Author: சினேகிதி
•10:30 AM
குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி பட்டினியோடு வாழும் நம் சிறார்கள் நாளை வன்முறை நிறைந்தவர்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது.குண்டு, செல், துவக்கு, இரத்தம், தசைப்பிண்டங்கள், சடலங்கள், பசி, பட்டினி இவையெல்லாம் இந்தச் சிறார்களின் தினசரி வாழ்வின் அங்கங்களாக உள்ள இந்த நிலை இவர்களுக்குப் பழகிப்போனால் உயிரிழப்புகள் இனி இவர்களைப் பெரிதாகப் பாதிக்காமல் போய்விடில்......???????


வீட்டில் பசியால் துடிக்கின்ற பிள்ளைகளுக்காக வரிசையில் நின்று அரிசி கிடைத்தவரிடமிருந்து அதைக் கிடைக்காதவர் அடித்துப் பறித்துக்கொண்டதை நாங்கள் செய்தியாகப் படித்திருப்போம். மற்றவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும், குடும்பமிருக்கும் அவர்களுக்கும் பசியிருக்கும், வலியிருக்கும், உணர்வுகளிருக்கும் என்று சிந்திக்கத்தெரிந்த பெரியவர்களுக்கே இந்த நிலமை என்றால் சிறுவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? பிறந்ததிலிருந்தே இந்தச்சிறுவர்களால் கைதுகளும், காணாமல் போதலும், ஆட்கடத்தல்களும், ஆயுதப்பிரயோகங்களும், பாலியல் வல்லுறவுகளும், உயிரிழப்புகளும்தான், ஐம்புலன்களிலும் உணரப்படுகிறது. ஆசையாகக் கதைசொல்லிச் சோறூட்ட அம்மா இல்லை. அரவணைக்க அப்பா இல்லை.கூட விளைாயட சகோதரர்களுமில்லை, நண்பர்களுமில்லை. குதூகலிக்க உறவினர்களுமில்லை. சத்தான சாப்பாடில்லை. உறங்கிப்போக உரிமையுள்ள வீடுமில்லை. இப்பிடி ஆரோக்கியமாக வளரவேண்டிய பிள்ளைகளுக்குத் தேவையான எதுவுமில்லாமல் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் சிறுவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்ப்போகிறது? கண்களில் சோகத்தைச் சுமக்கும் இந்தச்சிறுவர்களின் மனங்களில் ஆயிரம் கேள்விகள், ஏக்கம், கோபம்,விரக்தி, வெறுப்பு.அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி ,தங்கை ,அயலவர் ,உறவினர் இப்படி கண் முன்னாலே கொல்லப்பட்டவர்களின் கடைசி அலறல்களையும் அவலங்களையும் இன்னும் முதல்தடவையாக உணர்பவர்களாக காட்சியளிக்கும் இந்தச்சிறார்களின் மனங்களில் யுத்தத்தின் வடுக்கள் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. இதன் மறைமுகப் பாதிப்புகள் நமக்கு இப்போது விளங்காவிட்டாலும் இதன் நீண்டகாலப்பாதிப்புகள் நாமெண்ணிப் பார்க்காத அளவுக்கு கொமடூரமானதாகவும் இருக்கலாம். இவர்களுக்கு உளவியல் பயிற்சிகள் இப்போதிருந்தே அளிக்கப்பட வேண்டும். இல்லையேல் ஒரு வன்முறை நிறைந்த சமுதாயத்தை வரவேற்பவர்களாகிவிடுவோம் நாங்கள்.





10 வயதிலெல்லாம் நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? நிச்சயமாக இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாக தந்தையாகவிருக்கவில்லை. தாய் தந்தை இருவரையும் போரில் அல்லது சுனாமியில் தொலைத்துவிட்டு தன்னிளைய சகோதரர்களுக்கு குளிப்பாட்டி, உணவூட்டி, பாடசாலைக்கு அனுப்பிவிட்டுப் பின்னர் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை.எதற்கும் அம்மாவை அப்பாவை எதிர்பார்த்துக்கொண்டும், செல்லம் கொஞ்சிக்கொண்டுமிருக்கும் விளையாட்டுத்தனமாக இருக்கவேண்டிய 10 வயதில் ஒரு தாயின், தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று எத்தனையோ சிறுவர்கள் இருக்கிறார்கள். ஆதரவு தேவைப்படும் நிலையிலிருக்கும் இந்தச்சிறுவர்கள் ஆதரவு வழங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.இந்தச்சுமை அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறது?

ராமேஸ்வரம் படத்தில் ஒரு காட்சியில் சிறுவர்கள் சிலர் "ஆமி - புலி " விளையாட்டு விளையாடுவினம். "நாங்கள் புலி இவங்கள் ஆமி ; இது எங்கட machine gun" ஒருவன் துரத்திக்கொண்டுபோய் சுட மற்றவன் துடிதுடித்துச் சாவது போல் அவர்களது விளையதட்டுத் தொடரும்.போர் இவர்களின் வாழ்வில் ஊறியிருக்கு.இது இன்று நேற்றல்ல சில தசாப்தங்களாகவே துவக்கு செல் குண்டுச்சத்தம் டாங்கி பீரங்கி இவைகளெல்லாம் சிறுவர்களின் விளையாட்டில் முக்கிய அங்கம் பெற்றுவிட்டன. 93ம் ஆண்டென்று நினைக்கிறன். சாவகச்சேரியில் மாமா வீடு செல்களால் சல்லடையாக்கப்பட்டு வீட்டில் தனித்திருந்த மாமாவைப் பொறுக்கித்தான் கட்டி வைத்திருந்தார்கள். அன்றிலிருந்தே மச்சானின் விளையாட்டுப் பொருட்களில் அவன் பொறுக்கி வைத்திருந்த சன்னங்கள் தனித்துவமானவை.அவன் அந்தச் சன்னங்களை வைத்து நிறைய வித்தைகள் காட்டுவான். மாலைகூடக் கட்டி வைச்சிருந்தான் ஒரு விடுமுறையில். சிறுவர்களின் விளையாட்டு இப்படி இருக்கையில் சிறுமிகளின் விளையாட்டு எப்படியிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.....பலாத்காரத்துக்குள்ளான ஒரு பெண்ணின் நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்குமோ இச்சிறுமிகளின் விளையாட்டு? கணவனை பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாயின் அவலநிலையைக் காணலாமோ இவர்களின் விளையாட்டில்? பசியில் அழும் குழந்தையின் கண்ணீரை விரட்ட வழிதேடும் தாயின் போராட்டமா இருக்குமோ? அல்லது படிக்க முடியாமல் பல நாளும் பூட்டியிருக்கும் பாடசாலையை வெறித்துநோக்கும் மாணவியின் விரக்தியைக் காட்டுவதாக இருக்குமோ?

