப்பா,அவரோடு சேர்ந்து குடிச்ச வேலுப்பிள்ளை அண்ணை வடக்கு வீதியில மேளச்சத்தம் கேட்டு கண்ணையும் பூஞ்சிக்கொண்டு வாயையும் சப்பிப் புழுந்திக்கொண்டு "அடியுங்கோ நல்லா அடியுங்கோ" எண்டு தானும் தாளம் போட்டபடி அட்டகாசம் பண்றதையும் மறக்க முடியேல்ல.

நிலவில் நண்பர்கள் சூழ
கோயில் மணல் கும்பியில்
நான் தான் ராஜாவாய்.

அடுத்த நிமிடம்கூட
கேள்விக்குள் இல்லாத
விதை முளைத்து
வெளி வந்த வசந்த காலம்.

பூவரசம் தடியும்
கள்ளி முள்ளும்
காஞ்சூண்டி இலையும்
பிச்சு மறைச்சு
மூடியொரு பொறிக்கிடங்கு.

குண்டிக் கழுசானில்
தபால் போடலாம்.
மூக்கைச் சீறி
சட்டையில் துடைச்சபடி

நிலவு வெளிச்சத்தில்
ஒளிச்சிருச்சிருந்து பாக்க
பொறிக்கிடங்கில்
விழுந்து
அம்மா என்று அலறும்
யாரோ ஒருவர்
அடுத்த நொடி
அப்பா வாறார்.

மாயமாய் மறையும்
வித்தைக்காரன் நான் அப்போ!!!

சில நேரங்களில் இப்பிடி நினைவுகள் துரத்தி துரத்தி அடிக்கேக்க எங்கயாச்சும் ஒரு மூலையில குந்தியிருந்து அழவேணும் போலக் கிடக்கு.பக்கத்துக் கோயில்ல திருவிழா எண்டா முதல் நாளே லவுட்ஸ்பீக்கர்ல பக்திப் பாட்டுக்கள் கேக்கத் தொடங்கிடும். கிட்டத்தட்ட வீடும் கோயில்போல ஆயிடும்.விடியக்காலேல எழுப்பிவிட்ருவா அம்மா. துளசிமாடம் சுற்றிப் பெரிய முற்றம்.அதைப் புழுதி பறக்கக் கூட்டிப் பிறகு புழுதி தணிக்க சாணகம் கரைச்சுத் தெளிச்சு முற்றம் நிறையக் கோலம் போட்டு வீட்டு முற்றத்தில கட்டில் போல ஒரு பெரிய திண்ணையோடு ஒரு பகுதி.அதையும் அழகா பசுஞ்சாணியால மெழுகிவிடுறா அம்மா.

வீட்டில சொல் பேச்செல்லாம் அந்த நேரத்தில ஒழுங்காக் கேப்பம்.ஏனெண்டால் இரவில கண்ணன் கோஷ்டி,சின்னமணி அண்ணையின்ர வில்லுப் பாட்டு,சின்னமேளம் எண்டு நடக்கும்.பிறகு விட மாட்டினம்.எல்லாரும் தோய்ஞ்சு குளிச்சு சாமி கும்பிட்டு பிடிக்காவிட்டாலும் விரதம் இருந்தே ஆகவேணும்.பசியெண்டா கண்ணுக்குள்ள பசிக்கும்.

அம்மா சமைக்க அடுக்குப் பண்றா.அம்மாவுக்கு தேங்காய் துருவி வெங்காயம் உரிச்செல்லாம் குடுப்பன் வீட்ல நிண்டா.அப்பாவும் ஒரு சாதரண தவில் வித்வான்தான்.போய்ட்டார் வேற எங்கேயோ சேவுகமாம்.நான் பள்ளிகூடம் போகேல்ல.பிள்ளையார் எல்லாம் அருள் தருவார் எண்டு திருவிழா நேரத்தில 2-3-4 நாளைக்குப் போகமாட்டன்.