அடிக்கடி குண்டுவெடித்து மனிதர்கள், வீடுகள், வாகனங்கள் சிதறுவதையும், கொலைகளையும், கொள்ளைகளையும், பலாத்காரங்களையும், காட்டிக்கொடுத்தல்களையும், பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் வளர்ந்தவர்கள் ஒருநாள் இவற்றிலிருந்து விடுபட்டு எங்களைப்போல புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் பாடசாலைக்குச் செல்லும்போது அல்லது வேலைக்குச் செல்லும்போது ஒரு சின்னச் சத்தம் கூட இவர்களுக்கு பலமான அதிர்வை ஏற்படுத்தக்கூடும்.உதாரணமாக விக்டோரியா தினம், புத்தாண்டு தினம், கனடா தினம் போன்றவற்றுக்கு நாங்கள் வெடிக்கும் வாண வேடிக்கைகளின் சத்தம் கூட ஆட்லறி செல் சத்தமாகக் கேட்கக்கூடும். பாடசாலையில் படிக்கும் பாடங்கள் விளங்காமல் காதில் குண்டுச்சத்தமும் அவலக்குரல்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கலாம்.பயங்கரமான கற்பனைகள் எண்ணங்கள் தான்தோன்றித்தனமாக உருவாகலாம். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு எரிமலை வெடிக்கமுதல் எப்படி தீக்குழம்புகள் கோரநாக்கை நீட்டிக்கொண்டிருக்குமோ அப்படியிருக்கலாம் இவர்களின் மனசு. ஒருநாளைக்கு வெப்பம் தாங்காமல் வெடித்துச்சிதறக்கூடும் இவர்கள். இவன்கள் மற்றவர்களின் பார்வைக்கு ஒரு gangster ஆகத் தென்படலாம். ஆனால் இவர்களுடைய வன் செயல்களின் ஆரம்பப்புள்ளி நெல்லியடியின் ஒரு மூலையில் ஒரு இராணுவச்சிப்பாயின் பாலியில் இச்சையின் வடிகாலாயிருக்கலாம்.அல்லது கண்முன்னே தன் தாயோ சகோதரியோ கதறக்கதற பலாத்காரப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்டவன் தான் ஒரு abuser ஆவதன் மூலம் தானிழந்த ஏதோ ஒன்றைத் திரும்பப் பெற துடிப்பது போல இந்தச்சிறுவர்களும் பிற்காலத்தில் ஒரு வன்முறையாளனாக வல்லுறவு கொள்பவனாக மாறலாம்.





இந்தச்சிறார்கள் அனைவருக்கும் உளவியல் நிபுணர்களின் உதவி மிக மிக அவசியமானதொன்று. உளவியல் நிபுணர்கள் என்றால் பைத்தியத்தைக்குணப்படுத்துபவர்கள் அவர்களின் உதவி எங்கள் குழந்தைகளுக்குத் தேவையில்லை என்பது பலரின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் கண்முன்னால் நடந்த கொடூரங்களைப் பார்த்து பார்த்து வளர்ந்த இந்தச் சிறுவர்கள் epilepsy , mild seizure, multiple personality disorder, split personality, antisocial personality , anxiety disorders, sleeping disorders போன்ற psychological அல்லது neurlogical disorders களால் பாதிக்கப்படக்கூடியவர்களாக, ஆக்ரோசம் நிறைந்தவர்களாக, பழிவாங்கும் உணர்ச்சி நிறைந்தவர்களாக, போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடியவர்களாக உருவாகிவிடாமல் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது.தற்போதைய காலகட்டத்தில் பண உதவி மட்டுமே வழங்கக்கூடியபோதும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உளவியல் நிபுணர்களிடமிருந்து இந்தச்சிறுவர்களுக்கு உதவக்கூடிய சிகிச்சை முறைகள் பற்றிய ஆவணங்களைப் பெற்று ஈழத்திலுள்ள உளவியல் நிபுணர்களுக்கு வழங்குவதன் மூலம் அங்குள்ள உளவியல் நிபுணர்களை ஊக்குவிக்கலாம்.அரசாங்க உதவிகளும் தேவையான மூலங்களும் (resources ) ம் இல்லாதபோது மாற்றுவழிகளைக் கண்டறியவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். மருந்துகளை விட இந்தச் சிறுவர்களுக்கு அத்தியாவசியமானது அன்பும் அரவணைப்பும்தான்.எனவே ஆதரவில்லாத குழந்தைகளுக்கு அதை வழங்குவதன் மூலம் அவர்களை உளவியல் தாக்கங்களிலிருந்து மெதுவாக மீட்டெடுக்கலாம்.குழந்தை இல்லாதவர்கள் ஆதரவு வேண்டிநிற்கும் இந்தச்சிறார்களுக்கு பெற்றோராகலாம். முகம்தெரியாத ஒரு குழந்தையை மானசீகமாகப் பிள்ளையாக தம்பியாக தங்கையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான பண உதவியை வழங்குவதே இப்போது நாம் செய்யக்கூடியதாகவுள்ளது.மாதமொரு அன்பான விசாரிப்புகள் அக்கறை அடங்கிய ஒரு கடிதம் ஒரு தொலைபேசி அழைப்பு சாப்பிட்டியா என்ற ஒரு சொல் இவைகளே அவர்களின் மனச்சிதைவைப் பாதியாகக் குறைத்துவிடும்.

பொதுவாக மனவழுத்தம் மனவிறுக்கம் போன்றவை தொடக்கம் பாரிய மனச்சிதைவால் அவஸ்தைப்படுபவர்களுக்கென்று Behavioral therapy, Cognitive therapy, psychoanalytic therapy, psychodynamic therapy இப்படிப்பலவிதமான Psychotherapy (talk therapy) பல தெரப்பிகளுண்டு. ஆனால் இவையெல்லாம் அநேகமாக என்னகாரணத்தால் உளவியல் பாதிப்பு ஏற்பட்டதென்று கண்டறிந்து அதறக்கு ஏற்றமுறையில் ஆலோசனை வழங்கப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் போரும் போரால் வந்த இழப்புகளும் பயமும் தான் மனச்சிதைவுகளுக்கு காரணம்.இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் சிரமங்களை தெளிவாக எதிர்நோக்க ஊாக்கமளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வியில் ஆர்வத்தைத் தூண்டவேண்டும். மனவழுத்தத்துக்குள்ளான பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் இனங்காணப்பட்டு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்த இசை பிடித்த விளையாட்டு உணவு வழங்கப்பட்டு மனதில் மாறுதலை ஏற்படுத்த வேண்டும். கிபிர் சத்தம் கேட்டாலே செஞ்சோலையில் இன்னும் சில குழந்தைகள் மயக்கமடைகிறார்களாம் இப்படியான பயம் போக்கப்படவேண்டும். இதெல்லாம் செய்து முடிக்க நிறைய நேரமும் ஆளணியும் தேவை.
ஈழத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய உளவியல் நிபுணர்கள் (ஆலோசகளர்கள்) தான் இருக்கிறார்கள். தற்போது யுத்தத்துக்குள் வாழப்பழகியிருக்கும் மக்களில் அநேகமாக எல்லாரும் ஏதோவொரு விதத்தில் மனச்சிதைவுக்குள்ளாகித்தானிருப்பார்கள். ஒரு சில உளவியல் ஆலோசகர்களால் எல்லோருக்கும் ஆலோசனை வழங்கமுடியாது. ஏற்கனவே வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறை, உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கான தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் மனச்சிதைவால் அல்லல்படும் மக்கள் வைத்தியசாலைகளுக்கு வருவது அதிகரித்துள்ளதென்று அங்குள்ள வைத்தியர்கள் கூறுகிறார்கள். இந்நிலமையில் எங்களால் செய்யக்கூடியது என்ன?
தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உளவியல் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து எப்படி உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டோருக்கு உதவலாம் என்ற திட்டங்களை வகுத்துவிட்டுப் பின்னர் குழுக்களாகப் பிரிந்து குடும்பம் குடும்பமாகவும் தேவைப்படின் தனித்தனியாகவும் ஆலோசனை வழங்கலாம். மருந்துகளை மட்டும் நம்பியிராமல் ஒருவரையொருவர் எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்பது பற்றிக் கலந்துரையாடலாம். முக்கியமாக அன்பு ,அடையாளம் , ஆதரவு, வாழ்க்கைக்கான அர்த்தம், அங்கீகாரம், தங்களுக்காக அழ சிரிக்க யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை,சிந்தனைகளைப் புதுப்பிக்க தளம் இவையெல்லாம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

போரின் விளைவுகளில் ஒன்றான இந்த உளவியல் தாக்கம் ஒரு சங்கிலித்தொடர் போன்றது. அது குழந்தைகளை மட்டுமன்றி வளர்ந்தோர்களையும் இறுகக் கட்டியே வைத்திருக்கிறது.ஆண்கள் பெண்கள் முதியவர்கள் என எல்லோரையும்தான் பாதிக்கின்றது. கடல்கடந்து புலம்பெயர்ந்து வாழும் எங்களையும்தான் பிணைத்துவைத்திருக்கிறது. அடிப்படை வசதிகளாக உணவு உடை உறையுள் இன்றி நம்முறவினர்களும் தெரிந்தவர்களும் இறந்துபோக விட்டுவிட்டு எங்களால் நிம்மதியாக இருக்கமுடியுமா? குற்றஉணர்வு கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடாது? சிந்திப்போம்.செயற்படுவோம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து மனிதராக வாழ முற்படுவோம்.