சமைச்சு வச்சிட்டு கோயிலுக்குப் போய் வந்துதான் சாப்பிடுவம்.கோயில்லயும் சாப்பிடலாம். அன்னதானம் தருவினம்.அம்மாவுக்கு வருத்தம்.பிந்தினால் மயங்கி விழுந்திடுவா.அம்மா பூசை முடிய அவசரமா வீட்டை வந்து சாப்பிடுவா.நான் வரமாட்டன்.அம்மாட்ட குழப்படி செய்யமாட்டன் எண்டு சத்தியம் பண்ணிட்டுத்தான் நிப்பன்.அதுவும் விரதமெண்டா சத்தியத்தைக் காப்பாத்தவேணும்.

பூசை தொடங்குது.சுத்துப்பலி சாமியைச் சுத்துவினம்.தொடங்கும் ஆரவாரம்.
ஆம்பிளைகள் பிரதட்டையும்,பொம்பிளைகள் அடியழிச்சும் வருவினம்.வடக்கு வீதிதான் அமர்க்களம்.சாமியும் அப்பிடியே நிக்கும்.அப்படி ஒரு நிகழ்வு அதிலதான்.


இணுவில் தட்ஷணாமூர்த்தி,இணுவில் சின்னராசா,கைதடிப் பழனி,நாசிமார் கோயிலடி கணேசு.சமா எண்டா அதுதான் மேளச்சமா.அதுதான் கேட்டது எனக்கு இப்ப கொஞ்சம் முன்னால.அவையளை அதில கன நேரம் நிக்க வைக்கவெண்டே பெரிசா மைக் கொண்டு வந்து வச்சிடுவினம்.

தட்ஷணாமூர்தியின்ர வடிவைப் பாக்கவெண்டே பெட்டையள் கூடி நிப்பினம்.அவர்தான் தொடங்குவார் தெரியுமோ.நெஞ்சில மொத்தமா ஒரு சங்கிலி மீன் வச்ச பதக்கத்தோட சிரிச்சபடி மனுஷன் தொடங்கி வைப்பார்.அவரின்ர தவில் மழைபோல கொட்டித் தீர்க்கும். கடல் போல கொந்தளிக்கும் விரல்களில அத்தனை லயம்.பிசகாத தாளம்.கோபமாய் முறைச்சு சிரிச்சு தானே தாளமும் போட்டுக் காட்டித் தன் கலையின் அத்தனை வித்தையையும் கலந்து குழைத்துத் தரும் கலைக் கடவுள் அவர்.

மேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக்கணித வேழமெனத் திகழ்ந்த வித்தகன் என்பார்கள் அவரை.

ஈழத்து மேதை கொடுத்த லயத்தை அப்பிடியே கேட்டு வாங்கிக் கொள்கிறார் இணுவில் சின்னராசா.தடியன் சின்னராசா.கருவல் சின்னராசா எண்டெல்லாம் பேர் வச்சிருக்கிறம் அவருக்கு.மலைபோல பெருத்த உடம்பு.தந்ததை நான் அழகாக இன்னும் அழகாய் மெருகுபடுத்தி வாசிப்பேன் என்பதுபோல தாளக்கட்டோட பிசகாமல் வேர்த்து ஒழுக ஒழுக வாசிக்கிறார்.பக்கத்தில அவரின்ர மகனும் நிக்கிறார் தாளம் போட்டபடி.தட்ஷணாமூர்த்தியை நேர பார்த்தபடி என்னாலயும் ஏலும் என்கிற மாதிரி சிரிச்சபடி வாசிக்கிறார்.நாங்கள் கொஞ்சப் பெடியள் சுத்தி நிண்டு வேடிக்கை பாக்கிறம்.ஆனாலும் ரசிக்கிறம்.சிரிக்கிறம்.தாளம் போட்டும் பாக்கிறம்.ஆனால் அவையள் போடுறது வேற மாதிரிக் கிடக்கு.

விரதம்.பட்டினி சனங்களுக்குப் பசி.எண்டாலும் வெயிலுக்க நிக்குதுகள் மேளச்சமா ரசிச்சபடி.இதை விட்டால் இனி அடுத்த வருசம்தானே.

N.K.பத்மநாதன்

சின்னராசாவைக் கவனிச்சபடி கட்டையான ஒருத்தர்.கருப்புத்தான்.கை துருதுருக்கக் காத்திருக்கிறார் கைதடிப் பழனி.ஞானம் முட்டின தாள லயிப்பு சின்னராசவின்ர வாசிப்பில.அவர் குடுக்க இவர் வாங்கிறதுபோல அப்பிடியே எட்டிப் பிடிச்சுக்கொள்றார் பழனி.வாங்கிய வேகத்தில் தன் திறமையைச் சொல்லாமல் பார்வையாலயே கர்வமாய்ப் பார்த்தபடி வெளுத்து வாங்குகிறார்.தாளம் ஏற ஏற அவரை விட தட்ஷணாமூர்த்தியும் சின்னராசாவும் வித்துவத்தில் திறமையாய் இருந்தாலும் தானும் சளைத்தவரில்லை என்பதைப் புன்னகைத்தபடி தவிலில் சொல்லிக் காட்டியபடி வாசிக்கிறார்.

இது ஒரு சோர்வில்லாத சமர்.தாளத்தை மெட்டுக்குள் அடக்கும் வித்தை.கைமாறும் தாளக்கட்டு தவிலுக்குள்.பசி பறந்திட்டுது.அம்மாகூட வீட்டை போகாம மயங்கியும் விழாமப் பாத்துக்கொண்டிருக்கிறா. பிள்ளையாரப்பா அழகா ரசிச்சபடி இருக்கிறார்.பசிக்கேல்ல அவருக்கும்.

நிலை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்த வேகத்திலயே மேளச்சமா நாச்சிமார் கோயிலடி கணேசு,வாக்கர் கணேசு எண்டு சொல்ற அவரிட்ட போய்ட்டுது.அவர் கால்களை அகல வச்சபடி தாளத்தைக் காலில போட்டுக்கொள்றார்.தாளக்காரருக்கு ஒரு முறைப்பு.தவில் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு வித்தியாசம் காணலாம் வாசிக்கும் தன்மையிலும் தவிலின் நாதத்திலும் கூட.கணேசு வாசிக்கும்போது உடம்பு அசையாது.வெத்திலை வாய் நிறைய எப்பவும் இருக்கும்.கோயில்ல வாசிக்கும்போது மட்டும் இருக்காது.நாசூக்கான வாசிப்பு எனலாம்.


கானமூர்த்தி பஞ்சமூர்த்தி

கண்கள் விரிய காது அடைக்க ஆனாலும் தூரமாய்ப் போகாமல் பக்கத்தில நிண்டு பார்ப்போம்.ஒருத்தை ஒருத்தர் போட்டிபோல யாரையாச்சும் தடக்கி விழுத்தவேணும் எண்டுதான் வாசிப்பினம்.யாருமே தாளம் பிசகாம லயம் குழம்பாம வாசிப்பினம்.ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவை இல்லை.வீச்சுக் குறையாத கலைச் செல்வங்கள்.அந்த நாதம் எல்லாம் காற்றில் தொங்கி நிற்கிறது இப்போ.அவர்களும் இல்லை இப்போ. வாரிசுகள் அவர்கள் அளவுக்கு இல்லாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ அல்லது புத்தர் சிலையோ !

இதில் குறிப்பிட்ட கலைஞர்களை விட இவர்கள் காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்.

கோண்டாவில்(மூளாய்) பாலகிருஷ்ணன் சகோதரர்கள்
அளவெட்டி குமரகுரு
இணுவில் கோவிந்தசாமி
அளவெட்டி பாலகிருஷ்ணன்
சட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் - தவில்
காரைதீவு கணேஸ் - நாதஸ்வரம்
சாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம்
அளவெட்டி S.S.சிதம்பரநாதன்
அளவெட்டி M.சிவமூர்த்தி - நாதஸ்வரம்
அளவெட்டி R.கேதீஸ்வரன்
யாழ்பாணம் K.நாகதீபன்.
இணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள்

(இன்னும் அறிந்தவர்கள் பெயர்களிருந்தால் அறியத்தாருங்கள்.)

Author: தமிழ் மதுரம்
•5:36 AM
பழசுகளும் பகிடிகளும்/ பகிடியளும்!
கதை நிகழும் இடம் ரசாத்தி அக்காவின் நல்ல தண்ணிக் கிணத்தடி!



இக் கதையில் இடம் பெறும் பாத்திரங்கள்: ராசாத்தி, செல்லாச்சி, பாக்கியம் ஆச்சி
இனி......