வளரும் பயிர்கள் வாடாதிருக்க
உளமும் உடலும் நோகாதிருக்க
உறவாய் உரமாய் நாமிருப்போம்


** இது பழைய பதிவுதான். தத்தக்க பித்தக்காவில் வாசித்திருப்பீர்கள் சிலர். மணிமேகலாப்பாட்டியின் பதிவைப் பார்த்ததும் இங்கு போடணும் என்று நினைச்சன்.**
Author: யசோதா.பத்மநாதன்
•6:29 PM
என் பள்ளிப் பருவங்களை - கிட்டத் தட்ட 10, 12 வருடங்களை வன்னிக் கிராமமொன்றில் களி(ழி)த்திருக்கிறேன்.

இப்போது கிட்டத் தட்ட 15 வருடங்களின் பின் நினைத்துப் பார்க்கும் போது வன்னிப் பகுதி சிறுவர்கள் கூடுதலாக இயற்கையோடு அன்னியோன்யமாய் வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.குடிசை வீடுகளும் லாந்தர் விளக்குகளும் ரொட்டி சுடும் வாசமும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் நிறைந்தது அவர்களின் மாலை நேரம்.

சிறுமிகள் குண்டுமணி மரத்தைச் சுற்றிக் குண்டுமணி பொறுக்குவார்கள்.மருதோன்றி இலைகள் பறித்து அம்மியில் அரைத்து தேசிச் சாறு விட்டு நகம் சிவக்கும் அழகைக் காட்டி அதே மாதிரி வெகு சிரத்தையாகத் தம் தோழி மாருக்கும் போட்டு விடுவார்கள். சிறுவர்கள் காடுகளில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் பாலை மரம், வீர மரம், விளா மரங்களைச் சூழ்ந்திருப்பார்கள்.அது தான் அவர்களின் உச்ச பட்ச இயற்கையுடனான நட்பு.பள்ளிக்குப் போகாத மழை நாட்களில் குளத்தோர மரங்களில் ஏறி குளத்துக்குள் குதிப்பதும் அவிழ்ந்து விழும் அரைக் கால் சட்டைகளை ஒரு கையால் பிடித்தபடி ஒற்றைத் தடியில் ரின் மூடியைப் பொருத்தி அதைத் தள்ளிய படி வீதியால் ஓடுவதும் தான் அவர்களின் பெரும்பாலான பொழுது போக்கு.

ஒவ்வொரு பறவைகளின் குரல் ஒலிக்கும் போதும் அதற்குத் தமிழில் அர்த்தம் கற்பித்துக் கொள்வதில் இரு பாலாரும் வல்லவர்கள்.இரவு ஆளரவம் எல்லாம் அடங்கிய பிற்பாடு துல்லியமாய் கேட்கும் ஒரு பறவையின் தனித்துவமான குரல்.'வாடா பாப்பம்; கொட்டப் பாக்கு'என்பதாக இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.அது என்ன பறவை என்று இது வரை தெரியவில்லை.குயிலோடு தாமும் சேர்ந்து கூவுவார்கள். அது திருப்பிக் கூவினால் அது தான் அன்றய நாளுக்குரிய சிறுவர்களின் மகிழ்ச்சி.கரிக்குருவிகள்,புலுணிகள்,கிளிகள் போல வேறு பல பறவைகளும் அங்கிருந்தன.ஆனால் சிறுவர்கள் யாருமே அவற்றைப் பிடித்துக் கூட்டிலடைத்து வைத்ததில்லை. காணிகள் உழுகின்ற போது எங்கிருந்தோ வந்து சேரும் பலவகையான பெயர் தெரியாத பறவைகள்.

மயில்கள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளோடு வந்து தானியம் கொறிக்கும்.காலை நேரம் அவைகளின் பெரிய 'மாயோ மாயோ' என்ற குரல் பல வீடுகளுக்குத் துல்லியமாகக் கேட்கும். மிகவும் செழித்து வளர்ந்த ஆண்மயில்கள் பட்ட மரக் கிளைகளில் தம் தோகையைக் கீழே தொங்கப் போட்ட வாறு தன் நீலப் பட்டுக் கழுத்தைக் கம்பீரமாக நிமிர்த்தி தன் மஞ்சள் நிற அலகால் மாயோ என்று கத்துவதைப் பார்ப்பது கண்கொளாக் காட்சி. அதிலும் காலை நேரச் சூரியன் அதன் கழுத்தில் பட்டுத் தெறிக்கும் போது கிடைக்கும் வண்ண ஜாலங்கள் இன்னும் அழகு.



வன்னிப் பகுதியில் செம்பகம் என்று ஒரு பறவை அடிக்கடி வரும்.மண்ணிறமும் கறுப்பும் கலந்த நிறம் அதற்கு.அவை எங்கு வசிப்பன என்று தெரிவதில்லை.ஆனால் வீதியோர வேலிகள் மற்றும் அடர்ந்த சிறு மரக்கிளைகளில் வந்து அமர்ந்திருக்கும்.கூச்ச சுபாவம் கொண்டவை.சிறு பிள்ளைகள் அதனை எங்கேனும் கண்டால் உடனே "செம்பகமே செம்பகமே மாமி வாறா ஒழிச்சிரு" என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.(நானும் இப்படி சிறுவயதில் இப்படிப் பாடி இருக்கிறேன்.) அவை கால்களை மெல்ல மெல்ல அரக்கி மர இலைகளுக்குள் ஒழிந்து கொள்ளும்.ஆனால் பறந்து போய் விடாது.அது ஒழிவதைப் பார்ப்பதில் சிறுவர்களுக்கு பெரும் குதூகலம்.இது வன்னிச் சிறுவர்களிடம் காணப்பட்ட ஒரு தனித்துவ வழக்கென்றே நம்புகிறேன்.

காணிகள் எல்லாம் பெரிய பெரிய வளவுகளாக இருப்பதாலும் எல்லைகள் காட்டுப் புறங்களாக இருப்பதாலும் மான்களும் ஒன்றிரண்டு வந்து போகும்.யானைகள் வந்து தென்னைகளை முறித்துக் குருத்துக்களைச் சாப்பிட்டுப் போகும்.அதனால் தோட்டக் காரர்கள் மரங்களில் பரண் அமைத்துக் காவலிருப்பார்கள்.சில சிறுவர்களும் அடம் பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள்.பன்றி, மான் என்று வேட்டைகளுக்கும் செல்வார்கள்.


ஒரு முறை எங்கள் வீட்டு வளவுக்குள் - அது - வவுனியாவில் இருந்து 10 மைல் யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் இருந்தது. தென்னம் பிள்ளைகள் பல நட்டிருந்தோம்.அவற்றை யானைகள் வந்து சாப்பிட்டுச் சென்று விடுவது வழக்கு.அந்த நேரம் வவுனியா நகர் புறத்தில் பிரச்சினை காரணமாக என் சித்தி குடும்பத்தினர் நம்மோடு வந்து தங்கியிருந்தார்கள்.அவர்கள் நகர் புறத்தவர்கள்.இரவு எல்லோரும் படுத்து விட்டோம். நேரம் பருமட்டாக ஒரு 1 மணி 2மணியாக இருக்கலாம்.வீட்டின் பின் புறம் யானைகள் வந்து தென்னைகளை முறிக்கும் சத்தம் கேட்டது.அவற்றை விரட்டுவதற்கு கிராமத்தவர்கள் ஒரு உத்தி வைத்திருந்தார்கள். அது தென்னோலையில் செய்யப்பட்ட பந்தத்தால் தீப்பந்தத்தைக் காட்டியபடி கூ... என்று கூவிக்கொண்டு ஓடினால் அவை ஓடி விடும் என்பது தான் அது.

எனவே நாமும் எல்லோரும் எழும்பி (வவுனியாவில் இருந்து வந்த தம்பி, தங்கை உட்பட.எல்லோருக்கும் அப்போது பதின்ம வயது)தயாராகக் கட்டி வைத்திருந்த தீப்பந்தத்தை எரித்த படி நாம் எல்லோரும் கூ... என்ற படி ஓடி அவற்றை விரட்டி விட்டோம். பிறகு படுக்கைக்குப் போகும் போது என் தங்கை முறையான வவுனியாப் பட்டணக்காறி மகிழ்ச்சியும் சிரிப்பும் உற்சாகமுமாகச் சொன்னாள்.


"அக்கா, இது நல்ல முசுப்பாத்தியான உலகமா இருக்கு.":)

அப்படி இருந்தது வன்னிக் கிராமம் ஒன்றின் அன்றய சிறுவர்களின் வாழ்வியல்.

(படங்கள்:நன்றி - இணையம்)
Author: வந்தியத்தேவன்
•4:38 PM
வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது.



வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது.

"கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள்.

"உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "சரி சரி துரும்பைக் கவிழ்" என்றான்.

"டேய் அழகா நீதானே இறக்கம் நல்ல தாளாப் பார்த்து இறக்கு" மாறன்.

"நல்ல தாளோ, சரி இந்தா டயமண்ட் வீறு" என அழகன் டயமண்ட் ஜக்கை இறக்கினான்,

"நல்ல காலம் நானும் உந்த கோதாரி டயமண்ட்டில் தான் கேட்டனான் தப்பிட்டேன்" என்ற படி பிரபா டயமண்ட் மணலை இறக்கினான்.

"அடப்பாவி மணலை மட்டும் வைத்துக்கொண்டே கேட்டிருக்கின்றாய் தப்பிவிட்டாய்"

"உவன் ரவி நல்லா அடுக்குவான் ஆனால் ஒருநாளும் வெல்ல அடுக்குவதில்லை எதாவது ஒரு தாளை மாத்தி அடிக்கி குழப்பிபோடுவான்" என ரவியின் அடுக்கை குறை சொன்னான் சீலன்.

முதல் ஆட்டம் முடிந்தது, அழகன் கார்ட்சை புறிக்கத் தொடக்கினான். கடைசிக் கை போட்டதுதான் "மடக்கு" என்றான் பிரபா.

"ஆடத்தன் அவங்களைக்கு அணைஞ்சுபோச்சு, எங்கடை பக்கம் கலாவரை ஆனாலும் ஒருதனும் கேட்கவில்லை" சலிப்புடன் அடுக்கல் மன்னன் ரவி.

ரவி சொன்னது போல பிரபாவும் ஆடத்தன் வீறை மேசையில் ஓங்கி அடித்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த மாறன் ஆடத்தன் ஆசை இறக்கவும் பிரபா "கோட்"
என ஏனைய தாள்களை கோட்டடித்தான்.

இந்த முறை நீங்கள் மடக்கினாலும் அடுத்த முறை நான் கம்மாறீஸ் அடிக்கின்றேன் இது சீலன்.

டேய் நீ இனத்துக்கு இனம் போடுகின்ற சின்னபெடியன் கம்மாறிஸ் அடிக்கபோறீயோ என அவனை மாறன் நக்கலடித்தான்.

இப்படியே ஒருத்தரை ஒருதர் நக்கலடித்தபடி பெரிதாக அலாப்பல்கள் இல்லாமல் நிறைவடைந்தது.

சொல் விளக்கம் :

கடதாசிக் கூட்டம் :

கார்ட்ஸ் விளையாடுபவர்களை எங்கடை ஊரில் கடதாசிக் கூட்டம் என்பார்கள்.

கையள் :

கார்ட்ஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் நபரை கை என அழைப்பார்கள். உதாரணமாக "மச்சான் ஒரு கை குறையுது நீயும் வா" என்றால் ஒராள் குறைவாக உள்ளது என்பதாகும்.

கேள்வி :

விளையாட்டுத் தொடங்கும்போது கார்ட்சினை பங்கிட்டவருக்கு பக்கத்தில் இருப்பவர் பெரும்பாலும் இந்தக் கேள்வியுடன் தான் ஆரம்பிப்ப்பார். புள்ளிகள் அடிப்படையில் இது 50 (சாதாரண 50) ஆகும். இதன் ஆங்கிலப் பிரயோகம் தெரியவில்லை.

உதவி ;

கேள்வி கேட்டவரின் எதிரணி உறுப்பினர் (பெரும்பாலும் கேள்வி கேட்டவருக்கு அருகில் இருப்பவர்) கேட்பது இதன் பெறுமதி சாதாரண 60 புள்ளிகள் ஆகும்,

மேலே :
ஒருவர் தன்னால் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் தன் அணியைச் சேர்ந்த ஏனையவர்களிடம் விட்டுவிடுவது,

தாள் :

சீட்டு ஒன்றை தாள் என்பார்கள். உதாரணமாக நல்ல தாள் வாய்க்கவில்லை.

துரும்பு :

Trump பே துரும்பு எனப்படுகின்றது. துருப்புச் சீட்டின் மருவிய வடிவம் இந்த துரும்பாகும்.

வீறு : ஜாக்(Jacks).

மணல் : ஒன்பது (Nine)

ஆசு : Ace

ஆஸ் (Ace) என்பதன் மருவிய பதம்

அடுக்குதல் :

அடுக்குதல் என்பது சீட்டினை ஒருவிதமான வரிசைப்படுத்தலில் அடுக்குதல். ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தாள்கள் செல்லும், சிலவேளைகளில் அடுக்கு பிழைத்தால் தோல்வி தான்.

புறித்தல் :
சீட்டினை அனைத்து விளையாடும் உறுப்பினர்களிற்க்கும் பங்கிடுதல்.

மடக்கு :

ஒருவர் தன்னுடைய கையில் இருக்கும் தாள்கள் அனைத்தும் எதிரணி உறுப்பினர்களால் வெட்டமுடியாமல் விளையாடுவது.

கோட்(Coat) :

மடக்கியவர் கடைசியாக கோட் எனச் சொல்லி தன்னுடைய தாளை அல்லது தாள்களை இறக்கவேண்டும்.

ஆடத்தன் : Hearts

உவீத்தன் : Diamonds

கலாவரை : Clubs

ஸ்பேட் (Spades) அதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றது.

கம்மாறிஸ் : Caps

ஒரு அணியினருக்கு சகல தாள்களும் கிடைத்தால் கடைசியாக அடிப்பது கம்மாறீஸாகும்.