பாக்கியம்: ’’என்னடி பிள்ளை’ ராசாத்தி ’அறக்கப் பறக்க ஓடியாறாய்? என்ன விசேசம்’? ஏதும் அவசரமே பிள்ளை?

ராசாத்தி: இல்லையணை பாக்கியமாச்சி.. உவன் ’மூத்தவன்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தவன். ரியூசனுக்குப் போக வேணும் எண்டு. அவசர அவசரமா விழுங்கிக் கொண்டிருந்தவன். அது தான் தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’. குடத்துக்கை அவசரத்துக் குடுக்க குடிக்க தண்ணியும் இல்லை. அது தான் கொஞ்சம் நல்ல தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ போவம் எண்டு ஓடியந்தனான் ஆச்சி. சரியணை ஆச்சி.. நான் தண்ணியைக் கொண்டு போய்க் குடுத்துப் போட்டுப் ‘பேந்து வாறனணை ஆச்சி.


ராசாத்தி: தண்ணிக் குடத்தை வைத்து விட்டு பாக்கியம் ஆச்சியின் கிணத்தடிக்கு ஓடி வருகிறா. அவவைத் தொடர்ந்து செல்லாச்சியும் வருகிறா.


பாக்கியம்: எடி பிள்ளை... செல்லாச்சி.. சுகமாய் இருக்கிறியேடி. என்ன உன்னை இந்தப் பக்கம் காணவில்லை. ’கண்டு கன காலம்’.

செல்லாச்சி: அதணை ஆச்சி உவன் என்ரை ’இளையவன் இருக்கிறான் எல்லே. அவன் போன கிழமை ’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன். உனக்குத் தெரியுமெல்லே. அது தான் அவனோடை ’கோயில் குளமெண்டு திரிஞ்சு உங்கடை ’வட்ட மேசையடிக்கு’ வர ஏலாமல் போட்டுது.
அது சரியடி பிள்ளை... ராசாத்தி.. என்ன உன்ரை றோசுக் குடத்தைக் காணேல்லை. பச்சைக் கலரிலை குடம் வாங்கியிருக்கிறாய். என்ன ’மோனும், மருமோளும்’ காசு அனுப்பீனமோ? உனக்கென்ன? வெளி நாட்டுக் காசு. ’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’. ம்.. உம்... நடக்கட்டும் நடக்கட்டும்.


ராசாத்தி:
எணேய் ஆச்சி.... உனக்கு வயசு போனாலும் இந்த நக்கல், நையாண்டி குறையவேயில்லை. கேட்டியேடி செல்லாச்சி.. பாக்கியமாச்சியின்ரை கதையை. நான் குடத்தை மாத்திப் போட்டனாம். மனுசி நல்லா ‘வரையறைவு பாக்குது’. ஆச்சி நீ ’வரையறைவு பாக்கிறதிலை’ சரியான ஆள் தான்..
அதணை ஆச்சி... என்ரை றோசுக் குடத்திலை சின்னதா ’பீத்தல் விழுந்து போட்டுது’. அதாலை தண்ணி ’சிந்துது’. அது தான்.. குடத்தை மாத்திப் போட்டன். அதுக்குப் பாரன் செல்லாச்சி..இந்தக் கிழவியின்ரை நக்கலை.

பாக்கியம்: அடியே பிள்ளை எங்கடை ஆட்கள் இப்ப வெளி நாடுகளுக்கு கப்பலிலையும் எல்லோ வெளிக்கிடுறாங்களாம். பாவம் பொடியங்கள். சரியாக் கஸ்ரப்படுதுகள். கடலிலை கப்பலிலை போறதெண்டு வெளிக்கிட்டு நீந்தத் தெரியாமல் ’தாண்டுமெல்லே’ போகுதுகள். பின்னை பாரணடி பிள்ளை. என்ரை பேரனும் ஒருத்தன் கப்பலிலை எங்கையோ அஸ்ரேலியாவாம்...எண்டு ஒரு நாட்டுக்குப் போனவன். அவன் போன கப்பலும் ’தாழத் தொடங்கி அதுகள் ஒண்டிரண்டு தானாம் நீந்திக் கரை சேர்ந்ததுகள். பாவம் எங்கடையள் என்ன?