சில சொற்களின் ஆங்கிலச் சொற்கள் தெரியவில்லை. மேலதிக தகவல்களை கார்ட்ஸில் வித்துவம் கூடிய நண்பர்கள் சொல்லவும். இந்த 304 விட ரம்மி, 31 (முப்பத்தியொன்று), கழுதை, பிரிஜ்(Bridge) போன்ற ஏனைய கார்ஸ்ட் விளையாட்டுகளும் பிரபலம் வாய்ந்தவை.
Author: வந்தியத்தேவன்
•10:08 AM
இன்றி ஆடிப்பிறப்பு. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே" என்ற பாடலும் தான்.

ஆடிப்பிறப்பிற்க்கு வீடுகளில் இனிப்புக்கூழ் காய்ச்சுவார்கள். தூயாவின்ட குசினிக்கை இதன் செய்முறை இருக்கு. கொழுக்கட்டை அவிப்பார்கள். ஆடிகூழும் ஆடிக்கொழுக்கட்டையும் அவ்வளவு பேமஸ். தை மாதம் பிறப்பை தைப்பொங்கலாக கொண்டாடுகின்றோம், சித்திரை மாதப் பிறப்பை சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றோம். ஆனால் ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற கதை எனக்கு இன்னமும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லவும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை ஆடிமாதத்தில் எந்த நல்லகாரியத்தையும் தொடங்கமாட்டார்கள். இந்தியாவில் இளம்ஜோடிகளை பிரித்துவைத்துவிடுவார்கள். எங்கட நாட்டிலை அந்தக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள்.



ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் புழக்கத்தில் இருக்கு. இதன் அர்த்தம் ஆடியிலை விதை விதைத்தால் விளைச்சல் அதிகம் என்பதாகும். இப்படி ஆடி என்ற சொல் எம்மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருந்தாலும் பின்னாளில் ஆடி என்றால் ஆடிக்கலவரமே முதலில் ஞாபகத்திற்க்கு வரும். ஆகவே தற்கால ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியாகவும் ஆடி முக்கியம் பெறுகின்றது.



இவற்றைவிட ஆடியில் நல்லூர், கதிர்காமம் உட்பட பல கோயில்களில் திருவிழா தொடங்கும்.

ஆடி அமாவாசை

ஒவ்வொருமாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு தனிச் சிறப்பு. பெரும்பாலான இந்துக்கள் தங்கள் முன்னோருக்கு பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆடி அமாவாசையாகும்.

எங்கள் முன்னோர்களான பிதிர்களை வழிபட்டால் தோசங்கள் நீங்கி நல் வாழ்வு பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்தில் கீரிமலை நகுலேஸ்வரம், மட்டக்களப்பில் அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயில், திருகோணமலையில் கோணேசர் கோயில் தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடி மக்கள் தங்கள் பிதிர்களுக்கு நன்றி செலுத்துவதுடன் பாவவிமோசனமும் அடைகின்றார்கள் என்பது ஐதீகம்.

இன்று (17.07.2010) ஆடிப் பிறப்பு , (09.08.2010) ஆடி அமாவாசை.

இது ஒரு மீள்பதிவு.
படங்கள் உதவி இணையம்
Author: கானா பிரபா
•2:44 AM
நாளை ஆடிப்பிறப்புப் பெருநாளாகும், ஈழத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. அன்று ஒடியற்கூழ் வைத்து கொழுக்கட்டை செய்து ஆண்டவனுக்குப் படைப்பதோடு உறவினருக்கும் கொடுத்து மகிழ்வோம். இந்த ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் இப்படிப் பாடுகின்றார்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!



ஆசுகவி கல்லடி வேலனின் மேற்குறித்த "கொண்டாடினான் ஒடியற்கூழ்" கதைப் பகுதி இலஙகைப் பாட நூலாக்கத்தில் ஆண்டு 4 வகுப்பு பாடமாக இருக்கின்றது. ஆனால் இறுதியில் புலவர் பாடும் பாடல் மட்டும் அப்புத்தகத்தில் இல்லை. எனவே ஆசுகவியின் பேத்தியார் திருமதி ராணி தங்கராஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பாடலைப் பெற்றேன். மேலும், திருமதி ராணி தங்கராஜா அவர்கள் கடந்த 2004, மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் ஒரு அமர்வாக இடம்பெற்ற ஒடியற் கூழ்விருந்தில் கூழின் சிறப்பையும் ஆசுகவியின் கூழ் குறித்த போற்றுதலையும் நினைவு கூர்ந்து தான் வடித்த கவிதையையும் குறிப்பிட்டார். அதை ஒலிவடிவில் அப்படியே ஒலிப்பதிவு செய்து இங்கே தருகின்றேன். திருமதி ராணி தங்கராஜாவும் தன் பாட்டனார் வழியில் கவிபடைத்தும் இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். இதோ அவர் எழுதிய கூழ்க்கவி எழுத்திலும், ஒலியிலும்;

PRABU.mp3



ஒன்று கூடி ஒடியற்கூழ் சுவைப்போம்
வளம் நிறைந்து வாழ்ந்திருந்த
மண்விட்டுப் புலம்பெயர்ந்தோம்.
முன்னதை இழந்தோம்.

எங்கு தான் சென்றாலும் எதைத்தான் இழந்தாலும்
தங்கத் தமிழ் மறவா தனிக்குணத்தை இழந்தோமா?
சென்ற இடமெல்லாம் செந்தமிழை மேம்படுத்தும்
சிந்தை உடையோராய் சீவித்துப் பண் பாடும்
என்றும் அழியாத இன் தமிழும் கலைகளும்
இன்னும் மேலோங்க உழைக்கின்றார் நம் தமிழர்.

ஈழத்தில் தமிழ் வளர்த்தோர், இனிய தமிழ்க் கவி புனைந்தோர்
ஞாலத்தில் உயர்ந்து நின்றார் நமக்கெல்லாம் பெருமை தந்தார்.
கூழுக்குக் கவி பாடும் புலவோர்கள் களை திருந்த
கூழுக்கு நன்றி சொன்ன புலவர் நீரும் பிள்ளை அன்றோ

ஆசுகவி கல்லடியார் வாய்திறந்தால்
நூறு கவி வீசி வரும் தென்றலாய் அவர் ஒருவரே அன்றோ
வாசமிகு ஒடியற்கூழ் வாழ்கவென்று நன்றி சொல்லி
பேசு தமிழில் கவிதை பிறப்பித்தார், பெருமை சேர்த்தார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தை மறவாமல்
நெடிததுயர்ந்த பனை மரத்தின் நினைவழிந்து போகாமல்
ஒடியற்கூழ் காய்ச்சுதற்கும் ஒன்று கூடிச் சுவைப்பதற்கும்
முடிவு செய்தோர் வாழ்கவென்று முக்காலும் நன்றி சொல்வேன்.
மெல்பேர்னில் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர் மாநாட்டில்
கல்லடியார் புகைப்படத்தைக் காட்சி வைத்துப் பெருமை சேர்த்த
நல்லவர்கள் எல்லோர்க்கும் நன்றியுடன் வாழ்த்துரைத்து
கல்லடியார் பேர்த்தி நான் கை கூப்பி அமைகின்றேன்.

ஆடிக்கூழ், கொழுக்கட்டை படங்கள் நன்றி : துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
Author: வர்மா
•8:31 AM

""அம்மா பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. என்ன சாப்பாடு?''

""காலைப் பலகாரம்ஒன்றும் தேடவில்லை. மாமணல் ஒன்டும் இல்ல. பாண்வாங்கி வச்சிருக்கிறன் . இரவுக்கு இடியப்பம் அவிச்சுத் தாற‌ன்.''

""இடியப்பத்துக்கு என்ன அனுமானம்.?''
""சொதி வைச்சுத்தாறன்.''

வடமாராச்சியில் அதிகமாக நடை பெறும் சம்பாசனை இது.. காலையில் அல்லது இரவில் சாப்பிடும் தோசை, இடியப்பம், பிட்டு போன்றவற்றை பொதுவாகப் பலகாரம் என்பார்கள். அவற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் சம்பல், சொதி, சாம்பார் போன்றவற்றை அனுமானம் என்பார்கள்.

திருமணவைபவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு பலகாரம் சுடுவதற்கு வீட்டிற்கு வரும்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுப்பார்கள். கொழும்பில் உள்ள உறவினர்களுக்கும் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கும் பலகாரம் அனுப்புவார்க்ள.

திருமண வைபவத்தில் பரிமாறப்படும் அரியதரம், முறுக்கு, லட்டு போன்றவற்றையும் பொதுவாக பலகாரம் என்பார்கள்.

உறவினர்களின், நண்பர்களின் வீட்டுக்குப்போகும் போது கடையில் பலகாரம் வேண்டுவோம் என்பார்கள். வடை, சுசியம், வாய்ப்பன் போன்றவற்றையும் பலகாரம் என்பார்கள். கடையில் வாங்கும் தோசை, இடியப்பம், இட்டலி என்பவற்றை கடையப்பம் என்றும் கூறுவார்கள்.

படஉதவி எம்.எஸ்.சலீம்
Author: ஃபஹீமாஜஹான்
•3:26 AM

(இது குருநாகல் பிரதேச தென்னந்தோப்பு ஒன்று)



11.

தென்னையோடு தொடர்புடைய பேச்சு வழக்குச் சொற்கள்:

கலட்டிக்காய்
குரும்பை
குரும்பட்டி
தென்னம்பூரி
புள்ளப் பால
Bபோலாத்த - பூக்கமாறு
முகுல்
ஓல நெய்தல்
குருமிணியான்
அடி மட்டை
உரி மட்டை
ஓலக் கூந்தல்
சூள்
bபொட


1. தேங்காய்க்கும் இளநீருக்கும் இடைப்பட்ட பருவம் - கலட்டிக்காய்
2.இளநீர் - குரும்பை
3.இளநீரிலும் சிறிய பருவம்- குரும்பட்டி
4. தென்னம் பூ- தென்னம்பூரி
5.பாளை மரத்தோடு பொருந்தும் பகுதியில் பாளையோடு ஒட்டியிருக்கும் பகுதி (பாளையை விட மெல்லியது பன்னாடையை விட கடினமானது) - புள்ளப் பால
6.தென்னங்குலையில் தேங்காய்கள் வீழ்ந்த பின்னர் எஞ்சும் பகுதி- Bபோலாத்த அல்லது பூக்கமாறு
7.தேங்காய், குலையுடன் பொருந்தும் காம்புப் பகுதி- முகுல்
8.கிடுகு பின்னுதல்- ஓலை நெய்தல்
9. தென்னை நீள் மூஞ்சி வண்டு - குருமிணியான் (சிங்களத்திலிருந்து மருவியது)
10. தென்னை ஓலையின் மட்டை- அடி மட்டை
11. தேங்காய் உரித்தபின் வரும் தேங்காய் மட்டை- உரி மட்டை
12.ஓலையின் நுனிப் பகுதி - ஓலைக் கூந்தல்
13. ஓலையின் நுனிப் பகுதியைச் சுற்றிக் கட்டி பற்ற வைக்கும் தீப்பந்தம்- சூள்
.14.தென்னையின் கழுத்துப் பகுதி- bபொட* (சிங்களச் சொல்)


பொறுமை உள்ளவர்கள்,
கோபப்படாதவர்கள்,
சகிப்புத்தன்மையுள்ளவர்கள் மாத்திரம்
தொடர்ந்து வாசிக்கலாம்.

தென்ன மறம் bபுளுந்தா இல்லாட்டி வெட்டினா அதுற ஈந்து தென்னங் குருத்த வெட்டி எடுப்பாங்க.அதுற குருத்து நள்ள ருசியா ஈக்கும்.அத மிச்சமாத் திண்டா சத்தி போகும் இல்லாட்டி தள சுத்தும்.

சின்ன வயசில அதுக்கு நான் நள்ள புரியம். எப்பிடியானும் சறி நானாட்ட செல்லி வெட்றது தான்.

என்னத்த? இத வாசிக்கிற ஒங்குளுக்கு தள சுத்துறா?
ப்ரகாஷ் தான் எளுதச் சென்னாருண்டு இப்பிடியா எளுதுற. என்னத்த பிச்சா?

மேலே உள்ள பகுதியை வாசித்து நாவு சுளுக்கியிருந்தால் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல. என்னை இங்கே எழுதக் கூப்பிட்டவர்களே அதற்குப் பொறுப்பாவார்கள்.


தென்னை மரங்கள் வீழ்ந்தால் அல்லது வெட்டினால் ஓலைகள் பொருந்தியிருக்கும் நுனிப் பகுதியை வெட்டி அதனுள்ளே இருக்கும் இளம் குருத்துப் பகுதியை வேறாக்கி எடுப்பார்கள்.தெனனையின் எல்லா பச்சை மட்டைகளையும் வெட்டிய பின்னரே உள்ளே இருக்கும் வெண்ணிற இளம் குருத்துப் பகுதியை வேறாக்கி எடுக்க முடியும்.அந்தப் பகுதி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.அதிகம் சாப்பிட்டால் வாந்தி போகும்.(அதனையும் bபொட என்றே அழைப்பர்.)

சிறிய வயதில் அதைச் சாப்பிடுவதில் எனக்கும் விருப்பமிருந்தது.நான் அண்ணாவை (பெரியம்மாவின் மகன்- சர்தார் நானா) நச்சரித்துக் கொண்டே இருப்பேன்.
அண்ணாவின் கையில் தொங்கிக் கொண்டு திரிவேன்.
(அண்ணா 10 ,11ம் வகுப்புகளில் படிக்கும் பருவம்: இளமைக்கால வே.பிரபாகரன் அவர்களின் சாயலில் இருப்பான். உயரம் பருமன் எல்லாமும் தான்)

"சர்தார் நானா வெட்டித்தாங்க".
"சர்தார் நானா.... வெட்டித்தாங்க...".
"சர்தார் நானா..... வெட்டித்தா...ங்..க"

(போகப்போக தொனியும் வேறுபடும்)

வீட்டில் அண்ணாவுக்கு ஏச்சுக் கிடைக்கும் என்பதால் அண்ணா உடனடியாக வெட்டித் தரமாட்டான்.

(அதைச் சாப்பிட்டால் உணவு சாப்பிட மாட்டேன். அல்லது வாந்தி போகும். இவை நிகழ்ந்தால் அண்ணாவுக்கு ஏச்சு விழும்.சிறிய வயதில் எனக்குச் சாப்பாட்டோடும் மருந்தோடும் எட்டாப்பகை இருந்தது. இப்பமட்டும் என்னவாம் என்று யாரோ சொல்வது கேட்கிறது)

அண்ணா வெட்டித்தராமல் ஒளிந்து திரிய எனது மரியாதையும் கூடிப்போகும்.