செல்லாச்சி: உனக்குத் தெரியுமோடி.. ’நாய்க்கு நடுக்கடலிலை போனாலும் நக்குத் தண்ணி தானாம்’. அது போலத் தான் எங்கடையளுக்கு எங்கை போனாலும் விடிவே இல்லை. பாவம் இளம் பொடியள். கஸ்ரப் பட்டுப் போய் நடுக்கடலிலை ’அந்தரிக்குதுகள். என்ரை சந்நிதியானே.. நீ தானடா உதுகளை காப்பாத்த வேணும்/


ராசாத்தி: பின்னை என்ன காணும் நீங்கள் ரெண்டு பேரும் லூசுக் கதை கதைக்கிறியள். உவங்கள் வெள்ளைக்காரர் அகதிகள் என்று உண்மையான பிரச்சினை உள்ள ஆட்களை விசாரிச்சு விசாக் குடுக்க இப்ப பிரச்சினை இல்லாததுகளும் எல்லோ பட்டியா வெளிக்கிட்டுப் போய் விசாக் கேட்குதுகள். எங்கடையள் எப்பவுமே திருந்தாதணை ஆச்சி. ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்.

பாக்கியம்:
எங்கடையளோ திருந்தாதுகள். ’அவிட்டு விட்ட பட்டியள் மாதிரி ஒன்றுக்குப் பின்னாலை ஒண்டா இப்ப வெளிக்கிட்டு உவங்கள் வெள்ளைக்காரருக்கெல்லே தலையிடியைக் குடுக்குதுகள். உதைத் தான் சொல்லுறது பிள்ளையள் ’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’ என்று. ’பொழுது படப் போகுது’ பிள்ளையள். உங்களோடை கதைச்சுக் கதைச்சு முதுகு ’ஊத்தை பிரட்ட’ மறந்து போட்டன். ’கதை எண்டால் கயிலாயம் போகலாம் எண்டுறது இதைத் தான் பாருங்கோ. சரி.. சரி...’ஊத்தை பிரட்டிப் போட்டு நாலு வாளி வாத்துப் போட்டு வாறன் இருங்கோடி...


சரி ஆச்சி.. நீ வடிவாக் குளி... நாங்கள் வெளிக்கிடப் போறமணை...போயிட்டு வாறம் ஆச்சி..

பாக்கியம்: என்னடி பிள்ளையள் போறீங்களே.. சரி சரி..பிறகு சந்திப்பம் என்ன.

பாக்கியம்: அடியே பிள்ளை செல்லாச்சி... என்ன உன்ரை பேத்தி அடிக்கடி ஓங்காளிக்கிறாளாம்? என்ன விசயம்? சொல்லிப் போட்டுப் போவனடி.

செல்லாச்சி: அதணை ஆச்சி.. எனக்கொரு.... .. போறான்.....

மேலே உள்ள இச் சிறு உரையாடலில் வரும் பெரும்பாலான சொற்பதங்கள் எமது ஈழத்தின் பல பிராந்தியங்களிலும் பாவனையில் உள்ளவையே. ஒரு சிலருக்கு இச் சொற்பதங்கள் புதிதாகவும் இருக்கலாம். ஆகவே இச் சொற்பதங்களுக்குரிய/ சொற்களுக்குரிய விளங்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே சாலச் சிறந்தது.


*’அறக்கப் பறக்க ஓடியாறாய்: அவசரமாக வியர்க்க விறுவிறுக்க.. அவசரமாக/ வேகமாக ஓடிவருவதை குறிக்கும்.

*’மூத்தவன்’: வீட்டிலை உள்ள முதலாவது பையன்/ வீட்டிற்கு மூத்த பையன்.

*என்ன விசேசம்’: என்ன புதினம்? என்ன சங்கதி.. இப்படியான பல பொருள்களில் வரும்.

*தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’: தொண்டையிற்குள் சிக்கிச் போச்சு/ தொண்டையிற்குள் உணவு தடக்கிப் போட்டுது/ இறுக்கிப் போட்டுது.(மென்று விழுங்கிய உணவு தொண்டையிற்குள் பொறுத்து நிற்பதை குறிக்கும்- சமிபாட்டுத் தொகுதிக்குச் செல்லும் நரம்புத் துவாரத்தினுள் உணவு சிக்குவதை குறிக்கும்/

*தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ : தண்ணி கிள்ளுதல்/ தண்ணி எடுத்துக் கொண்டு போவதைக் குறிக்கும்.