" சர்தார் நானா வெட்டித்தாடா...."
"டேய்.... வெட்டித் தாடா "

பிறகு பெரியம்மாவிடம் போய் அழுது முறையிட்டு எப்படியாவது அண்ணாவைப் பாடாய்ப் படுத்தி வெட்டி எடுத்த பின்னர் அதில் சிறிய ஒரு துண்டைத் தான் சாப்பிட்டிருப்பேன்.... ..
பிறகு என்ன நடந்திருக்கும் என்று யாரும் கேட்க வேண்டாம்.....
Author: ஃபஹீமாஜஹான்
•5:07 AM



யாழ்ப்பாணத்தவர்கள் தான் சரியாகத் தமிழைப் பேசுவதாக நினைத்துக் கொண்டிருப்பதைப்போலவே எங்கள் ஊர் மக்களும் தாங்கள் தான் சரியான தமிழைப்பேசுவதாக நினைத்து வெளியூர் மக்களின் தமிழை நையாண்டி செய்து கொண்டிருப்பவர்கள்.(எங்கள் பிரதேசம் எனும்போது வடமேல்மாகாணம், குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில், ஹிரியால தேர்தல் தொகுதி மக்களையே குறிப்பிடுகிறேன்.)இதிலிருக்கும் முரண்நகை என்னவென்றால் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூழலில் வாழும் இம் மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்புக்கள் சரியான தமிழ் உச்சரிப்புக்களாக இருப்பதில்லை.(இந்த அழகில் தான் தமிழைச் சரியாகப் பேசுகிறோம் என்று மற்ற மக்களைப் பார்த்து நையாண்டி செய்கின்றனர்)

ர,ண,ள,ழ உச்சரிப்புகள் இவர்களது சொல்லகராதியில் இல்லை.

ஊர் மொழியில் இதனை எழுதினேன் என்றால் இதன்பிறகு எனது பெயரைப் பார்த்தாலே ஈழத்து முற்றத்திலுள்ளவர்கள் ஓடத்தொடங்கிவிடுவார்கள் என்பதால் சில சொற்களை மாத்திரம் தருகிறேன்.

ஒவ்வொரு சொற்களாகப் பார்ப்போம்.

1.என்ன? - என்த?, ஏத்த,? (* இந்தச் சொல்லையே வேறு பிரதேசங்களில் என்தேன்? என்னதேன்? ஏதேன்? எனா? என்றெல்லாம் கூறுவர்)

2. ஏன்? - ஏ? எய்யா?

3. நுளம்பு - நெலும்பு

4. மரம் - மறம்

5. மழை - மல

6.தேநீர்- தேத்தண்ணி (இதே சொல் கிழக்கில் "தேயில குடிப்பம்" )

7.அவர் உன்னை வரச் சொன்னார்- அவறு ஒன்ன வறட்டாம் - அவறு ஒன்ன வறச் சென்னார்

8.மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து

9. ஆற்றில் குளிக்கப் போவோம்- ஆத்துக்கு முழுக பொம்.

10. எருமை மாடு - கிடாமாடு

இதற்கு மேல் எழுதினால் என்னிடமுள்ள கொஞ்சத் தமிழ் சொற்களும் ஆபத்தில் வீழ்ந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(கானா பிரபாவின் நீண்ட நாள் வேண்டுகோள் இன்று நிறைவேறுகிறது)
Author: தமிழ் மதுரம்
•7:07 PM
’என்ன சின்னாச்சி, உன்ரை பேரன் சாப்பிட மனமில்லாதவன் போல எதைக் குடுத்தாலும் வேண்டாம் வேண்டாம் என்கிறான். என்ன விசயம்?
’’அதடி பிள்ளை உவனை முந்த நாள் உந்தக் ஆறுமுகத்தாற்றை பொட்டையின்ரை கலியாணத்துக்கெல்லே கூட்டிக் கொண்டு போனனாங்கள். அவன் தனக்குப் பருப்புக் கறியும் சோறும் நல்ல விருப்பம் என்டு, போட்டு ஒரு பிடியெல்லே பிடிச்சவன். அது தான் ஆரோ நாவூறு கொண்டு போட்டினம் போல.
’’சரி சும்மா வளவளவெண்டு கதைக்கிறதை விட்டிட்டு பொழுது பட முதல் ஓடிப் போய் வேப்பமிலையும், செத்தல் மிளகாயும், உப்பும் எடுத்துக் கொண்டுவா! உவனுக்கு ஒருக்கால் தடவிப் போடுவம். பிறகு இரவுச் சாப்பாடு சாப்பிடும் போது ஞாபகப்படுத்தடி பிள்ளை, ஒருக்கா தோண்டியும் கொட்டுவம்.


மேற்படி உரையாடலின் மூலம் நான் சொல்லவருவது என்னவென்று புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தடவிப் போடுதல் என்றால் என்ன? ஊரில் வடிவான பிள்ளையள் என்றால், தன்ரை பிள்ளையின் அதீத சுட்டித்தனச் செயற்பாட்டால் யாராவது நாவூறு கொண்டு போட்டார்கள் என்ற நினைப்பில் தன் பிள்ளையின் நாவூற்றினை/ கண்ணூற்றினை அகற்ற வேண்டும் நோக்கில் ‘உப்பு, செத்தல் மிளகாய், வேப்பமிலை’ இந்த மூன்றையும் இணைத்து அங்காலை திரும்பு, இங்காலை திரும்பு என்று சொல்லி உடம்பெல்லாம் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தடவிப் போட்டு அப்பிடியே நீ இந்தப் பக்கம் பார்க்காதை என்று சொல்லி ‘’தூ... தூ... தூ.. என்று மூன்று தரம் துப்பிப் போட்டு நெருப்பினுள்/ அடுப்பினுள் போடுவார்கள்.


நெருப்பினுள் போடும் போது சின்னச் சின்ன வெடிச்சத்தோடை அந்த உப்பு, வேப்பமிலை, செத்தல் மிளகாய் வெடிச்சு எரியும், நிறைய நெரம் வெடிச்செரிந்தால் நிறைய நாவூறு என்று சொல்லுவார்கள். இப்பிடியான விசயம் நடக்கிற நேரம் ‘ நான் படிச்ச விஞ்ஞானத்தின் படி உப்பை நெருப்புக்கை போட்டால் வெடிக்கும் தானே என்று நான் ஒருவரிடம் கேட்டு விட்டேன். பிறகு நாவூறு எரியுதென்று சும்மா ‘’பேக்காட்டல் விடுறீங்களோ?
உனக்கு விசயம் விளங்காது. நீ சின்னப் பொடியன். சொல்லுறதைக் கேள் என்று அதட்டிப் போட்டார்கள். (இது ஒரு மூட நம்பிக்கை தானே???)


இந்தப் பழக்கம் இன்றும் எமது ஈழத்தவர்கள் மத்தியிலே இருக்கிறது. ஒரு சிலர் இந்த உப்பு செத்தல் மிளகாய், வேப்பிலை போன்றவற்றால் தடவிப் போட்டு அடுப்பிற்குள், நெருப்பினுள் போடுவார்கள். வன்னிப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த மூன்று பொருட்களினாலும் தடவிப் போட்டுக் கிணற்றினுள் போடுவார்கள்.


இதிலை இரண்டு முறைகளுமே ஈழத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிற பாட்டிமாரிடம் வழக்கத்தில் உள்ளன.

இனித் தோண்டிக் கொட்டுதல் பற்றிப் பார்ப்போம்: இந்தக் தோண்டிக் கொட்டுதலினை ‘சாப்பிட மனமில்லாது ஒருவர் அடம் பிடிக்கும் போது செய்வார்கள். உணவினை எடுத்து ஒரு பிடி பிடித்து அவரின் வாயிற்குள் உண்ணக் கொடுத்து, அந்தப் உணவினை அப்படியே நெருப்பினுள்/அடுப்பினுள் துப்பச் சொல்லுவார்கள். இப்படி மூன்று முறை நாவுறு கழியட்டும் என்று சொல்லிச் செய்வார்கள். இறுதியாக ஒரு சொட்டுத் தண்ணியும் கொடுத்து அப்பிடியே அதனையும் துப்பச் சொல்லுவார்கள்.