*‘பேந்து வாறனணை ஆச்சி: கொஞ்ச நேரத்தாலை வருகிறேன். பிறகு வருகிறேன்.

*’கண்டு கன காலம்’: பார்த்து பல நாட்கள்/ நீண்ட நாட்களின் பின்னர் சந்திப்பவரைக் குறித்தல்.

*இளையவன்: குடும்பத்தின் கடைசிப் பிள்ளை/ வீட்டின் கடைக் குட்டி

*’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன்: வெளி நாட்டிலை இருந்து வந்து நின்றவன்./ தூர தேசத்தில் இருந்து வந்து நிற்றல்.

*’கோயில் குளமெண்டு திரிஞ்சு: கோயிலைச் சுற்றி வலம் வந்து./ கோயிலுக்குப் போய்.

*’வட்ட மேசையடிக்கு’: பழசுகளின் மாநாட்டு இடம்/ பழசுகள் கூடிக் கதைக்குமிடம்/ ஊரிலுள்ளவர்கள் சேர்ந்து அரட்டையடிக்கும் பகுதி

*ஏலாமல் போட்டுது: இயலாமல் போட்டுது/ முடியாமல் போட்டுது.

*’மோனும், மருமோளும்’ : மகனும் மகனின் மனைவியும் எனும் பொருளில் இவ் இடத்தில் நோக்கலாம். மருமகள்: தனது சகோதரனின் மகளையும் மாமி/ மாமா முறை உள்ளவர்களால் மருமகள் எனும் பொருள் பட அழைப்பார்கள்.

*’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’: வெளி நாட்டிலை உள்ளவர்களிடம் உரையாடிய பின்னர் அவர்கள் அனுப்பும் பணத்தினைக் குறிக்கும். வெளி நாட்டுக் காசு உள்ளூரிற்கு வரும் போது பெரிய தொகையாக இருப்பதால்/ சுளையாக வருவதால் அப் பணத்தினை விளிக்கப் பயன்படுத்துவார்கள்.

*‘வரையறைவு பாக்குது’/ விடுப்புப் பார்த்தல்: நன்றாக உற்றுப் பார்த்தல். மற்றவர்களின் விடயங்களை வேவு பார்த்தல்/ உளவு பார்த்தல். அல்லது உய்த்தறிதல்.

*’பீத்தல் விழுந்து போட்டுது’: ஓட்டை விழுந்து போட்டுது/ குடத்திலை துவாரம் விழுந்து விட்டுது.

*’சிந்துது’: ஒழுகுது/ துவாரத்தின் வழியே நீர் வெளியேறுவதைக் குறிக்கும்.

*’தாழத் தொடங்கி: கப்பல் கப்பல் மூழ்கத் தொடங்குதல்/ கடலில் மூழ்கத் தொடங்குதல்.

*அந்தரிக்குதுகள்: தத்தளித்தல்/ உத்தரித்தல். அநாதரவாக இருத்தல்/ உதவியற்று நிர்க்கதியாக இருத்தல்.

*பட்டியா வெளிக்கிட்டுப் போதல்: கூட்டமாகப் புறப்படுதல்/ அலையாகத் திரளுதலை அஃறிணையில் விளித்துக் கூறுவார்கள்.

*’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’/ ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்: இச் சொல் ஒரு சில உதவிகள் செய்தால் எல்லாவற்றையும் அவர்களிடம் வேண்டிக் கையேந்துவதை நகைச்சுவையாக சொல்ல இப் பழமொழியினைப் பயன்படுத்துவார்கள்.

*’ஊத்தை பிரட்ட’ : முதுகில் உள்ள அழுக்கினை அகற்றிக் குளிப்பதைக் குறிக்கும்.



*ஓங்காளிக்கிறாளாம்?: இச் சொல்லுக்குரிய விளக்கத்தினை வாசகர்களாகிய நீங்கள் தெரிந்தால் சொல்லலாம். விடை என்ன? விரைவில் சொல்லுங்கள்.