இப்பத் தான் நாவூறு கழிச்சிருக்கிறம். கொஞ்ச நேரம் பொறுத்துச் சாப்பிடலாம் என்று சொல்லித் தான் சாப்பாடு கொடுப்பார்கள்.



இம் முறைகள் இரண்டும் ஈழத்தில் இற்றைவரை முதியவர்கள் வாயிலாக வழக்கத்திலுள்ளன.
இது பற்றி மேலதிக விடயங்களை யாராவது அறிந்திருந்தால் சொல்லுங்கோ.


இனி பொருள் விளங்காத ஒரு சில நண்பர்களுக்காகப் பொருள் விளக்கங்கள்.



*நாவூறு கொண்டு போட்டீனம்: ஊர் கண்ணு பட்டுப் போச்சு.
*ஒரு பிடியெல்லே பிடிச்சவன்: ஒரு பிடி பிடித்தல் என்பது நல்லா ஆசையாக விடாமல் மூச்சு வாங்கப் போட்டுச் சாப்பிடுவது/ உணவு உண்பதனைக் குறிக்கும்.


*வளவளவெண்டு கதைக்கிறது: ஓயாமல் கதைத்தல், தொடர்ச்சியாக உரையாடுதல்.


*பொழுது பட முதல்: இருள்வதற்கு முன்/ அந்தி சாய முதல்.

*தடவிப் போடுதல்: திருஷ்டி கழித்தல்/ கண்ணூற்றினை அகற்றுவதற்குச் செய்யப்படும் ஒரு வகை செயற்பாடு.


தோண்டியும் கொட்டுதல்: உணவு உண்ணுதலின் போது காணப்படும் நாவூற்றினை அகற்றச் செய்யும் முறை.


*பேக்காட்டல்: ஏமாற்றுதல்/ பூச்சாண்டி காட்டுதல்/ சுத்துமாத்துச் செய்தல்.


*அடுப்பு: எங்கடை ஊரிலை விறகின் மூலம் வீட்டிற்குள்/ சமையலறையில் உணவினைச் சமைக்கும் இடத்தினை அடுப்படி/ அடுப்புப் போட்டு என்று சொல்லுவார்கள்.. இப்போதெல்லாம் நவீன பெயர்களிலை இதனை அழைக்கத் தொடங்கி விட்டார்கள்.


என்னை இப் பதிவினை எழுதத் தூண்டிய நண்பர் கானாபிரபாவின் ’’கண்ணூறு படப்போகுது, நாவூறு கழிப்பம்....! பதிவினைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
Author: Pragash
•11:48 AM
தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான மின்சார வெளிச்சம் இல்லாத அன்றைய நாட்களில் வீடுகளிற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தவை அரிக்கன் லாம்புகளும், சிமினி விளக்குகளும், ஜாம் போத்தல் விளக்குகளும், மெழுகுதிரிகளும் சில குப்பி விளக்குகளும் தான் ஒவ்வொரு வீடுகளிலும் சிமிட்டி சிமிட்டி இருளை விரட்டிக்கொண்டிருந்தன. இந்த விளக்குகளிற்கு எல்லாம் ஆதார சுருதி இந்த மண்ணெண்ணெய். அன்று இருந்த பொருளாதார நிலைமையில் நிவாரணத்திற்கு சங்கங்களில் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ கடைகளில் கூட தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. 

எங்கள் வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு ஒன்றும், பித்தளையில் செய்த திரி விளக்கு ஒன்றும், ஜாம் போத்தல் விளக்கொன்றுடனும் தான் பொழுது இருட்டியதில் இருந்து படுக்கைக்கு போகும் வரையான சகல கடமைகளும் இந்த மூன்று விளக்குகளுடனுமே நடந்தேறும். இதில் ஜாம் போத்தல் விளக்கு மட்டும் எங்களுடன் விடியும் வரைக்கும் துணையிருக்கும். அது தான் எங்களுக்கு விடிவிளக்கு. மறுநாள் பள்ளிக்கூடத்தில் கூட எமது பாடப்புத்தகங்களை புரட்டும் போது அதில் கூட மண்ணெண்ணெய் மணம் வீசும் அளவிற்கு மண்ணெண்ணெய் எமது வாழ்வுடன் ஒன்றிப்போனது. 


பின்னூட்டங்களை பார்த்த பின்பு ஒரு பின்குறிப்பு: ஜாம் போத்தல் விளக்கு என்றால் என்ன என்பது பற்றி கேட்கப்போகும் தலைமுறைக்காக கீழே உள்ள படம். 



ஜாம் போத்தல் விளக்கு என பெயர் வந்த காரணம், முன்னர் தக்காளி ஜாம், விளாம்பழ ஜாம் அடைத்து வரும் போத்தல்களிலேயே இது தயாரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் கை கொடுக்கும் சிக்கன விளக்காக பயன்பட்டது. கீழே அனா பின்னூட்டத்திலேயே ஜாம் போத்தல் விளக்கை கண் முன்னே கொண்டுவந்துள்ளார். இந்த பதிவிலும்  இதை பற்றி தரப்பட்டுள்ளது.
Author: வர்மா
•2:20 AM
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் வடமராச்சிக்கு மாற்றலாகிச் சென்றார். அரசாங்க உயரதிகாரியான அவர் அனைவரிடமும் சகஜமாக பழகுவார். அவருடைய சகோதரி இலண்டனில் வசிக்கிறார். லண்டனில் வசிக்கும் தனது சகோதரிக்கு உணவுப்பொருட்களை அடிக்கடி அனுப்புவார்.
“லண்டனில் தங்கச்சி இருக்கிறா லண்டனுக்கு அனுப்புறதுக்கு இங்கை நல்ல சாப்பாட்டு சாமான் என்ன கிடைக்கும்” என்று வடமராச்சி அலுவலகத்திலுள்ள நண்பரிடம் கேட்டார்.
“புண்ணாக்கு” என்று வடமராச்சியைச் சேர்ந்த நபர் பக்கெ பதில் கூறினார். யாழ்ப்பாண அதிகாரி திகைத்தவிட்டார். அவருடைய திகைப்பைப் பொருட்படுத்தாத வடமராச்சி நண்பர் தொடர்ந்தார்.
“புண்ணாக்கு உடம்புக்கு நல்லது. பொலிகண்டி, வல்வெட்டித்துறையில் சொன்னால் கையால இடிச்சுத் தருவார்கள் நாங்களும் புண்ணாக்கைத்தான் அனுப்புகிறோம்” என்றார்.
யாழ்ப்பாண அதிகாரியின் திகைப்பை கொஞ்சநேரம் ரசித்த வடமராச்சி நண்பர். “எள்ளுப்பாகை நாங்கள் எள்ளு புண்ணாக்கு என்போம் சிலவேளை புண்ணாக்கு என்றும் சொல்வோம்” என்றார். கையால் இடித்த புண்ணாக்கு கடையில் வாங்குவதை விட சுவையாக இருக்கும். நீங்கள் வடமராச்சிக்கு போனால் புண்ணாக்கு வாங்க மறந்து போகாதையுங்கோ.

சகஜம்---------------------------------ஏற்றதாழ்வு இன்றிப் பழகுவது
பக்கெனபதில்--------------------உடனடியாக பதில்
கையால் இடிச்ச-------------உரலில் போட்டு உலக்கையால் இடிப்பது
Author: M.Rishan Shareef
•6:18 PM
காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும் எட்டு ஈழத்து நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.


இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் திரு.கானா பிரபாவுக்கு வழங்கிய அறிமுகம் கீழே...